சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத்., மரியம் ஜார்ஜ், சாய் தீனா மற்றும் பலர் நடிப்பில் ரத்னகுமார் எழுதி இயக்கி இருக்கும் படம் .
அமேசான் மழைக்காடுகள் பகுதியில் உள்ள வெனிசுலா பகுதியில் அழிக்கப்பட்ட ஓர் இனக் குழுவில் பிறந்து, தாய்மொழியை பேசவே ஆள் இல்லாத நிலையில் பதிமூன்று மொழிகளைக் கற்று தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் நாட்டில் இருப்பிடம் கொண்டு , வாழ்க்கை முழுக்க தேடல் காரணமாக google என்ற பட்டப் பெயரை சுமந்து அதன் மரு உ மொழியாக குலு குலு என்ற பட்டப் பெயர் பெற்ற ஒரு நடுத்தர வயது இளைஞன் (சந்தானம்).இரண்டாவது மனைவிக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் மூத்த மனைவியின் மகன்களான தொழிலதிப அண்ணன்களால் கொலை வெறியோடு துரத்தப்படும் பிரான்ஸ் வாழ் தமிழ்ப் பெண் , பாசம் காட்டாத விஞ்ஞானி அப்பாவால் மனம் வெறுத்து தன்னைக் கடத்தி விட்டதாக சொல்லி அப்பாவிடம் பணம் கேட்டு அதன் மூலம் அவரது பாசத்தை சோதிக்கும் மகன், மரண பயம் காரணமாக வயதான முதியவர்களை பார்த்தாலே பயந்து நடுங்கும் பிரச்னை உள்ள அவனது காதலி ,
தொழிலதிப வில்லன்களிடம் சிக்கி உள்ள தன் தம்பியைக் காப்பாற்ற பிரான்ஸ் தமிழ்ப் பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒப்படைக்க வேறு வழி இன்றி முடிவு செய்யும் நான்கு அப்பாவி இலங்கைத் தமிழர்கள், ஓர் அடாவடி போலீஸ் அதிகாரி இவர்களின் சந்திப்பு , உரசல், பகை நட்பு, தியாகம் இவையே இந்தப் படம்.நல்லது செய்து உதவி செய்து அதனாலேயே உதவி பெற்றவர்களாலேயே பாதிக்கப்படும் சந்தானத்தின் கேரக்டரை அற்புதமாக வடிவமைத்து உள்ளார் இயக்குனர் ரத்னகுமார் .
கருத்தியலாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஒவ்வொரு காட்சியையும் வித்தியாசமாக எழுதி இயக்கி உள்ளார் .
படம் பேசும் மொழி அரசியல் அபாரமானது . சந்தானம் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தாய்மொழிக்கும் இனத்துக்கும் நேரும் கதி இப்படியே போனால் தமிழுக்கும் தமிழருக்கும் வந்துது விடும் . வராமல் காப்பது தமிழர்களின் கடமை என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அபாரமாக வெற்றி பெறுகிறார் இயக்குனர் . அதே போல ஈழத் தமிழர்களுக்கு இதம் கொடுக்கும் கதாபாத்திரங்களை அமைத்துள்ளார்.
வழக்கத்தில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார் சந்தானம் .விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சூழலை சிறப்பாக உணர வைக்கிறது. ஜாக்கியின் கலை இயக்கம் படத்திற்கு பெரும் பலம் . சந்தோஷ் நாராயணின் இசையும் அப்படியே .
இயக்குனரோடு இணைந்து இவர்கள் கொடுத்திருக்கும் பின்புல ஆக்கமும் அதில் வண்ணப்பயன்பாடும் அற்புதம் .
இரட்டை அர்த்த வசனம் , சூர மொக்கை காமெடிகள் சில …இவற்றை தவிர்த்து இருக்கலாம் .
குலு குலு .. வித்தியாசமான ஆழமான படம்