இரவின் நிழல் @ விமர்சனம்

பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ், அகிரா பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி,  அன்ஷூ பிரபாகர், பின்ச்சி சீனிவாசன்,  பால சுவாமிநாதன், ரஞ்சித் தண்டபாணி தயாரிப்பில் ராதா கிருஷ்ணன் பார்த்திபன், பிரிகிடா சகா, பிரிங்க ருத் , வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்த கிருஷ்ணன் நடிப்பில் பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். 

நான் – லீனியர் சிங்கிள் ஷாட்?

ஒரு படத்தின்  காட்சிகள் ஷாட்கள் எனப்படும் சிறுசிறு துளியாக எடுக்கப்பட்டு பின்பு இணைக்கப்பட்டு முழுப்படம் உருவாகும் . இதில் இருந்து மாறி உணர்வுகளின்  தீவிரத்தைக் காட்ட ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் அளவில் ஷாட்கள் எடுக்கப்பட்டன. பின்னர்  அது ஐந்து நிமிடம் பத்து நிமிடம் என்று மாறியது . 

அதை அடுத்து முழுப் படமும்  ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் அளவுக்கு படங்கள் வந்தன. இதில் கூட அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களே வந்தன  இவை லீனியர் அதாவது நேரியல் சிங்கிள் ஷாட் படங்கள் . ஆனால் அதில் இருந்து மாறுபட்டு முன்னும் பின்னுமான வரிசையில் காட்சிகள் நகரும் விதத்தில் — அதாவது ஓர் ஐம்பது வயது மனிதனின் வாழ்க்கை சம்பவங்கள் ஐம்பது வயது , பிறகு குழந்தையாகப் பிறந்த போது , அப்புறம் பத்து வயது , அப்புறம் ஐம்பது வயது, அப்புறம் முப்பது வயது அப்புறம் இருபது வயது என்று மாற்றி  மாற்றி காட்டப்படும் வகையில் இதுவரை  படங்கள் வந்தது இல்லை . 

உலக அளவில் அப்படிப்பட்ட படமாக வந்துள்ளது. இரவின் நிழல் . 

முழுப்படமும் இரவில் எடுக்கப்பட்டாலும் படத்தில் பகல் இரவு மாறி மாறி வரும் . மழை வெயில் மாறி மாறி வரும் , பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் , குதிரை நாய் போன்ற மிருகங்கள் வருகின்றன . மூன்று பாடல்கள் வருகின்றன.  வாயசைப்பில் வரிகள் பாடப்படுகின்றன. நடனம் உண்டு .  காடுகள், ஜன நெருக்கடி உள்ள மார்க்கெட் செட்  இவை படத்தில் உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து ஒரே ஷாட் ஆக முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் யாருமே யோசிக்காத படம் இது . இதற்கு இமாலய உழைப்பு தேவைப்படும் . இயக்குனர் நடிகர்களில் இருந்து சாதாரண செட் ஊழியர் வரை யார் தவறு செய்தாலும் மீண்டும் முதலில் இருந்து எடுக்க வேண்டும் . இப்படி பலமுறை நடந்து இருக்கிறது . படம் முடிவதற்கு  நான்கு நொடிகள் முன்னால் கூட  ஒரு தவறு நடந்து மீண்டும் முழு டேக் போயிருகிறார்கள் .அப்படி ஒரு வியக்க வைக்கும் உழைப்போடு இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள். 

இடைவேளை வரை இப்படி படமாக்கும்போது நடந்த விசயங்களை தொகுத்துக் காட்டுகிறர்கள் . அதுவே ஒரு திரில் திகில் படமாக இருக்கிறது . 

இடைவேளைக்குப் பிறகு துவங்கும் படத்தில், 

தவறான உறவில் பிறந்து,  அப்பாவே அம்மாவைக் கொன்று விட அதனால் அனாதையாகி,  வக்கிர மனிதர்களால் வேட்டையாடப்பட்டு , ஒரு நிலையில் கோபக்கார  மனிதனாக மாறி , சில நல்லவர்களைக் காயப்படுத்தி, நியாயமான தண்டனை என்று எண்ணிச் செய்த செயலில் உள்ள பாவத்தால் துரத்தப்படும் மனிதனின் கதை விரிகிறது 
புதிய பாதை  வகையிலான கதை. முதல் பாராட்டு கேமரா மென் ஆர்தர் வில்சனுக்கும் அவரை விட பெரிய பாராட்டு ஒரு மணி நேரம் கேமராவை சுமந்த ஆபரேட்டிவ் கேமரா மேன், மற்றும் சரியான சமயங்களில் சரியாக  ஃ போகஸ் செய்த தொழில்  நுட்பக் கலைஞர்களுக்கும் . 

பார்த்திபனின் உழைப்பும் அபாரமானது . வியக்க வைப்பது . 

நடித்த நடிக நடிகையர் அத்தனை பேருமே சாதனையளர்கள்தான். இந்தப் படம் வர அவர்கள் எல்லோருமே காரணம் . எனினும் அடுத்தடுத்து உடனே முழு அளவில் உடை மாற்றி வந்து நடிக்கும்போதும் கூட சிறப்பாக நடித்துள்ளார் பிரிகிடா சகா . அட்டகாசமாக நடனம் ஆடி பாடல் வரிகளை வாயசைத்துப் பாடி அசத்துகிறார்  ஆனந்த கிருஷ்ணன் .

முழுப்படமும் அரங்கில் எடுக்கப்பட்டு இருப்பதும் , இது போன்ற உலகளாவிய பார்வைகளுக்கு அனுப்பும் படங்களில்  தேவைப்படும் இயல்பான அமைதிக்கு வழி இன்றி கிரிக்கெட் ரன்னிங் கமெண்ட்ரி போல பார்த்திபன் பேசிக் கொண்டே இருப்பதும் சினிமா என்ற உணர்வை நீர்த்துப் போகச் செய்து நாடகத்தன்மையைக் கொண்டு வந்து விடுகிறது . 

எனினும் பல்வேறு லொக்கேஷன் மாற்றங்கள். , இரவு பகல்,  மழை வெயில், கால மாற்றங்கள் கும்பல் தனிமை காடு, கூட்டமுள்ள இடங்கள் ஆகிய தன்மைகளோடு உருவாகி இருக்கும்  தொழில் நுட்ப ரீதியிலான  இந்த உலக சாதனை  தமிழ் சினிமாவுக்குப் பெருமை . கடைசி ஷாட் எடுத்து முடித்த பின்னர் படக் குழுவினர் அனைவர் உடலில் இருந்தும் வரும் வியர்வை,  உழைப்பின் நறுமணத்தை நுகராமல் உணர வைக்கிறது . 

இரவின் நிழல் …. நனவான பார்த்திபன் கனவு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *