வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா, கேதரீன் தெரசா அலெக்சாண்டர், தருண் அரோரா , பாக்யராஜ், ஆடுகளம் நரேன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில்,
டி என் சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் கணிதன் . இந்தக் கணிதன் புனிதனா ? இல்லை பிணிதனா? பார்ப்போம்.
கல்வி இன்று காசு காய்க்கும் வியாபாரமாகி விட்ட காலத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பெற்றோரைக் கசக்கிப் பிழிந்து நன்றாகப் படித்து நல்ல மார்க் வாங்கி,
வேலைக்குப் போகக் காத்திருக்கிறார்கள் பல பட்டதாரி இளைஞர்கள் .
அப்படி இருக்க, கல்வி அறிவைப் பெற முடியாதவர்களில் உள்ள அயோக்கியர்கள் , டுபாக்கூர் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் துணையோடு,
நிஜமான பட்டதாரிகளின் சான்றிதழை பக்கவான தொழில் நுட்ப நேர்த்தியோடு அச்சு அசலாகப் பிரதி எடுத்து தங்களது புகைப்படத்தைப் பொருத்தி, பல லட்சக் கணக்கில் வங்கியில் லோன் வாங்கி தின்று கொழுத்தால்….
உண்மையான பட்டதாரிகளுக்கு எப்படி இருக்கும் ?
தவிர அந்த லோன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டு ஒரு நிலையில் எஸ்கேப் ஆகி விட, போலீஸ் நிஜமான பட்டதாரிதான் லோன் வாங்கி இருக்கிறோம் என்று,
போலீஸ் அவர்களைக் கைது செய்து குற்றவாளியாக்கி சாந்தி சிரிக்க வைத்து ஸ்டேஷனில் வைத்து அடித்து நொறுக்கினால் எப்படி இருக்கும் ?
நேர்மையாக கஷ் டப்பட்டுப் படித்த படிப்புக்கான சான்றிதழ் ரத்தாகி கூலி வேலைக்கும் முடிதிருத்தும் வேலைக்கும் அந்த உண்மையான பட்டதாரிகள் போனால் அவர்களுக்கு எப்படி இருக்கும் “
அதர் கோ எதுவும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அதர்வா ஆவார்கள்!
ஆல் இண்டியா ரேடியோவில் பல வருடம் செய்தி வாசித்தவருக்கு பேரனாகவும் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பவருக்கு(ஆடுகளம் நரேன்) மகனாகவும் பிறந்த அந்த இளைஞன் (அதர்வா ),
ஸ்கை டி வி என்ற ஒரு புகழ்பெறாத தொலைக் காட்சியின் நிருபராக இருக்கிறான் . அவனுக்கு பி பி சி தொலைக்காட்சியில் நிருபராக வரவேண்டும் என்பதே லட்சியம் .
இரண்டு தலை முறையாக நிருபர் வேலை பார்த்தும் வாழ்வில் முன்னேற முடியாத நிலையில் மகனாவது நன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் அப்பா,
அந்த இளைஞனை படித்த படிப்புக்கு ஏற்ற ஐ டி வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்துகிறார் . அவனுக்கோ நிருபர் பணியே விருப்பம் .
இந்த நிலையில் தான் சந்திக்கும் ஓர் அழகிய இளம்பெண்ணிடம் தன்னை பிபிசி நிருபர் என்று சொல்லி காதல் வளர்க்கிறான் அவன் . ஆனால் தான் வேலை செய்யும் ஸ்கை டிவி அதிபரின் மகள்தான் அவள் என்பது ,
அவனுக்குத் தெரிய வருகிறது . அவளுக்கும் அவன் வேலை பார்ப்பது ஸ்கை டிவியில்தான் என்று தெரிய வரும்போது, கோபம் வருகிறது .
அப்பா, காதலி இருவரின் கோபத்துக்கும் தீர்வு தேடி முயலும் அவனுக்கு பிபிசியில் வேலை கிடைக்கிறது .பிபிசி நிறுவனம் அவனது சான்றிதழ் சரி பார்ப்புக்கு போலீஸ் உதவியை நாடுகிறது .
சந்தோஷத்தை அவன் தன் காதலியோடு கொண்டாடும் போது புயலென நுழையும் போலீஸ் இடியென அவனை அடித்து நொறுக்கி மின்னலென புரட்டி எடுத்து லோன் மோசடிக் குற்றவாளியாக்கி ஜெயிலில் தள்ளி,
அவனது குடும்பத்தை கண்ணீர் மழையில் மூழ்க வைக்கிறது .
போராடி ஜாமீன் வாங்கி , எல்லோரும் நொடித்துப் போன நிலையில், அப்பாவின் நண்பரான ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (கே.பாக்யராஜ்) “இந்த போலி சான்றிதழ் மோசடியால் நாட்டில் பலரும் பாதிக்கப்படுகின்றனர் .
இதை நீ பாதிக்கப்பட்டவனாகப் பார்க்காமல் பத்திரிக்கையாளனாகப் பார் ” என்று சொல்ல ,
நாயகன் அப்புறம் என்ன செய்கிறான் என்பதே இந்தப் படம் .
படத்தின் டைட்டில் சிறப்பான தொழில் நுட்ப உத்திகளோடு அற்புதமான அழகோடு கண்ணுக்கு விரிகிறது .
படத்தில் நம்மை முதலில் கவர்பவர் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாதான். இந்த மனுஷன் மட்டும் எந்தக் கடையில் லைட்வாங்கறாரோ என்று கேட்கவைக்கும் அளவுக்கு,
அவ்வளவு அழகான ரம்மியமான , வண்ணமயமான , நடிக நடிகையரை தகதகக்க வைக்கிற, காட்சியின் சூழலோடு காண்போரை கட்டிப் போடுகிற ஒளிப்பதிவு . சபாஷ் .
போலி சான்றிதழ் மோசடியின் தொடர் கண்ணிகளை நூல் பிடித்து விவரிக்கும்போது கதை நுட்ப ரீதியாகப் பாராட்ட வைக்கும் இயக்குனர் சந்தோஷ்,
பல பல்கலைக் கழகங்கள் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதை தைரியமாக அந்தப் பல்கலைக் கழகங்களின் பெயர் சொல்லியே சொல்லும்போது ‘அடடே’ போட வைக்கிறார் .
கணிதன் கேரக்டருக்காகவே கனிந்து இருப்பது போல கனகச்சிதமாக பொருந்துகிறார் அதர்வா. வேகம் , வீரியம் , துள்ளல் , துடிப்பு, குறும்பு , அக்குறும்பு எல்லாமே அருமை அதர்வா .
கண்களுக்குள் கஞ்சாத் தோட்டம் வளர்த்து படம் பார்க்கும் எல்லோரையும் மயக்கத்தில் ஆழ்த்துகிறார் கேதரின் தெரசா அலெக்சாண்டர் .
வில்லனாக வரும் தருண் அரோரா மிரட்டுகிறார் . கருணாகரன் இயல்பான நடிப்பு.
சண்டைக் காட்சிகள் சும்மா ‘தெறி’க்கிறது .
முதல் பாதியை விரைந்து கொண்டு போகும் விதத்துக்கு புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் ஒரு பக்கபலமான காரணம்
டிரம்ஸ் சிவமணியின் பாடல்கள் பக்க மசாலா . பின்னணி இசை அமைத்தவரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் .
கருணாகரன் சம்பவத்துக்குப் பிறகு அஸ்வின் போய் வில்லன் கூடாரத்தில் மாட்டும் காட்சியை , பார்ப்போரின் இதயத்தை உடலுக்கு வெளியே துடிக்க வைக்கும்படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் டி என் சந்தோஷ் .
போலி சர்டிபிகேட் மோசடியால் ஏற்படும் பாதிப்புகளை அதிகம் காட்டி கமர்சியல் அயிட்டங்களை கொஞ்சம் குறைத்து, சமூக பிரச்னை பேசும் இந்தப் படத்தில் வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்து ,வில்லனின் தம்பி கொல்லப்படுவதற்கு முன்பே அந்த பர்த் டே காட்சியையும் பாடல் காட்சியையும் கொண்டு வந்து , படத்தின் இறுதிப் பகுதியை இன்னும் யதார்த்தமாக கொண்டு வந்திருந்தால்,
படம் மேற்கொண்டு இன்னும் கூட நன்றாக சிறப்பாக வந்திருக்கும் .
ஆனாலும் என்ன ….
”ஏதோ ஒரு வகையில் உங்களுக்கும் இது நேரலாம் .. கவனம் கண்மணிகளே ” என்று நமது பட்டதாரி இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அக்கறையோடு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ….
கணிதன் ….. கனகன் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————-
அரவிந்த் கிருஷ்ணா, அதர்வா , தருண் அரோரா