சரவணன் செல்வராஜ் தயாரிப்பில் விஜித் சரவணன் ,ஸ்வேதா டாரதி,அப்புக்குட்டி , சிவ சேனாதிபதி ,ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட் ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் நடிப்பில் ப.ஐயப்பன் இயக்கி உள்ள படம்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தில் ஒரு முக்கியக் காட்சியில் யூகி சேது சொல்வார் . ”இந்த நாட்டுல தொண்டனை ஏமாத்தின தலைவன் இருக்கான். ஆனா தலைவனை ஏமாத்தின தொண்டன் கிடையாது ” என்று.
அப்படி தன்னை ஏமாற்றிய தலைவனை தன்னைப் போல ஏமாற்றப்பட்ட சக கட்சிக்காரர்களோடு சேர்ந்து எதிர்த்து பழிவாங்கும் தொண்டனின் கதையே இந்தப் படம்
நாயகன் தனது அபிமானம் மிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது ,கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது ,கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது ,விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான்.

இவற்றுக்கெல்லாம் செலவுக்குப் பணம் இல்லாத போது தன் மனைவியின் தாலியை அடகு வைக்கக் கூட தயங்குவதில்லை.
இரவு பகல் பாராது உழைக்கிறான். அவனது உழைப்பைப் பாராட்டி அவனுக்குத் தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க் கட்சியில் இருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு பணம் காரணமான அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது.
தன் கனவு சிதைந்து விட்டதே என்று எண்ணி ஏமாற்றப்பட்டவன் சோர்வடைந்து விலகி விடவில்லை.யோசித்துப் பார்த்து விழிப்புணர்வு பெறுகிறான். அவன் மனைவி அஞ்சலியும் அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். ஏமாற்றியவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள்.ஏமாற்றப்பட்ட தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான் .அது மட்டுமல்ல அரசியல்வாதிகளின் மிரட்டல் போக்கால்,அவன் கூட வந்தவர்கள் இடையில் கழன்று கொண்டாலும் அவன் உறுதியாக நிற்கிறான்.முடிவு என்ன என்பதுதான் கட்சிக்காரன் படத்தின் கதை.

நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி முகம் அவரை அந்தப் பாத்திரத்தில் அழகாக பொருத்திக் கொள்கிறது. .
மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார். முகமும் தோற்றமும் நேர்த்தி. அளவான அழகு, நடிப்பு .
அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை வைத்து தொண்டர்கள் உழைப்பை முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யும் தொண்டனுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா ?என்று கேள்வி கேட்கிறது இந்தப் படம் .அது மட்டுமல்ல இந்த அரசியல்வாதிகளின் தொண்டர்கள் மீதான அலட்சியத்தையும் ,மக்கள் விரோதப் போக்கையும், ஊழல்களில் கொடி கட்டிப் பறப்பதையும் , பணம் சம்பாதிக்க எதிரெதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையும் பல்வேறு வசனங்களின் மூலம் இப்படம் கேள்வி கேட்கிறது.
பல பெரிய கதாநாயகர்கள் சொல்லத் தயங்கும் பல வசனங்கள் இதில் வருகின்றன. படத்திற்குப் பலம் துணிச்சலான வசனங்கள்தான் .ஆனால் வெறும் வசனங்களை மட்டும் வைத்து ஒரு படத்தை நிறைவு செய்துவிட முடியாது. படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் .வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டே இருப்பது தான் சலிப்பூட்டுகிறது . நீள வசனங்களை சிறப்பாகப் பேசினாலும் செயற்கையான நடிப்பு நாயகனின் நண்பராக வரும் தெனாலிக்கு.

சிவ சேனாபதி இயல்பு நடிப்பு என்ற பெயரில் வசனத்தை மட்டும் பேசி விட்டுப் போகிறார்
அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மனதில் பதிந்திருக்கும் பல அபிப்ராயங்களை மாற்றும் வகையில் துணிச்சலான வசனங்களில் மூலம் சில உண்மைகளைப் போட்டு உடைக்கிறார்கள். அப்படிச் சொல்ல வந்த கருத்துக்காக இந்த முயற்சியை ஆதரிக்கலாம். காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.
இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு சினிமா மொழியில் சிறப்பாக எடுக்கப்பட்ட பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் படத்தை இப்போது ஒலிச் சித்திரமாக எடுத்து இருக்கிறார்கள் .