”நான் அந்தோணிதாசனின் ரசிகை” – ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்க விழாவில் சின்னக்குயில் சித்ரா.

பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌.
 
நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. தனது கடின உழைப்பால்  அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர்,  இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப் பயணத்தை வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
 
தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப்போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கில். ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.
 
பாடல் எழுதத் தெரிந்தவர்கள், பாடத் தெரிந்தவர்கள், இசைக்கருவிகளை கையாளத் தெரிந்தவர்கள் இன்னும் இசை சம்பந்தமாக திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.  அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாடல் உருவாக்கவும், நிறுவனம் உதவி செய்யும். பாடல்கள் உருவாக்கி வைத்திருப்பவர்களும் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடலாம்.
ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் துவக்கவிழா சென்னையில்  நடைபெற்றது. அடையாறு இசைக் கல்லூரி முன்னாள் மாணவிகளின்  தமிழ்த்தாய்  வாழ்த்துப் பாடலுடன்   தொடங்கிய விழாவில் ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் சிஇஓ முருகன் மந்திரம் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை கவிதா மற்றும் கேபிஒய் பாலா தொகுத்து வழங்கினார்கள். இயக்குனர் சீனுராமசாமி, சின்னக்குயில் சித்ரா,  இசையமைப்பாளர் பாடகர் பிரதீப் குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ்,
 
பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட “”நாடோடிப் பாட்டுக்கு“” பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்துகொண்டனர். பத்திரிகைத் தொடர்பு பணியை பிஆர் ஓ குணசீலன் சிறப்பாக செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை சின்னா மற்றும் ராஜா பக்கிரிசாமி சிறப்பாக செய்திருந்தனர்.விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில், “அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல்  தன்னைப்போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணி தாசனுக்கு உண்டு, அந்தோணி தாசன் மிகப் பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் “என்று பேசினார்.
 
சின்னக்குயில் சித்ரா பேசுகையில், “அந்தோணி தாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப் போல நானும் அந்தோணி தாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக் கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணி தாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
வழக்கமாக இதுபோல நிகழ்ச்சிகளில் நிறைய பேசுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாடகர்கள் என்பதால் அனைத்து விருந்தினர்களும் உற்சாகமாக பாடி அசத்த, கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. சின்னக்குயில் சித்ராவும் தன் பங்குக்கு, “மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை” பாடலைப் பாட அமைதியாக கேட்டு ரசித்தவர்கள் பாடி முடித்ததும் கைத்தட்டி கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
திடீர் விருந்தினராக மேடைக்கு வந்த அந்தோணிதாசனின் மனைவி ரீத்தா அந்தோணி தன் பேச்சால் அரங்கத்தை அதிர வைத்தார். அதோடு கணவனும் மனைவியுமாக சேர்ந்து ஜோடியாகப் டூயட் பாட, வந்திருந்தவர்கள் சிரித்து ரசித்து ஆரவாரித்தனர்.
கடைசியாக நடிகர் அருள்தாஸ் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து பாடகர்களும் சேர்ந்து, பறை இசையுடன் “மொச்சக்கொட்ட பல்லழகி” பாடலைப் பாட பலத்த கைத்தட்டல் விசில் பறக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
 
விழாவில், ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியீடாக, “நாடோடி பாட்டுக்கு” பாடல் வெளியிடப்பட்டது. 
 
 
விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப் புறக்கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.
வாய்ப்பு கிடைக்காத நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வழிகாட்டி தன்னைப்போல உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அந்தோணிதாசன் தொடங்கியுள்ள, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழா ஆடல், பாடல், கொண்டாட்டத்தோடு மிக மிக சிறப்பாக அமைந்தது. அந்தோணிதாசனின் இந்த நல்முயற்சி பெரிய வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *