கத்தி @ விமர்சனம்

IMG_0279விஜய் சமந்தா இணையராக  நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் கருணாமூர்த்தி தயாரிப்பில் வந்திருக்கும் படம் கத்தி .

இந்த கத்தி ஷார்ப்பா?  மொன்னையா? பார்க்கலாம் .

நெல்லை மாவட்டம் தன்னூத்து (தானாக வரும் ஊற்று என்று பொருள்) கிராமம் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு விவாசாயம் செழித்த நிலம்  . இப்போது வானம் பூத்த பூமி . அந்த ஊரைச் சேர்ந்த  முதுகலை நீரியல் அறிவியல் (- எம் எஸ் சி ஹைட்ராலாஜி) படித்த ஜீவா என்ற இளைஞன் (சைவ விஜய்) அந்த ஊருக்கு கீழே ஒரு வற்றாத நீரூற்று இருப்பதை செயற்கைக் கோள் படம் மூலம் அறிந்து கொள்கிறான். துளையிட்டு அந்த ஊற்றை  கொண்டு வந்தால் மூன்று மாவட்டங்களை மீண்டும் செழிப்பான பூமி ஆக்கலாம் என்பது அவனது சமூக பார்வை .

இதை உணர்ந்து கொண்ட மல்டிநேஷனல் கார்ப்பரேட் கம்பெனி ஒன்று அந்த ஊரின் மொத்த நிலத்தையும் வாங்கி குளிர்பானக் கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க முயல்கிறது . ஜீவா தலைமையிலான ஊர் மக்கள் அதை தடுக்க முயல , அந்த ஊர் பெண்கள் வாழா வெட்டிகளாக திரும்பி வருவது வரை பல அராஜகங்கள் அரங்கேறுகின்றன . கம்பெனிக்கு எதிராக வழக்கு போட்டு நடத்த மக்களிடம் நடத்த பணம் இல்லை . எனவே கிராமத்து ஆண்கள் எல்லாம் உலகம் முழுக்க கூலிகளாக வேலைக்கு போய் சம்பாதித்து பணம் அனுப்புகிறார்கள் .

வழக்கை ஒருங்கிணைத்து நடத்தும் ஜீவாவை போலீஸ் கைது செய்து கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறது . பிரச்னையின் தீவிரத்தை மீடியா உணராத நிலையில்,  அந்த கிராமத்து முதியவர்கள் ஆறு பேர்  லோக்கல் டி வி நிருபரின் கேமரா முன்பாக கூட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விளைவாக மக்களின் கவனத்துக்கு விஷயம் போய்  அதனால் உயிர் தப்பிய ஜீவா,  சென்னைக்கு வந்து முதியோர் இல்லம் நடத்தியபடி வெளிநாட்டில் இருந்து ஊர் மக்கள் அனுப்பும் பணத்தை வைத்து வழக்கை நடத்துகிறான்.

சம்மந்தப்பட்ட மல்டி நேஷனல் கம்பெனி முதலாளி (நீல்  நிதின் முகேஷ்) ஜீவாவையும்  விலைக்கு வாங்க முயன்றும் முடியாத நிலையில் அவனை கொலை செய்ய முயல்கிறான்.

அதே நேரம்……

கல்கத்தா சிறையில் இருந்து தப்பிக்கும் கதிரேசன் என்ற கத்தி (அசைவ விஜய் ) சென்னைக்கு வந்த நேரம்,  அவன் கண் முன்னாள் ஜீவா மீது துப்பாக்கி சூடு நடக்கிறது . அவன் இறந்து விட்டதாக எண்ணி சுட்டவர்கள் போய்விட , ஜீவாவை காப்பாற்றும் கதிரேசன் அவனை மருத்துவமனையில் சேர்க்க , பின்னாலேயே வரும் கல்கத்தா போலீஸ் ஜீவாவை தூக்கிக் கொண்டு கல்கத்தா போய்  விடுகிறது .

ஜீவாவின் இடத்துக்கு வரும் கதிரேசன் அங்கே கலெக்டர் மூலம் வரும் 25 லட்ச ரூபாய் , வழக்கை வாபஸ் பெற மல்டி நேஷனல் கம்பெனி பேசும் பேரத்  தொகையான 25 கோடி ரூபாய் பணம் இவைகளை  சுருட்டிக் கொண்டு ஓட முயல , அடுத்து என்ன நடக்கிறது என்பதே கத்தி .

IMG_6857நம் நாட்டு அரசியல்வாதிகளின் பெரும்பணப் பேராசை காரணமாக அயல்நாட்டு  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நமது மக்களை நமது அரசே அடிமையாக்கும் ஏற்பாடுகளில் ஒன்றான தண்ணீர் அரசியலை எடுத்துக் கொண்டு படம் எடுத்ததற்காக கதாசிரியர்  முருகதாசுக்கு முதல் பாராட்டு .

”மொதலாளிங்க கேட்கற அந்த பெரிய விலைக்கு நிலத்தை வித்து பணத்தை தரலைன்னா, உங்க பொண்ணுகளை நீங்களே வச்சுக்குங்க” என்று இந்த ஊரில் இருந்து வாக்கப்பட்ட பெண்களை கொண்டு வந்து விட்டு விட்டுப் போகும் ஆண்கள் என்று… மேற்படி கதையை வைத்து வாழ்வியல் கலந்து திரைக்கதை அமைத்த  திரைக்கதை ஆசிரியர் முருகதாசுக்கு இரண்டாவது பாராட்டு .

“வயித்துப் பசி ஆறின அப்புறம் நாம சாப்பிடற அடுத்த இட்லி மத்தவங்களுக்கானது ” என்று சிம்பிளாக கம்யூனிசத்துக்கு விளக்கம் சொல்லும் வசனகர்த்தா முருகதாசுக்கு மூன்றாவது பாராட்டு .

இவை எல்லாவற்றையும் இணைத்து மதிக்கவும் நெகிழவும் வைக்கிற ஒரு படம் கொடுத்த இயக்குனர் முருகதாசுக்கு நாலாவது பாராட்டு.

வியக்க வைக்கிறார் விஜய் . எப்படி என்கிறீர்களா?

நியாயம் கேட்கப் போகும்  விஜய்யை ஒரு இன்ஸ்பெக்டர் பொளீர் என்று அறைகிறார். கன்னத்தை பிடித்துக் கொண்டுநடுங்கி குறுகி,  விஜய் மக்கள் மீது விழுகிறார் . அந்தக் காட்சி அதோடு முடிகிறது. போலீஸ் ஸ்டேஷனில் அடிபட்டு அரை நிர்வாணமாக உட்கார்ந்து இருக்கிறார் . அவரை மேலும் அடிக்க போலீஸ் தர தரவென இழுத்துப் போக , ஊரே கதற , அந்தக் காட்சியும் அப்படியே முடிகிறது.

கிரேட் ஆப் தி கிரேட்ஸ் விஜய் !

நாற்பது காட்சியில் ஹீரோயிசம் காட்டினாலும் இது போலவே ஒவ்வொரு படத்திலும்  நாலு காட்சியிலாவது கேரக்டர்  காட்டுங்கள் . அந்த நாற்பது ஹீரோயிச காட்சிகளுக்கும் தனி மரியாதை கிடைக்கும் .

அதே நேரம் கதிரேசன் கேரக்டரில் வழக்கம் போல காமெடி மற்றும் அதிரடி ! தண்ணீரின் சிறப்பு , நம் நாட்டில் மூடப்பட்ட ஏரி குளங்கள் நீர் நிலைகளை பற்றி பத்திரிக்கையளர்கள் முன்னாள் விஜய் கொந்தளித்துப் பேசும் காட்சி… படத்தில் உள்ள மற்ற ஆக்ஷன் காட்சிகளை விடவும் ஆக்டிவான காட்சி

DSC_0506சமந்தாவிடம் வழக்கமான கவர்ச்சி மற்றும் அகலமான … சிரிப்பு ! சிரிப்பு ! படம் முழுக்க கிளாமர் கில்மாவாக வளைய வருகிறார் சமந்தா

ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு வரட்சி , கவர்ச்சி , செழுமை , கொழுமை, படாடோபம் , பரிதவிப்பு எல்லாவற்றையும் வெல்வெட் துணியில் கொட்டிய வைரக்  கட்டிகளைப் போல சிறப்பாக காட்டுகிறது.

செல்பி புள்ள போன்ற ஒரு சில வார்த்தைகள் கவரும்படியாக இருந்தால் கூட பாடல்கள் சுமார்தான் ., ஆனால் பின்னணி  இசையில் சுவாரஸ்யமாக துள்ளி விளையாடுகிறார் அனிருத் .
அனல் அரசுவின் சண்டைப் பயிற்சியில் கனல் தெறிக்கிறது .

அதே நேரம் படத்துக்காக இவர்கள் அரைத்திருக்கும் மசாலாவில் மட்டும் நிறையவே மட்கிய (பழைய நெடி )

எனினும் என்ன ?

ஒரு திரைப்படத்தின் நோக்கம் சும்மா வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் பார்க்காமல் வெகு ஜன மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர வேண்டிய ஒரு விசயத்தை முக்கிய கதையாக வைத்து படம் எடுத்த படக்குழுவுக்கு தரலாம் ஒரு ராயல் சல்யூட்

கத்தி … வீர வாள் .

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————–
விஜய் ,  ஏ ஆர் முருகதாஸ் , ஜார்ஜ் வில்லியம்ஸ் , அனிருத், அனல் அரசு .

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →