பிரபல மலையாள இயக்குனர் லோகிதாசின் உதவியாளர் உதய சங்கரன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம்.
இந்த உதய சங்கரன் . ஆரம்பத்தில் மலையாளத்தில் நிறைய இசை ஆல்பங்களை இயக்கியவர் . இவரது இசை ஆல்பங்களுக்கு மலையாள சேனல்களில் அப்போதே மகா மவுசு .
அமலா பால், பாவனா ஆகியோர் இவரது இசை ஆல்பங்கள் மூலமாகத்தான் முதன் முதலில் கேமரா முன்பாக நின்றார்கள் .
ரம்யா நம்பீசன் மற்றும் இப்போது கோடம்பாக்கத்தில் கொடி கட்டி இருக்கும் பல மலையாள நடிகைகள் இவரது இசை ஆல்பம் மூலம் அறிமுகமானவர்கள் தானாம்.
படத்தின் இசை அமைப்பாளர் வல்லவன் இந்தப் படத்துக்கு பாட்டுப் பாடத்தான் போனாராம் . அப்போது இவர் போட்ட சரியான தாளங்கள் இவரை இசை அமைப்பாளாராகவே ஆக்கி விட்டன .
தமிழ் நாட்டில் இருந்து கேரளா போன ஒருவன் அங்கே உழைத்து முன்னேறி ஒரு காதல் ஜோடிக்கு உதவுவதுதான் படத்தின் கதையாம் .
அந்த தொழில் அதிபராக நடித்துள்ளவர் அப்புக்குட்டி . வில்லனாக மன்சூர் அலிகான் .படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்துள்ள பிரியா மோகன் பெரிதும் பேசப் படுவார் என்கிறார்கள்
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் மூன்று பாடல்களையும் முன்னோட்டததையும் திரையிட்டனர் . படத்தில் நடனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிகிறது .
எல்லா கேரக்டரும் ஆடிக் கொண்டே இருக்கிறார்கள் . மதுமிதா கவனம் கவர்கிறார். நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது .
நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான்,
“மோடி நாட்டு மக்களையே தெருவில் நிறுத்தி விட்டார் . எல்லோரும் கையில் காசில்லாமல் அலைகிறார்கள் . இதுதான் மக்கள் நலம் பேணும் ஆட்சியா ?”” என்றார் .
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மீரா கதிரவன் ” இந்தப் படத்தின் இயக்குனர் உதய சங்கரனும் நானும் லோகிதாஸ் சாரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் .
மலையாள சினிமா உலகில் ஸ்கிரிப்ட் என்றாலே வாசு தேவன் நாயர் , பத்மராஜன் , எங்கள் குரு லோகிதாஸ் மூவரின் பெயரையும்தான் முதலில் சொல்வார்கள் .
அப்படிப்பட்ட ஒருவரிடம் பணியாற்றிய பெருமை எங்களுக்கு உண்டு
அதுவும் உதய சங்கரன் என்னை விட தொழில் நுட்ப அறிவில் சிறந்தவர் . அப்படி இருக்கையில் அவர் எடுத்து இருக்கும் இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கும் . படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார்
நடிகர் ரகுமான் பேசும்போது ” உதய சங்கரன் நல்ல திறமைசாலி . நிறைய சாதிக்க இருப்பவர் . சாதிப்பார் ” என்றார்
இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது ” படத்தின் ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணன் எனது நெருங்கிய நண்பர் . உண்மையில் அவருக்கு நான் வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனா இதுவரை கொடுக்கவில்லை . இனி கொடுப்பேன்” என்றார் .
படக் குழுவினரை வாழ்த்திப் பேசிய இயக்குனர் எஸ் பி முத்துராமன் ” இங்கே பேசிய மீரா கதிரவன் தனது குருநாதரை போற்றிப் பேசினார் . குரு விசுவாசம் உள்ளவர்கள் எப்போதும் தோற்க மாட்டார்கள் .
நான் ஏ வி எம் நிறுவனத்தில் எடிட்டிங் கற்றுக் கொண்டேன் . எனது குருநாதர் ஏ சி திருலோகசந்தரிடம்தான் டைரக்ஷன் கற்றேன்.
எனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பும் படத்தின் ஸ்கிரிப்டை என் குருநாதரின் காலடியில் வைத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டுதான் படப்பிடிப்புக்கு போவேன் .
நான் இயக்கிய 70 படங்களுக்கும் அப்படித்தான் செய்தேன் . அதே பண்பு இந்த பிள்ளைகளிடம் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது .
இன்னொருவரையும் நான் இங்கே சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன் .
பொதுவாக ஹீரோ ஹீரோயினாக வில்லன் வில்லியாக நடிப்பது சுலபம் . காமெடி செய்வதுதான் கஷ்டம் . எவ்வளவோ பேர் காமெடி செய்ய வந்தும் நமக்கு பெண்களில் ஒரே ஒரு ஆச்சி மட்டும்தான் கிடைத்தார் .
இந்தப் படத்தில் நடித்து இருக்கும் மதுமிதாவின் நடிப்பை வெகுகாலம் கவனித்து வருகிறேன் . அவர் மிக சிறப்பாக நடிக்கிறார் .
ஆச்சிமனோரமாவின் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு மதுமிதாவுக்கு உண்டு ” என்று கூற,
மெய் சிலிர்த்துவிட்டார் மதுமிதா !