கூசே முனியசாமி வீரப்பன் @ விமர்சனம்

நக்கீரன் நிறுவனத்தின் தீரன் புரடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி தயாரிக்க, ஜெயச்சந்திர ஹஷ்மியின் ஆக்கத்தலைமை , மற்றும் அவரே வீரப்பனின் காணொளிகளில் இருந்து கதை திரைக்கதை உருவாக்கி ,   வசந்த் பாலகிருஷ்ணன், சரத் ஜோதி  ஆகியோரோடு சேர்ந்து எழுத,

அதே சரத் ஜோதி இயக்கி , zee 5 தளத்தில் காணக் கிடைக்கும் – உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடு கூடிய ஆவணப் படத் தொடரின்  பருவம் ஒன்று . 

நக்கீரன் நிருபர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சமயங்களில்   வீரப்பனைக் காட்டில் சந்தித்து எடுத்த பேட்டிக் காணொளிகளில் இருந்து காட்சிகளை வரிசைப்படுத்தி , அவற்றில் கூறப்படும் நபர்கள்…
 
ஒருவேளை  அவர்கள் உயிரோடு இல்லை எனில் அவர்களது குடும்பத்தார் , வீரப்பனுக்கு வேண்டியோர், வேண்டாதோர் , வீரப்பனைக் கொண்டாடுவோர் , விமர்சிப்போர் , மற்றும் பல தமிழ் ஆங்கில கன்னடப் பத்திரிக்கையாளர்கள் இவர்களைப் பேட்டி கண்டு அவற்றை சரியாகவும் நெறியாகவும் சுவையாகவும் வரிசைப்படுத்தி , 
 
அட்டகாசமான விஷயத் தொகுப்பு ( ஜெயச்சந்திர ஹஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ) தரமான   படமாக்கல் , இயக்கம், (சரத் ஜோதி ) அர்ப்பணிப்போடு கூடிய சிறப்பான ஒளிப்பதிவு (ராஜ்குமார்) முழு ஈடுப்பாட்டோடு கூடிய படத் தொகுப்பு (ராம் பாண்டியன்) ஒரு ஆவணப்படத்தின் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒரு வெற்றிகரமான வணிகத்  திரைப்படத்தின் உயரத்துக்கு தூக்கி நிறுத்தும் இசை (சதீஷ் ரகுநாதன்) என்று….
 
 மதிக்கவும் வியக்கவும் ரசிக்கவும் கொண்டாடவும் தக்க தொடராக இருக்கிறது கூசே முனியசாமி வீரப்பன். 
 
வன வாழ் மக்களுக்கு அந்த வனத்தின் செல்வங்களை,  அடிப்படையான சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் காலகால உரிமை , நாடுமயமாக்கலுக்குப் பின் வனத்துறையால் மறுக்கப்பட்டது… 
 
எனேவ அந்த மக்கள்   ஜீவாதார உரிமைகளைக் கூட மறைந்து மறைந்து  கைக் கொள்ளும் நிலைக்கு ஆளானது.. அதையும் திருட்டு என்றும் , குற்றம் என்றும் வனத்துறை சித்தரித்தது .. 
 
இது போன்ற செயல்களாலும் வீரப்பன் குற்றவாளியாக ஆனது , 
 
கர்நாடக அரசியல்வாதிகளின் வற்புறுத்தலால் வீரப்பன்  தேவைக்கும் மீறிய பணத்துக்காக,  வனத்தைப் பயன்படுத்தும் தவறுகளை செய்ய ஆரம்பித்தது .. 
 
வீரப்பனைக் கைது செய்து கொண்டு போய் சட்டப்படி வழக்குப் போடாமல் தமிழன் என்ற காரணத்தினாலேயே கன்னட போலீஸ் சுட்டுக் கொல்லப் பார்த்தது… 
 
தப்பி வந்த வீரப்பன் தன்னை விட அரசுகளும் அதிகாரிகளும்தான் அயோக்கியர்கள் என்று புரிந்து கொண்டது… 
 
வீரப்பனை வைத்து உண்டு கொழுத்தபடியே தமிழ்ப் பெண்கள் மீதுஇன வன்மம் காரணமாக  கன்னடர்கள் பாலியல் ரீதியாக அநியாயம் செய்தது .. அதற்காக  வீரப்பன் துப்பாக்கி தூக்கியது …  
 
பலம் கொண்ட அரசாங்க அதிகாரத்துக்கும் ஒரு சிறு கும்பலான வீரப்பன் கோஷ்டிக்கும் தனிப்பட்ட பகை உருவானது …
 
அந்தப் பகையில் இருந்து அரசியல்வாதிகள் மூலம் தப்பிக்க வீரப்பன் யானைத்தந்தம் வியாபாரத்தில் இறங்கியது… அது முடியாத போது சொற்ப காலமே சந்தன மரம் வெட்டி , காலத்துக்கும் அழியாத பெயராக சந்தனக்கட்டை வீரப்பன் என்று பெயர் வாங்கியது … 
 
நியாயமாகவும் வேறு வழி இன்றியும் வீரப்பனை ஆதரிக்கும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க சீனிவாசன் என்ற அதிகாரி போட்ட எம்ஜிஆர் ப்ளஸ் என் டி ஆர் வேஷம்….
 
அது முடியாத போது வீரப்பன் மேல் உள்ள கோபத்தை அப்பாவி மக்கள் மீது காட்ட ஆரம்பித்த  அரசு எந்திரம்…
 
சிறுசோ பெருசோ துரோகத்தை மன்னிக்கவே தெரியாத வீரப்பனின் வெள்ளந்தி ரவுத்திரம்…
 
வீரப்பனின் முகத்தை மக்களுக்குக் காட்டவும் , அவன் பெயரைச் சொல்லி வன அதிகாரிகள் ஆடும் வேட்டையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்கவும்  நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் குழுவினர் உயிரைப் பயணம் வைத்து பல் வேறு ஆபத்துகளுக்கு இடையில் பட்ட பெரும் சிரமங்கள் 
 
கனி மீது தொடுக்கும்  அம்பு இலைகளைக் கிழிப்பது போல அயோக்கிய அதிகாரிகளை வேட்டையாட வீரப்பன் நிகழ்த்திய வதங்களில் , சிஸ்டம் காரணமாக சில நல்ல மனிதர்களும் பலியானது … 
 
அதன் உச்சமான பாலாற்றுக் குண்டு வெடிப்பு … 
 
ஜெயலலிதாவின் கோபம் … 
 
வீரப்பனை வேட்டையாட வால்டர் தேவாரம் தலைமையில் தமிழ் நாட்டு அதிரடிப்படை வீரர்கள் இரண்டாயிரம் பேர் , கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் நான்காயிரம் பேர் என்று ஜெயலலிதா அயோக்கியத்தனமான எண்ணிகையில் அனுப்பிய அதிரடிப்படை ..
 
தமிழக அதிகாரிகளுகுள்ளும் மிருகங்கள் இருந்தாலும் கர்நாடக அதிரடிப்படை ஆட்கள் தமிழ் இன  வன்மத்தோடு பெண்களை வன்புணர்வு செய்தது .. பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சியது … பெண்களின் மார்புக் காம்புகள் அறுந்து விழுந்தது…. . 
 
ஒரு மலைவாழ் பெண்ணை வால்டர் தேவாரம் மூன்று நாள் தனியே வைத்திருந்து தொடர்ந்து கற்பழித்து பாலியல் வன்கொடுமை செய்த அநியாயத்தை அந்தப் பெண் சொல்லி அழுவது (பெயரின் ஒலி நீக்கப்பட்டு இருக்கிறது)
 
அம்மா மகனை, அப்பா மகளை , சகோதரன் சகோதரியை அடித்து உடலுறவு கொள்ள வைத்து ரசித்தது…. அதற்குப் பின் அந்த அதிகாரிகள் வீட்டுக்குப் போய் அம்மாவையும் சகோதரியையும் மகளையும் கட்டிப் பிடித்து வாழ்ந்தது… 
 
ஒரு சிறுமியான தமிழ்ப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு கன்னட அதிகாரி ஊர் மக்கள் பார்க்க தன்னை முழு அம்மணமாக்கிக் கொண்டு வீதியில் எக்காளத்தோடு ஓடியது .. அந்த வேசி மகன்  இன்னும் கர்நாடகாவில் அதிகாரியாக இருப்பது…
 
ஹிட்லரின் ஜெர்மனி, ஈழம், கிழக்கு திமோர், காசா,  போன்ற பகுதிகளில் நாடுகளுக்குள் நடக்கிற போர்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளை விட மோசமான கொடுமையை அந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் அனுபவித்தது…
 
இன்னும் ஆறாத அவர்களது காயங்கள்… மாறாத மன நலச் சிதைவுகள் … 
 
வீரப்பனின் வேட்டையாடும் திறமை, அரசியல், சமூக அரசியல் பார்வை.. இயற்கையின் மொழிகள் அறிந்த நுட்பம், 
 
ஒரு நிலையில் நக்கீரன் ஆசிரியரால் அவன்  கலைஞருக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தது … 
 

அதனால் ஜெயலலிதா தோற்றது… அதை ஜெயலலிதாவே ஒத்துக் கொண்டது… 

 
காவிரி நீர் விசயத்தில் தமிழகத்துக்கு ஆதரவான மத்திய அரசின் நியாமான தீர்ப்பால் , கர்நாடகத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஓடி வந்த தமிழர்கள்… 
 
அவர்கள் உயிரைக் காப்பாற்றி தமிழக எல்லைக்குள் அனுப்பிய வீரப்பனின் மாண்பு , 
 
அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்த போலீசை ஸ்டேஷனுக்குள் நுழைந்து வீரப்பன் சுட்டுப் பொசுக்கியது … என்று பயணித்து ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தைத் துவக்கி … 
 
அடுத்த சீசனில் தொடரும் என்ற அறிவிப்போடு முடிகிறது . 
 
 zee 5 இதுவரை கொடுத்த படைப்புகளிலேயே இதுதான் பெஸ்ட் 
 
ரசிகப் பார்வையில் தொடரின்  மிகப் பெரிய பலமே, முதுகெலும்பு  வீரப்பனின் அறிவார்ந்த யதார்த்தமான உண்மையான நியாயமான  பேச்சு . 
 
 உண்மைக் கதை, உருவேற்றும் திரைக்கதை, அசத்தலான வசனம் , நடனப் பயிற்சி, சண்டைப் பயிற்சி என்று வீரப்பனே படைப்பு மேற்பார்வை செய்ய,  மற்றவர்கள் பணியாற்றிய தொடர்  இது என்று கூட சொல்லலாம் .  அதை இந்த தொடரின் குழுவும் உணர்ந்து செயல்பட்டு இருப்பதுதான் அருமை . 
 
ஆவணப்படங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் பார்க்கப்படும் அல்லது சென்சேஷனல் அடிப்படையில் பார்க்கப்படும் . 
 
ஆனால் காட்சிக் காட்சி இந்த அளவுக்கு கைதட்டி சிரித்து ரசிக்கக் கூடிய இன்னொரு ஆவணப் படத்தொடர் உலக அளவில் கூட ஏதேனும் வந்திருக்குமா தெரியவில்லை . 
 
அப்படி மனசுக்கு நெருக்கமாகி , பின்னர் உயிர் உருக வைக்கிறது படத்தில் வரும் உண்மைகள். 
 
வீரப்பன் சொல்லச் சொல்ல அதற்கு ஏற்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டவையாக வர,   சித்தரிக்கப்பட்ட அந்த அத்தனை காட்சிகளிலும் யாரும் ஒரு வார்த்தை கூட வசனமாகப் பேசி இருக்க மாட்டார்கள் . அப்படிப் பேசினால் அவை எல்லாம் தனித்தனி கதாபாத்திரங்களாக மாறி , கற்பனையாக எழுதப்பட்டவை என்ற தவறான முடிவுக்கு ஆளாகும் என்பதை உணர்ந்து …
 
இப்படி  உருவாக்கினார்கள்  பாருங்கள்….  இந்தத் தொடரின்  மாபெரும் படைப்புச் சிறப்பு அதுதான் .  இந்த ஐடியாவை யார் கொடுத்தாரோ அவர்தான் இந்த தொடரின் மேன்/ உமன் ஆஃப் தி சீரிஸ் 
 
அதே நேரம் அன்று நிஜமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பேசும்  காட்சிகளின் துவக்க அல்லது கடைசி சில வார்த்தைகளை மட்டும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளின் வாயசைவில் ஒத்திசைவு செய்து  சபாஷ் வாங்கவும் செய்கிறார்கள் இந்த ஐடியாவை  கொடுத்தவர்   மேன்/ உமன் ஆஃப் தி சீரிஸ் – 2. 
 
சும்மா.. சொல்லக் கூடாது .. சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேல், விவேக் , சந்தானம் , யோகிபாபு இவர்களின் ஒட்டு மொத்த குணாதிசயமும்  சேர்ந்து நடித்த ஒரு காமெடி கேரக்டர் , எம் ஜி ஆர் , ரஜினி , விஜய் மூவரும் சேர்ந்து நடித்த ஒரு ஹீரோ கேரக்டர் இவற்றின் கலவை கொடுக்கும் உணர்வை அப்படியே கொடுக்கிறது வீரப்பனின் உண்மையான பேச்சும் உணர்வும் உடல் மொழிகளும்  என்று சொன்னால் அது சற்றேதான் மிகை. 
 
வீரப்பன்  சொன்ன பல விஷயங்கள் இன்றும் மாறாமல் இருப்பதும் வீரப்பன் யூகித்த அரசியல் விஷயங்கள் அப்படியே நடந்திருப்பதும் அட போட வைக்கிறது. குறிப்பாக ரஜினியின் அரசியல் பற்றி வீரப்பன் சொன்ன விஷயங்கள் அப்படியே நடந்திருப்பது அமோகம் . 
 
நிச்சயமாக ரஜினி அந்தக் காட்சிகளைப் பார்த்தால் ஒரு நிமிடம் ஆடித்தான் போவார். 
 
பொதுவாக ஒரு படைப்பில்  இரண்டு தரப்பை பேலன்ஸ் செய்ய சில காட்சிகள் வைக்கும்போது … நல்லவர்கள் அப்பாவிகள் என்று சொல்லப்படுவோர் தரப்பு இயல்பாகவே வலிமையாக இருக்க, தவறானவர்கள் என்று தோன்றும் தரப்பை தூக்கிக் காட்ட படைப்பாளிகள் பிரம்மப்பிரயத்தனப்பட்டு காட்சிகள் வைக்க வேண்டும் 
 
ஆனால் இதில் வீரப்பன் தரப்பு எந்த   முனைப்பும் இல்லாமலே வலிமையாக இருக்க, அதற்கு எதிரான தரப்பை சமமாகக்காட்ட படைப்பாளிகள் போராடி இருப்பது ஒரு வியப்பான முரண் 
 
வீரப்பன் விசயத்தில்  நடந்த விசயங்களை இந்த தொடரில்  பேசும் நபர்கள் எல்லோருமே வீரப்பனுக்கு ஆதரவானவர்கள் இல்லை.
 
கடுமையான எதிர் பார்வை கொண்டவர்களும் பேசி இருக்கிறார்கள் . (குறிப்பாக அந்த கர்நாடக பத்திரிக்கையாளர் முழுப் பூசணிக்காய்கள் மூன்று,  நான்கை  ஒரு கரண்டிச் சோறில் மறைக்க முயன்று பதட்டத்தோடு பேசுவது அவர் முகத்திலேயே தெரிவது வேறு வித நகைச்சுவை . அவர் உட்பட ) வீரப்பனுக்கு எதிராகப் பேசும் அனைவரின் மாற்றுக் கருத்துகள் மற்றும் பொய்களுக்கு எதிராக இன்னொருவரின் வாதத்தை வைக்காமல் , பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்ப் பேச்சை பதிலாகக் காட்டி ,
 
வீரப்பன் தரப்பின் நியாயத்தை அமைதியாக ஆழமாக பெருந்தன்மையாக உணர்த்தும்  உத்தியில் சும்மா  ஜொலிக்கிறது இந்தப் படக் குழு 
 
சீமானும் நடிகை ரோகிணியும் குறைவாகப் பேசினாலும் கூர்மையாகப் பேசி இருக்கிறார்கள் 
 
ஆறு அத்தியாயங்களில் முதல் சீசனை நிறுத்தி  இரண்டாம் சீசனில் தொடரும் என்று போட்டு இருப்பதற்கு பதில்…. இன்னொரு ஆறு அத்தியாயங்கள் சேர்த்து மொத்தமாக ஒரே மூச்சாக விட்டிருந்தால் இந்தத் தொடர்  இன்னும் பின்னிப் பெடல் எடுத்து இருக்கும் . 
 
அது முடியாமல் போனதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சில ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள்  இருந்தாலும் , இந்த முதல் சீசனைப் பார்த்த பிறகு வருவதற்கு  வாய்ப்புள்ள எதிர்வினைகளால் இரண்டாம் சீசனில்  சொல்ல நினைக்கிற  விசயங்களை எல்லாம் முழுமையாக சொல்ல முடியுமா என்ற கேள்வி வருகிறது . படக் குழு அதில் ஜெயிக்க  வாழ்த்துகள் . 
 
அதே நேரம் இரண்டாம் சீசனில் இருக்க வேண்டிய விஷயங்கள் என்ற ஓர் எதிர்பார்ப்புப் பட்டியல் உருவாவதை தவிர்க்க முடியவில்லை. 
 
1. ராஜ்குமாரை வீரப்பன் கண்ணியமாக நடத்திய விதம் 
 
2. நாகப்பாவின் எதிர்வினைகள் 
 
3. ராஜ்குமார் காட்டில் இருக்கும்போது, வீரப்பன் அண்ணா.. என்று சென்டிமென்ட்டாகப் பேசி கோரிக்கை வைத்த  ராஜ்குமாரின் மனைவி வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்த பிறகு வீரப்பனை கேவலமாக வசைபாடியது … 
 
4.வீரப்பன் வசம் ராஜ்குமார் இருந்த போது அமைதியாக இருந்த கர்நாடகம் வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்த பிறகு பழைய கோரமுகம் காட்டியது 
 
5. அக்கறை மற்றும் கண்ணியம் காரணமாக பெங்களூர் போய் கர்னாடக முதல்வரோடு சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை நோக்கி  கன்னடப் பத்திரிக்கையாளர்கள் அடிப்பது போலப் பாய்ந்து வந்தது…. 
 
6. ராஜ்குமார் கடத்தலின் போது ரஜினியின் மன நிலை … 
 
7. சிவாஜியின்  ரசிகனான  வீரப்பன் … ராஜ்குமார் விடுதலைக்காக சந்தோஷப்பட்ட சிவாஜி அதே நேரம் வீரப்பனை  பாராட்டியது … 
 
8. வீரப்பன் காலத்தில் பல்லுயிர்ப் பெருக்க சுழற்சியில்  உலகின் சிறந்த காடுகளில் ஒன்றாக மாறிய அந்தக் காடு வீரப்பன் மறைவுக்குப் பிறகு கனிம வளங்களுக்காக கொள்ளையடிக்கப்பட்டு தனது சிறப்பை இழந்தது .. 
 
9.  விடுதலைப் புலிகள் ,, தமிழ்நாடு விடுதலைப்படை இவற்றுக்கும் வீரப்பனுக்கும் ஏற்பட்ட தொடர்பு , அதன் விளைவுகள்…
 
10. வீரப்பனின் பல கோடி பணத்தை கடைசியில் ஆட்டையைப் போட்ட அயோக்கியர்கள், திருடி விட்டு வெளியே யோக்கிய வேஷம் போடுபவர்கள்… 
 
11 வீரப்பனின் மரணத்துக்குப் பிறகும் அவரது குடும்பம் உறவுகள் மக்கள் ஆகியோர் தமிழகம் மட்டுமின்றி கர்னாடக போலீசாரால் பாதிக்கப்பட்டது.. 
 
12 . இவற்றோடு வீரப்பன் வீழ்த்தப்பட்ட விதத்தை சமரசம் இன்றி  சொல்வது .. 
 
இவற்றை எல்லாம் இரண்டாவது சீசனில் அழுத்தமாகச் சொன்னால் இந்த தொடரின் தரம் உலகத் தரம் என்றே ஆகும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *