தம்பி ராமையா பேசும் பொழுது “தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனிதமனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது .படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி “என்றார்.
நடிகர் செந்தில் பேசும்போது அருமையான படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘மூணாறு’ ரமேஷ் பேசும்போது,சிறுவயதில் இருந்து தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் அவருடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமை கொள்வதாகவும் அவருடைய மகளின் இயக்கத்தில் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், கூறினார்.
நடிகை நிரோஷா பேசும்போது ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்ததாகவும் கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனதாகவும், அதனால் தனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்ததாகவும் இந்த திரைப்படம் மூலமாக திரு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்துள்ளதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான நடிப்பை ஐஸ்வர்யா பெற்றுக் கொள்வார் என்று பாராட்டினார்.
தங்கதுரை தனது பேச்சில், முதல்முறையாக ரஜினியுடன் நடிப்பது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் நகைச்சுவை கதாபத்திரமாக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரமும் கொடுத்துள்ளார்கள் என்றும் ஒரு திரைப்படப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்த படம் கொடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
விக்ராந்த் பேசும் போது, தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தபோது இந்த வாய்ப்பு வந்ததாகவும், அப்பொழுது தான் தனக்கு இன்னும் திரைப்பயணம் இருப்பதாக உணர்ந்ததாகவும் இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ரஜினியுடன் இந்த படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்ததாகவும் நல்ல ஊக்கம் அளித்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். . தன்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஆடை வடிவமைப்பாளர் சத்யா என் ஜே பேசும்போது லால் சலாம் திரைப்படம் 90-களின் காலகட்டங்களில் திரைக்கதை அமைந்து இருப்பதால் அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வடிவமைப்பது தனக்கு ஒரு சவால் நிறைந்த பணியாக இருந்ததாக கூறினார். கூடவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் தனக்கு அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
நிறைவுரையாற்றிய .ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ” ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது.”என்றார்