
சென்னை ஹாரிங்டன் சாலையிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளிக்கூடத்தில் 5 அடி 6 அங்குல உயரத்துக்குக் குறைவான பெண்களுக்கான PETITE Princess என்னும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்வில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப் பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் மட்டும் எழுந்து நின்று மரியாதை செய்ய , சிலர் கொஞ்சமும் மதிக்காமல் மேல மழை பெஞ்சாலும் உரைக்காத ஜீவன்கள் மாதிரி உட்கார்ந்தே இருந்திருக்கின்றனர் .
பாடல் முடிந்ததும் மேடை ஏறிய பத்திரிக்கையாளர் துரை மேடையில் இருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடம் , நிகழ்ச்சியை நடத்துபவர்களிடமும் ”இப்படி எந்த வித அறிவிப்பும்மின்றி தமிழ்த் தாய் வாழ்த்ததை ஒலிக்க வைப்பது தவறு.
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியமைக்கு உடனடியாக மேடையில் மன்னிப்பு கேளுங்கள் ” என்று சொல்லி இருக்கிறார் . ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை .
மேற்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் … விஜய் டிவி புகழ் மற்றும் சில தமிழ் படங்களில் இப்போது கதாநாயகனாக நடித்து வரும் மா கா பா ஆனந்த்
(தம்பி … உங்க பேருக்கு முன்னாடி உள்ள முதலெழுத்து மூன்றையும் தமிழ்ல போட்டு இருக்கீங்களே… அது என்ன … சின்ன வயசுல உங்க வாய் நல்லா தொறந்து மூடணும்கறதுக்காக, உங்க அப்பா அம்மா பண்ணின முடக்கு நீக்க மருத்துவமா ?) )
அதோடு விடாமல் துரை , நிகழ்ச்சி அமைப்பாளரான ஒரு பெண்ணிடம் போய் ” நீங்கள் செய்வது தவறு . உடனடியாக மேடையில் மன்னிப்புக் கேளுங்கள்” என்று கூறியபோது ” அதைச் சொல்ல நீங்க யாரு?” என்றார் எகிறி இருக்கிறார் அந்தப் பெண் . (ஏம்மா.. உனக்கு எல்லாம் திருவள்ளுவரா வரணும் ?)
உடனே துரை அங்கிருந்தபடியே விசயத்தை முக நூலில் பதிவு செய்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தையும் இணைப்பு செய்ய அதற்கு வந்த ஆதரவைப் பார்த்து நிகழ்ச்சி முடியும்போது போனால் போகிறது என்று,
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தப்பு நடந்துடுச்சு என்றது கடமைக்கு ஒரு மன்னிப்புக் கேட்டு இருக்கிறார் மா கா பா ஆனந்த் .
அறிவிப்பே செய்யாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்தது எப்படி தொழில் நுட்பக் கோளாறு ஆகும் ?
தாய்மொழியை அவமானப்படுத்தும் தவறொன்றை செய்த நிலையில் மனப் பூர்வமாக மன்னிப்புக் கேட்பதில் என்ன மகுடம் கழன்று விடும் ?
முதலெழுத்து ஒண்ணுக்கு மூணா தமிழ்ல போட்டு இருக்கற உங்களுக்கே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பது தப்புன்னு உறைக்கல.
அப்போ நிகழ்ச்சி நடத்தின மத்தவங்களுக்கு எப்படி உறைக்கும்?
தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க செய்ய வேண்டும் என்றால்
1) முதலில் அறிவிப்புச் செய்ய வேண்டும் .
2) எழுந்து நிற்கச் சொல்வதும் அந்த அறிவிப்பில் இருக்க வேண்டும் . தமிழ் மொழி அறியாதவர்கள் இருந்தால் அவர்கள் அறிவதற்காக , எழுந்து நிற்கச் சொல்லும் அறிவிப்பை ஆங்கிலத்திலும் சொல்ல வேண்டும்
3) எல்லோரும் எழுந்து நின்ற பிறகே ஒலிக்கச் செய்ய வேண்டும் .
4) நிற்க முடியாதோர் வணக்கம் செலுத்துகிற உடல் மொழியோடு அமர்ந்து இருக்க வேண்டும் .
இதை செய்ய வக்கில்லை என்றால் ….
நிகழ்ச்சி நடததினவங்களுக்கு ஒரு கேள்வி ?
உங்களை எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் போடச்சொல்லி யாரு அழுதா ?
கற்பூர வாசனை தெரியாதுன்னு ஆன பிறகு , ஆரத்திக்கு ஏன் ஆசைப்படணும்?