லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த மதுரைக்காரத் தம்பி வி.கே.விஜய் கண்ணா, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் வழியில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்தப் பேச்சில் தன்னைப் பற்றி சொல்ல , அந்த சக பயணியும் ஆர்வமாகக் கேட்க…..
அதன் தொடர்ச்சியாக ”உங்களுக்கு தெரிஞ்ச புரடியூசர் யாராவது இருந்தா சொல்லுங்க .. என்று விஜய் கண்ணா சொல்ல , அந்த சக பயணியும் தனது விசிட்டிங் கார்டை கொடுத்து ” ஆபீஸ் வாங்க” என்று சொல்ல , பல நாட்கள் கழித்து மீண்டும் சென்னையில் அவரை சந்திக்கும் வரை விஜய் கண்ணாவுக்கு தெரியாது….
அவர்தான் இரவும் பகலும் , நேற்று இன்று , போன்ற படங்களை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் எஸ் தணிகைவேல் என்பது ! இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல … ஒரு சினிமா உருவான கதை .
அப்புறம் என்ன?
RSSS பிக்சர்ஸ் சார்பில் S .தணிகை வேல் தயாரிக்க, அஜய், அர்ச்சனா, அப்புக்குட்டி, காதல் சுகுமார், உள்ளிட்ட பலர் நடிக்க , வி.கே விஜய் கண்ணாவின் கதை திரைக்கதை வசன இயக்கத்தில் உருவாகி விட்டது மதுரை மாவேந்தர்கள் திரைப்படம் .”இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி . ஜூன் மாதம் திரைக்கு வருக்றோம் ” என்கிறார் இயக்குனர் வி.கே விஜய் கண்ணா.
லண்டனில் படித்து விட்டு வந்து மதுரையைப் பற்றிய படமா என்றால் “எங்க படிச்சா என்ன சார் ? நம்ம ஊரு வாழ்க்கையைதானே நாம பேசணும்?” என்கிறார் இயக்குனர் . (பாசக்காரப் புள்ள )
என்ன கதை ?
அரசியல்வாதிக்கு சொந்தமான சீட்டுக் கம்பெனியில் மக்கள் பணம் போட , அவர் திட்டமிட்டே ஏமாற்றுகிறார். ஏமாந்தவர்களில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவின் குடும்பமும் ஒன்று . மகளின் திருமணத்துக்காக வீட்டை விற்று வைத்திருந்த பணம் போச்சே என்று அப்பா மனம் உடைய , மகனான ஹீரோவும் அவனது நண்பர்களும் எப்படி தங்கள் பணத்தை அரசியல்வாதியிடம் இருந்து மீட்டார்கள் என்பதை…….
காமெடியாக சொல்லும் படமாம் இது . ”கடைசியில் ஒரு நல்ல மெசேஜும் வைத்து இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர்
நிஜமாகவே ஏமாந்த மக்கள், படம் பார்த்து கொஞ்சமாவது சிரிச்சாலும், படம் எடுத்தவங்களுக்கு புண்ணியம்தானே .
வாழ்த்துகள் !