ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல் எல் பி சார்பில் வேணுகோபால், அனுபமா விக்ரம் சிங் இருவரும் தயாரிக்க, மைனா சேது, சம்ரிதி தாரா, பில் தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை திரைக்கதை வசனத்தில் ஏ பி ஜி ஏழுமலை இயக்கி இருக்கும் படம்.
சில்லறைத் திருட்டுகள் செய்து பிழைக்கும் ஒரு நபர் ( மைனா சேது ) ஒருமுறை திருடிவிட்டு இரவில் தப்பிக்கும்போது காட்டு வழியில் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான். மறுநாள் அங்கு வரும் ஓர் இளம்பெண் ( சம்ரிதி தாரா) அவனை கிணற்றில் இருந்து காப்பாற்றுகிறாள் .
மாய மந்திரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த அவளும் அவளது பாட்டியும் மட்டுமே காட்டுக்குள் குடிசை போட்டு ஏகாந்தமாக வசிக்கின்றனர் . திருடனுக்கும் பெண்ணுக்கும் காதல் . பாட்டிக்கு ஆரம்பத்தில் அது பிடிக்கவில்லை.
ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் (பி எல் தேனப்பன்) செய்த சில குற்றங்களில் இருந்து அவரைக் காப்பாற்ற பெரும்தொகையும் அதோடு குற்ற்வாளியாகக் காட்ட ஓர் ஆளும் கேட்கிறார். இன்ஸ்பெக்டர் .
திருடன் – இளம்பெண் இடையேயான காதலை பாட்டி ஏற்கும் நிலையில் அவனை குற்றவாளியாகக் காட்டி ஜெயிலில் தள்ளி கேஸ் முடிக்க பணக்கார நபரும் போலீசும் திட்டமிட , நடந்தது என்ன ?
ஏகாந்தமான வெளிகள், பெரும்பாலும் எல்லா காட்சிகளிலும் இரண்டு அல்லது மூன்றே கேரக்டர்கள், நாயகியின் பின்னணி என்று படத்தின் எளிய மேக்கிங் அழகு . பாட்டியாக வருபவரின் தோற்றம் அருமை . . பாராட்டுகள் இயக்குனர் ஏழுமலை
அழகான நடிப்பாலும் கொள்ளை கொள்கிறார் சம்ரிதி தாரா . நயன்தாரா என்று இப்போதே சொல்ல முடியாவிட்டாலும் ஃபைவ்தாரா என்று இப்போதே சொல்லலாம் . மைனா சேதுவும் சின்சியராக நடித்துள்ளார் .
சேர்வராயன் மலைப்பகுதி லொக்கேஷன், அமர் கீத் இசை , பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு ஆகியவை சிறப்பு .
படத்தின் மிகப் பெரிய மைனஸ் மொக்கையான திரைக்கதையும் காமா சோமா வசனங்களும்தான் . நாயகி பாட்டியின் மாய மந்திரம் செய்யும் பின்னணியை வைத்து அட்டகாசமான காட்சிகள் எழுதி அசத்தி இருக்கலாம் . ஆனா பேரு வைத்து விட்டு சோறு வைக்காமல் ஏமாற்றி இருக்கிறார் ஜெயமோகன் . பாட்டி சாராயம் குடிக்கும் சுருட்டு புடிக்கும் என்று சொன்னது மட்டுமே போதும் என்பது அவரது நம்பிக்கை .
கதாநாயகி விசயத்தில் ஒரு நிகழ்வு நடந்த உடனே படம் முடிந்து விட்டது . அதன் பிறகு அந்தப் படம் ஓரிரு நிமிடங்களில் முடிய வேண்டும். அதைப் புரிந்து கொள்ள நிஜமான திரைக்கதை அறிவு வேண்டும் .
ஜெயமோகனுக்கு அது இல்லாததால் நமத்துக் காய்ந்து போன அப்பளத்தை பல்லே இல்லாத நபர் ஊற வைத்து ஊறவைத்து மெல்லுவது போல சவக் சவக் என்று ஓடிக் கொண்டே இருக்கிறது படம் .
கருத்தியல் வஞ்சகங்கள் கொண்டவர் என்றாலும் ஜெயமோகன் திறமையான நாவலாசிரியர் . அவரது கதை ஏதும் பிடித்து இருந்தால் அதை வாங்கிக் கொண்டு அதில் அவர் கொட்டி வைத்து இருக்கும் கசடுகளைக் கழுவி விட்டு சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதை அமைத்து வசனம் எழுதி படமாக்குவதுதான் அறிவுடைமை
ஜெயமோகனுக்கு என்ன திரைக்கதை தெரியும் . மணிரத்னம் படத்துக்கு வசனம் எழுதுவதே நல்ல திரைக்கதை அறிவுக்கான தகுதியா?
அது புரியாமல் கதை திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் ஜெயமொகனிடமே கொடுத்து விட்டு அவர் ஓ பி அடித்து எழுதிக் கொடுத்ததை ”அப்படியே எடு…” என்று கண்மூடித்தனமாக இயக்குனரை வாட்டி எடுத்தால் படம் இப்படி தான் மயிலைப் பிடிக்கப் போய் கோட்டான் பிடித்து வந்த கொடுமையாய் மாறும்.
