வித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘

சிறப்பான டிரைலர் மற்றும் நன்றாக படமாக்கப் பட்ட பாடல்கள் உள்ள படங்கள் எல்லாம் நல்ல திரைக்கதையோடு வெற்றிப் படமாக அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . 

ஆனால் சில படங்களின் டிரைலர் மற்றும் பாடல்கள் மட்டும் அது கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும் என்ற  புரிதலை இயல்பாக ஏற்படுத்தி விடும் . 
 
அப்படி ஒரு படமாக  ‘ஓ மை கடவுளே’ படத்தை எளிதாக உணரமுடிகிறது . 
 
அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை (Happy High ) பிக்சர்ஸ் சார்பில்  அபிநயா செல்வம்  ஆகியோர் தயாரிப்பில் , 
 
அசோக் செல்வன், ரித்திகா சிங் ,வாணி போஜன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி  ஆகியோர் நடிக்க , சிறப்பான குறும்படங்கள் பலவற்றை இதுவரை இயக்கி இருக்கும்  அஷ்வத் மாரிமுத்து  எழுதி இயக்கி இருக்கும் படம்  இது . 
 
காதல் நட்பு இவற்றை வித்தியாசமான கோணத்தில் ஆழமாக அணுகி இருக்கும் படமாக இப்போதே கொண்டாடப்படும்  ‘ஓ மை கடவுளே’  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது . 
 
இளமை, இனிமை , அர்த்தம் , செறிந்த முன்னோட்டமும் ,   லியான் ஜேம்ஸ் இசையில் விது அயன்னா இசையில்  காது, கண் மொத்தத்தில் மனசுக்கு இதமாக வந்திருக்கும் பாடல்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்தபோது , 
 
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது 
 
நிகழ்ச்சியில் படத்தின் அடிப்படைத் தயாரிப்பாளரான அபிநயா செல்வம் தனது பேச்சில் ,
 
” நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். சிறு வயதில் அவன்   விரும்பிய பெண்களிடம் அவன் தெரிவித்த பல விசயங்களை எழுதிக் கொடுத்தது நான்தான் .  என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்ககூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.  நன்றி.” என்றார் 

நிர்வாக தயாரிப்பாளர் நோவா , “சினிமாவில் ஜெயிக்கும் அதே நேரம்  மனதுக்கு பிடித்த படத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் டீம் நாங்கள். நண்பர்களாக இணைந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள் எப்போதும் தோற்பதில்லை. இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும் ” என்றார் 

ஒளிப்பதிவாளர்  விது அயன்னா , “இது என்னோட மூன்றாவது படம் “மேயாத மான், எல் கே ஜி” என ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானர். காதல் படம் என்றால் எனக்கு பிடிக்கும். இதுவும் காதல் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் மிகத் தெளிவானவராக இருந்தார். விஷுவல் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். எல் கே ஜி படத்தை ரிலீஸ் செய்தசக்தி பிலிம் பேக்டரி சக்தி  வேலன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அது எனக்கு  மிகப்பெரும் மகிழ்ச்சி ” என்றார் 

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலன் , “டில்லிபாபு சாரை முதலில் பார்த்த போது நீங்கள் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். பிஸுனஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம் என்றார். படம் அருமையாகவே இருந்தது. கடைசியாக சில்லுகருப்பட்டி ரிலீஸ் செய்தேன். அதே மனதுடன் நேர்மறைத்  தன்மையுடன் இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்கிறேன். இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஒரு டீமாக எந்த ஈகோவும் இல்லாமல் வேலை செய்துள்ளார்கள். ” என்றார் 

நடிகர் சாரா பேசும்போது, “இது கிட்டதட்ட என்னோட ரூம்மேட்கள் சேர்ந்து  எடுத்த படம். எல்லோரும் சேர்ந்து வேலை செய்தது மிக மகிழ்ச்சி. படப்பிடிப்பு நார்மலாகவே இருக்காது . நண்பர்கள் சேர்ந்தால் நடக்கும் கலாட்டா எல்லாமே நடக்கும். ஹீரோயின் ரித்திகாவுடன் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மிக எளிமையானவர்.  தானே மேக்கப் போட்டுக்கொண்டு இயல்பாக  பந்தாவே இல்லாமல் இருந்தார். பாடல்கள் அருமையாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் “என்றார். 

நடிகை வாணி போஜன் , “ஒரு படம் செய்யும் போது அந்தப்படத்தில் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.  எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது என்று. இது எங்கள் படம் . கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் “என்றார் 

நடிகை ரித்திகா சிங் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப் படக்குழுவினர்  என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி  வர வேண்டும் என்பதில்  தெளிவாக இருப்பார்.

 
சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர்.  அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள்”என்றார் 

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசுகையில், ”  நாங்கள் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில்லை. சின்ன படஜெட் படங்கள் தான் எடுக்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. 

 
“ராட்சசன்” படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும் போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். எல்லாமே கடவுளின் செயல் போல் தான் நடக்கிறது. இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை  சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். மிக மிக இயல்பான நபராக இருந்தார். அர்ப்பணிப்பு மிக்கவரகா இருந்தார். 
 
அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார்.
 
வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி.   சாரா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார். இந்தப்படம் பார்ப்பவர்கள்  அனைவருக்கும் சாராவை பிடிக்கும்.
 
விஜய் சேதுபதி மிகுந்த ஆதரவாக இருந்து நடித்து தந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திக்கு  படம் காட்டினேன் அவருக்கு படம் பிடித்திருந்தது. கட்டிப் பிடித்து பாராட்டினார். தெலுங்கில் இருந்து வந்து, இந்தப் படத்தை   ரிமேக் செய்ய இப்போதே அணுகினார்கள். படம் ரிலீஸாகும் முன்பே எங்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது. அதை பெருமையாக  நினைக்கிறேன். பூபதி அருமையாக எடிட் செய்திருக்கிறார்.  
 
என்னை அதிகம் காயப்படுத்திய இயக்குநர் அஷ்வத் தான் ஆனால் அதிகமான சந்தோஷம் தந்த படத்தை தந்திருக்கிறார்.அவருடன் இன்னும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன். படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் அப்போது தான் அடுத்தவர்களுக்கு பிடிக்கும்.  பாடல்கள் மற்றும்  டிரெயலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் 
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் , “ஒரு சூப்பரான ஃபிரஷ்ஷான டீமுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இது ஒரு ஃபேண்டஸி ரோம் காம் ஸ்டோரி. அஷவத் மிகத்தெளிவாக எழுதுபவர். அற்புதமான படைப்பாளி. மிகத்திறமை வாய்ந்தவர். இந்தப்படம் ரசிகனாக என்னை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இதில் எட்டு  பாடல்கள். படம் எல்லோருக்கும் விருந்தாக இருக்கும்” என்றார் 

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து  பேசுகையில், ” இந்த மேடை நெடு நாளைய கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகு தான் நம்ப ஆரம்பித்தார்கள். இப்போது வரை பெரிய ஆதரவாக உள்ளார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது.  

 
அசோக் எனது நெருங்கிய  நண்பன். அபியிடம் அனுப்பி கதை சொல்ல சொன்னார் அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் டில்லிபாபு அவரை முதலில் சந்தித்த போதே லேட்டாகத்தான் போனேன். ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. எந்த ஈகோ இல்லாமல் ராட்சசனுக்கு பிறகு என் படம் தயாரிக்க ஒத்துகொண்டார். அவர் இல்லை என்றால் இந்த மேடை இல்லை. 
 
இந்த டீமில் இருக்கும் அனைவருமே தங்கமான மனிதர்கள். லியான் ஜேம்ஸ் என்னோட அலைவரிசையில் இயங்கும் மனிதர். அவருக்கு லவ் என்றால் பிடிக்கும். இந்தப்படத்தில் இசை வெகு முக்கியம் அதை அவர் நிவர்த்தி செய்துள்ளார். சாராவை இதுவரையிலும் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. இப்படத்தில் அவரை அனைவருக்கும் பிடிக்கும். 
 
வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன்  அவரே முன்வந்து இந்தக் கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப் படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அவர் மிக எளிமையாக இருந்தார். மிக மிக அர்ப்பணிப்பானவர். அவர் நிறைய தமிழ் படங்கள் செய்ய வேண்டும். 
 
பூபதி என்னுடைய காலேஜ் ஜீனியர் என்னுடைய குறுமபடத்திலிருந்து அவர் தான் எடிட்டர். இனிமேல் செய்யும் படங்களுக்கும் அவர் தான் செய்வார். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும்.  நான் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்பவர். அவரது முழுத்திறமையை இப்படம்  வெளியில் காட்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் 

நிறைவாகப் பேசிய நடிகர் அசோக் செல்வன், ” என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். 

 
விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார்.
 
 சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். 
 
அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப் படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்.   அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார்.
 
 விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள் ” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *