சினி கிராப்ட் புரடக்ஷன்ஸ் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் சார்பில் ரவி ராஜா மற்றும் லக்ஷ்மி ராஜா தயாரிக்க, கவுண்டமணி , யோகி பாபு, ராஜேந்திரன், ரவி மரியா, ஓ ஏ கே சுந்தர் நடிப்பில் சாய் ராஜகோபால் எழுதி இயக்கி இருக்கும் படம் .
தேர்தலில் ஒத்தை ஓட்டு மட்டும் வாங்கித் தோற்றுப் போன (கவனிக்கவும் ஒத்தை ஓட்டு வித்தியாசத்தில் அல்ல ) நபர் முத்தையா. ஆனால் கட்சியில் அவருக்கு பத்து முறை அமைச்சராக இருந்த ஆளுக்கு உள்ள அளவுக்கு அவ்வளவு மரியாதை. ஏன்னா அவரு கவுண்டமணி சார்.
அவர் தங்கையை மாற்றுக் கட்சி அரசியல்வாதி (ஓ கே சுந்தர்) குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கிறார் . அந்த மாப்பிளை குடித்து விட்டு மனைவியை சிகரெட்டால் சுட்டு கொடுமைப் படுத்திக் கொல்கிறான்.
அந்த வருத்தத்தில் இருக்கும் அவர் தன் மூன்று தங்கைகளையும் (மகள் ன்னு சொல்ல மாட்டாங்க. (ஏன்னா அவரு கவுண்டமணி சார்.. ) ஒரே வீட்டில் பிறந்த மூன்று மாப்பிள்ளைகளுக்கே கட்டி வைக்க திட்டமிடுகிறார் . ஆனால் அந்த தங்கைகளின் காதலர்கள் தங்களுக்கு ஒரு பொய் அம்மா அப்பாவை செட் செய்து பெண் பார்க்க வர,
தகவல் தெரிந்த ஒரு ஜெயில் கைதிக் குடும்பம் தனது ஃபோர் டுவென்ட்டி பிள்ளைகளுக்கு முத்தையாவின் தங்கைகளை கட்டி வைக்கத் திட்டமிட்டு வர , நடந்தது என்ன என்பதே படம்
உதயகீதம் என்று ஒரு படம்
அதில் இதே கவுண்டமணி ஜெயிலில் இருந்து வெளியே வந்து ஒரு கடைக்கு தேங்காய் வாங்கப் போவார் தேங்காய் கடைக்காரருக்கும் (பசி நாராயணன் என்று நினைக்கிறேன்) கவுண்டமணிக்கும் நடக்கும் உரையாடல் பின் வருமாறு
கவுண்டமணி ; ஏங்க.. தேங்காய் எவ்வளவு ?
கடைக்காரர் : அஞ்சு ரூபா
கவுண்டமணி : அஞ்சு ரூபாயா ?ஏங்க , ஒரு ரூவா ரெண்டு ரூபாய்க்கு எல்லாம் தேங்காய் கிடைக்காதா?
கடைக்காரர் : ஒரு ரூபா ரெண்டு ரூவாய்க்கா.. ? யோவ்.. நீ என்ன உள்ள இருந்துட்டு ( ஜெயிலில் இருந்து விட்டு ) வந்தியா?
திடுக்கிடும் கவுண்டமணி ; நான் உள்ள இருந்தது உனக்கு எப்படி தெரியும்?
கடைக்காரர் : பின்ன ஒரு ரூவா ரெண்டு ரூபாய்க்கு முழு தேங்காய் கேக்கற. தேங்கா பத்தைதான் கிடைக்கும்
இதுதான் அந்தக் காட்சி
இந்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தைப் பார்த்தபோது கவுண்டமணி உட்பட இந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லோரும் வருஷக் கணக்கா உள்ள இருந்துட்டு வந்தாங்களோ என்று கூட கேட்க முடியாது .
ஏன்னெறால் ஜெயிலில் கூட நிறைய புது படங்கள் போடுகிறார்கள் என்று கேள்வி .
அப்படிப்பட்ட ஒரு பழமையான கதை, காட்சிகள், வசனம் , இயக்கம், ஐட்டம் சாங்.
கவுண்டமணியின் நகைச்சுவையே அப்படிதான் இருக்கிறது .
சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண்நோய் உள்ள கவுண்டமணி திடீர் என்று காமெடி என்று சிரிப்பாரே.. அப்படி நாமாக சிரித்தால்தான் உண்டு . ஆனால் அப்படி சிரித்தால் சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணியை எல்லோரும் முறைப்பது போல நம்மையும் முறைக்க வாய்ப்பு உண்டு .
வெத்து வேட்டு சொத்தைய்யா.