தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே.
அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன் முக்கியமானவர்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும் படத்தை இயக்கி இருந்தார்.
வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது, “தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் நல்ல கலைஞர்களையும்
மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத்துறையிலுள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

என்னுடைய ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ ஆகிய படங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவையும், அங்கீகாரத்தையும்
நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி எனக்கு விருதுகள் வழங்கியிருகின்றன.
எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசியானது, திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு முன்னரே
துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்போது திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பெரியார் விருதானது தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் மூலம் 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது.

சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள் ராஜு முருகன், கோபி நயினார் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில்
இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள்.
மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக, வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.
மனித மாண்பும் கருத்துச் சுதந்திரமும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சூழலிலெல்லாம் இம்மண்ணில்

நம் தந்தை “பெரியார்” போன்ற தலைவர்கள் மூட்டிச் சென்ற அறிவுத்தீயே நமக்கு அரணாக இருந்துவருவதை யாவரும் அறிவோம்.
அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன்.
இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடன் பணிபுரிந்த தயாரிப்பாளர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்நேரத்தில் எனது கனிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சக படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்…!!
இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்