யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரித்து இசை அமைக்க, சுனைனா, நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் நடிப்பில் டொமின் டி’சில்வா இயக்கி இருக்கும் படம்.
மக்களுக்கு நன்மை செய்யும் கம்யூனிஸ்டு ஒருவருக்கு மகளாகப் பிறந்து, அந்த கம்யூனிஸ்ட் நபரின் நண்பரைக் கொல்வதற்குப் பதில் சிலர் அப்பாவைக் கொன்றுவிட, தப்பித்த கம்யூனிஸ்டு போராளியின் (பவா செல்லத்துரை) ஆதரவில் வளர்ந்து, வங்கியில் பணியாற்றும் நபரை (அனந்த் நாக்) மணந்து,

மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண்ணின் ( சுனைனா ) வாழ்வில் , வங்கியில் முக மூடிக் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும்போது கணவனைக் கொடூரமாகக் கொன்று விடுவது பேரிடியாக விழுகிறது .
கணவன் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டு பிடிக்க, அவள் முயல, போலீஸ் அவமதிக்க, வக்கீல் படுக்கைக்கு அழைக்க, ஒரு நிலையில் அவளே முயன்று கொள்ளைக்குக் கார் ஓட்டிய டிரைவரை (நிவாஸ் ஆதித்தன்) பிடித்து அவனை ஒரு விதமான பிளாக் மெயில் செய்து , கொள்ளையர்களை நான் பழிவாங்க உதவாவிட்டால் உன் மகளும் மனைவியும் (ரித்து மந்த்ரா) உனக்கு இல்லை என்கிறாள் .
அவனும் வேண்டா வெறுப்பாக அவள் சொல்படி ஆட, நடந்தது என்ன என்பதே படம்.
சுனைனாவுக்கு இதில் ரன்னிங் ரோல் . ஃபிளையிங் ரோல், வாக்கிங் ரோல், சிட்டிங் ரோல் , என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அப்படி காட்சிக்குக் காட்சி நீக்கமற நிறைந்து இருக்கிறார் . சற்றே லெஸ்பியன் சமாச்சாரம் எல்லாம் படத்தில் வருது .
டொமின் டி சில்வாவின் படமாக்கல் தரம்,.
தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் பாடல் இசையும் அதை விட பின்னணி இசையும் வெகு சிறப்பு.

பவி K.பவனின் ஒளிப்பதிவு, டோபி ஜான் படத்தொகுப்பு இவையும் சிறப்பு
வர்கலா கடலும் வண்டிப்பெரியாறு மூணாறு மலை லோக்கேஷனும் ரம்மியம்
நல்ல கதை . கொலைக்கான காரணம் என்று கடையில் சொல்வது கூட சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத விஷயம்தான். ஆனால் நம்பகத்தன்மையும் யதார்த்தமும் லாஜிக்கும் இல்லாத காட்சிகள், சினிமாத்தனமான ஆக்ஷன் காட்சிகள், வித்தியாசம் என்ற பெயரில் அரைகுறைக்காட்சிகள் எல்லாம் படத்துக்குப் பெரிய மைனஸ் .
தீனாவை சுட்டு விட்டு தப்பிப்பது எல்லாம் சினிமாத்தனம் என்றால் அதை சினிமாத்தனமே அவமானமாகக் கருதும்
ஒருவேளை சுனைனா பல விசயங்களை வெத்தலையில் மை போட்டுப் பார்த்துக் கண்டு பிடிக்கிறார் என்றால் அதையாவது சொல்லணும் இல்லியா?
அப்படி ஒரு அராஜகமான திரைக்கதை.
திருநெல்வேலியில் பிறந்த ஒரு கிராமத்துப் பெண் .. சென்னையே அவளுக்கு புதுசு என்ற நிலையில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கணவனை மீட்கப் போராடியதையே நம்பும்படி நெகிழ்வாக சொன்ன சினிமா, தமிழ் சினிமா.
அப்படி இருக்க , கம்யூனிஸ்டுகளால் வளர்க்கப்படும் ஒரு நவநாகரீகப் பெண் கணவனைக் கொன்றவர்களை கண்டு பிடிக்கப் போராடுவதை எப்படி எல்லாம் வித விதமான ஜானர்களில் அசத்தலாக சொல்ல முடியும் ? காமெடியாகக் கூட முயலலாம் .
ஆனால் எந்த வகையிலும் மனதுக்கு நெருக்கமாகாத வகையில் திரையில் மிதக்கிறாள் ரெஜினா