RTS Film Factory சார்பில் திருமால் லட்சுமணன், ஷியாமளா ஆகியோர் தயாரிக்க, நட்டி, அருண் பாண்டியன், பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் , யுவினா பார்கவி ஆதித்யா ஷிவக் ஆகியோர் நடிப்பில், ஜில்லா புலி படங்களில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்து உள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கி இருக்கும் படம் .
கல்லூரி இளைஞனான தன் மகன் ( ஆதித்யா ஷிவக்) காணமல் போன நிலையில், போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார் ஒரு தந்தை ( அருண் பாண்டியன்)
. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் (நட்டி நடராஜ்)பிரதமரின் பந்தோபஸ்துக்கு ஒரு டீமோடு போய் விட, ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் , பெண் போலீஸ் , ஏட்டு (மூணாறு ரமேஷ்) , அந்த ஏட்டுக்கு பொருட்களை திருடிக் கொண்டு வந்து தரும் ஒரு திருடன் (டைகர் தங்கதுரை) , லாக்கப்பில் சில கைதிகள் மட்டும் இருகின்றனர் .
புகார் தர வந்த அப்பாவை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர் ஏட்டுவும் சப் இன்ஸ்பெக்டரும்.
ஒரு ஆள் வந்து லாக்கப்பில் உள்ள கைதிகளை ஏட்டுவின் உதவியோடு மீட்டுக் கொண்டு போகிறான் .
மகனைக் கண்டு பிடிக்கச் சொல்லி அப்பா தொடர்ந்து வந்து அவமானத்துக்கு ஆளாகிறார்
இந்த நிலையில் திருட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களுக்குக் கொடுக்கும் நிகழ்ச்சி ஸ்டேஷனில் நடக்க, அதோடு சம்மந்தம் இல்லாமல் ஒரு லேப் டாப்பும் சேர்ந்து இருக்கிறது . எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
அந்த நேரம் பார்த்து கல்யாண ஏற்பாட்டுக்காக லீவில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டர் (அக்ஷரா ரெட்டி ) பத்திரிக்கை கொடுக்க வருகிறார் .
அவர் லேப் டாப்பை இயக்குவது பற்றி ஏட்டுவுக்கு கற்றுக் கொடுக்க,
ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு இருக்கிறது . யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் . எல்லோரும் சாவீர்கள் என்கிறது .
ஆட்கள் உள்ளே வர, வெளியே ஓடிய ஒருவன் வெடித்து உயிர் ஆபத்துக்குப் போக, எல்லோருக்கும் சீரியஸ்நெஸ் புரிகிறது .
எல்லோரும் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்றால் நீதிபதி ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறது மிரட்டல் குரல்.
நீதிபதி ( வினோதினி வைத்யநாதன் ) வர, போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் செட்டப் உருவாகிறது .
அரசியல்வாதிகளுக்கு துணை போவதற்காக, போலீசே ஒரு பெண்ணுக்கு அநியாயம் இழைத்த கதையை சொல்லி , அவன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் பாம் வெடிக்கும் ; நீதிபதி உட்பட எல்லோரும் சாவார்கள் என்கிறது குரல். .
என்ன நடந்தது என்பதே ரைட் .
உண்மையான குற்றவாளி யார் என்பதற்கு இடைவேளையில் காட்டும் ஆட்டம் , கிளைமாக்சில் வரும் திருப்பம் இரண்டுமே அட்டகாசம் . சற்று யூகிக்க முடியாத திருப்பங்கள் .
ஒருவேளை முன்னதை யூகித்தாலும் பின்னதை யூகிக்கவே முடியாது . அட்டகாசம் . அருமை .
போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் உருவாகும் விசயமும் ‘அட’ போட வைக்கிறது .
சில இடங்களில் வசனமும் பாராட்டும்படி இருக்கிறது . கடைசி நேர செண்டிமெண்ட் கொஞ்சம் ஒகே
ஒரு கதை சொல்ல முயன்று இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில் என்ன சொன்னார்கள் ? என்றால் ஒன்றும் இல்லை.
படம் முடியும் வரை எல்லாமும் பார்த்து சலித்த காட்சிகள், யூகிக்க முடிந்த கிளைமாக்சோடு படம் முடிகிறது .
காவல் நிலையமே பாம் பிளாஸ்டில் மாட்டுகிறது என்பதன் மூலம் பாதுகாப்பு தர வேண்டியவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுது என்றும் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் ஆகிறது என்றும் வித்தியாசமாந சூழலைப் பிடிததவர்கள் ,
அதே மாதிரி வித்தியாசமாக , கொஞ்சமாச்சும் புதுமையாக , ரசிகனை ஈர்க்கும்படி ஒரு குற்றத்தையும் அதன் விளைவையும் சொல்ல வேண்டாமா? இப்படியா ஆயிரம் முறை சொன்ன கதையை சொல்வது ?
அழகான பாத்திரத்தில் திரிந்து போன பால் இருந்தால் , ‘பாத்திரம் அழகாக இருக்கு’ என்று அதைக் குடிப்பது ரைட்டா?
சரிப்பா விடுங்க கிளம்பறோம் என்ற உணர்வே மிஞ்சுகிறது . செண்டிமெண்ட் காட்சிகள் கூட இந்த வழக்கமான கதையால் வீரியம் இழக்கின்றன .
இடைவேளை வரை நட்டி நடராஜ் இரண்டே காட்சிகளில்தான் வருகிறார் ; இவர் பெயரை முதலில் போடுகிறார்களே என்று ஆச்சர்ய்மாக இருந்தது . நல்ல வேளை இடைவேளைக்குப் பிறகு அதற்கான நியாயம் செய்தார்கள்.
வசனம் என்ற பெயரில் தப்பான மாடுலேஷனில் எரிச்சலூட்டும் ஓவரான குரல் நடிப்போடு சோதிக்கிறார் அருண் பாண்டியன் .
காஞ்சு சுருண்டு திரி திரியாக வரும் பழைய மைதா மாவு ரொட்டி போல, மெலிந்து வறண்டு சுருண்டு கிடக்கிறார் அக்ஷரா ரெட்டி . பிக் பாசில் பார்த்த அவரா இவர்?
அதுவும் ஒரு காட்சியில் அவரது புறங்கைக்கு ஒரு குளோசப் வைக்கிறார்கள் . காஞ்சுரிங் பேயின் கையைப் பார்த்தது போல இருக்கிறது . கைக்கு டூப் போட்டு இருக்கக் கூடாதா இயக்குனரே? அந்தப் பெண் போலீசின் புறங்கையையே குளோசப் எடுத்து மினிமம் லெங்த்தில் டக்கென்று போட்டு எடுத்திருக்கலாம். ஒத்து வரலியா? அந்த ஷாட்டையே தூக்கியாவது இருக்கலாம் .
ஏட்டுவின் கையை குளோசப்பில் பற்றி பெண் சப் இன்ஸ்பெக்டர் தன் புறங்கையைக் காட்டும் அந்த ஷாட் இல்லாவிட்டால் எந்தக் குடி மூழ்கி விடப் போகிறது படத்தொகுப்பாளர் நாகூரான்?
அஜித்துடன் வீரம் படத்தில் குழந்தையாக நடித்த யுவினா இளம் பெண்ணாக, ஏதோ பிக்னிக் வந்தது போல பேசி நடித்து விட்டுப் போகிறார் . எதுவும் அவருக்கு சொல்லித் தராமல் அவர் என்ன செய்கிறாரோ அதுதான் நடிப்பு என்று படம் பிடித்து இருக்கிறார்கள் . நடிப்பில் அப்படி ஒரு பிளாஸ்டிக் தன்மை .
மூணாறு ரமேஷ், வினோதிநி வைத்யநாதன், பெண் போலீசாக வருபவர் , ரோஷன் உதயகுமார் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளார் கள் . பாராட்டுகள். ஆதித்யா ஷிவக்.. சொல்ல ஒன்றும் இல்லை
பல காட்சிகளில் மூணாறு ரமேஷும் டைகர் தங்கதுரையும் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . அது ரசிக்கும்படி இருக்கிறதா இல்லையா என்று யூனிட்டில் யாரும் கவலைப்படவே இல்லை போல .
இரண்டு மணி நேரப் படம்தான் . அதற்கு ஏற்றபடி கூட அடர்த்தியாக சீன் எழுதாமல் நடந்ததையே ஆடியன்சுக்கு தெரிந்ததையே மீண்டும் மீண்டும் மாண்டேஜில் காட்டி இழுக்கிறார்கள் .
இது போன்ற காரணங்களால் குணா பால சுப்ர மணியத்தின் இசை , பத்மேஷின் ஒளிப்பதிவு ஆகியவையும் கவனம் பெறவில்லை பல காட்சிகளில் மலிவுப் பதிப்பாக இருக்கிறது ஒளிப்பதிவு .
எழுதுங்க சார் பிளீஸ் … முதல்ல உட்கார்ந்து எழுதுங்க . அப்புறமா ஷூட்டிங் போலாம் . ஒகே வா?
களம் வித்தியாசமாக இருப்பது போல கதையும் காரணங்களும் வித்தியாசமாக புதிதாக வலுவாக , நல்ல தெறிப்பான மேக்கிங்கோடு – இருந்திருந்தால் ,
ஆடியன்சும் போலாம் ரைட் என்று வந்து பார்த்து இருப்பார்கள்
அது இல்லாததால் …
ரைட் …. ராங்கை நோக்கி ஒரு டிக் அடித்த கதையாகி விட்டது .