ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரிக்க, கிராந்தி பிரசாத் என்பவர் இயக்க,
நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , ஷிவானி ,அபேக்ஷா என்று ,
முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ .
இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான்கு பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன .
நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்குமான போராட்டம் என்ற ஒரு வரியோடு அறிமுகப் படுத்தப் படும் இந்தப் படத்தின் முன்னோட்டம் ,
அதற்கு ஏற்ப நான்கு இளம் ஜோடிகள் தீய சக்தியிடம் காட்டில் மாட்டிக் கொள்ள நல்ல சக்தி அவர்களை காப்பது போன்று இருக்கும் என்பதை உணர்த்தியது .
சிவ நாக் என்பவர் இசையில் உருவான பாடல்கள் இனிமையாக ஈர்ப்பாக இருந்தன. கிராந்தி பிரசாத்தின் படமாக்கலும் சிறப்பாக இருந்தது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மணல் ஓவியக் கலைஞரின் கலை நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.
என்ன ஒரு அநியாயம் என்றால் படத்தில் வரும் நான்கு ஜோடிகளில் ஒரே ஒரு நடிகர் மட்டும் தமிழ்நாட்டுக்காரர் (போல தெரிகிறார்) .
மற்ற எல்லாரும் ஆந்திர கன்னட நடிக நடிகையர் . அதே போல பாடல் ஆசிரியர் தவிர மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும்,
ஆந்திர , கன்னட, அசாமி, பெங்காலி , மராத்தி , ஒரியர்கள் ! (கதையில் அதற்கான அவசியம் இருந்தால் ஒகே . ஆனால் அப்படி எதுவும் இல்லை )
கேட்டால் தமிழில்தான் படம் எடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி வந்தோம். என்கிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான கிராந்தி பிரசாத்.
தமிழில் படம் எடுக்க விரும்பியவருக்கு கால்வாசியாவது தமிழ்க் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையே, ஏன் ?
இது இப்படி இருக்க, “பாடல்கள் நன்றாக இருந்தும் , இங்கே உள்ள எந்த ஆடியோ கம்பெனியும் என் படத்தின் ஆடியோ ரைட்சை வாங்கவில்லை என்று பொங்கினார் இயக்குனர்.
” இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை.
பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள். யார் நடித்தது என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.
கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள் ளார்கள். நான் கேட்கிறேன் புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டீர்கள் ?
இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே ?” என்றார்.
அய்யா .. உங்க வீட்டு தக்காளி சட்னியும் ரத்தம் . தமிழ்நாட்டு ரத்தமும் உங்களுக்கு தக்காளி சட்னியா ?
சிறப்பு விருந்தினராக வந்து படத்தின் பாடல்களை வெளியிட்ட இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது
“இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு,
தமிழில் பேச முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார்.
எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது. என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது .
கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார்.அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார்.
இயக்குநர் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார் – பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும்.
நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் “பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்” என்று .
“பதினாறு வயதினிலே’ படத்தின் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம் ,உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம்.
முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம். ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது படப்பிடிப்பு ரத்து என்றார்கள்.
போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது, தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும் ?
அதே மாதிரி என் முதல் படம் நான் முதலில் இயக்கிய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது.
எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும், பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும் . வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும்.
கிராமத்தில் ‘விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு? வெறட்டி எதுக்கு ?’ என்பார்களே , அப்படி !
இந்தப் படத்தின் பாடல்களைப் பார்த்தேன். படம் இந்த வகை என்று முடிவு செய்ய முடியவில்லை. அதனால் படம் பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது. ” என்றார்.