யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி அருனச்சாலம் வைத்தியநாதன் இயக்க, சிறுவர்கள் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, சிறுமி ப்ரணிதி , சிநேகா, வெங்கட் பிரபு, சாய் தீனா, அருணாச்சலம் வைத்யநாதன் நடிப்பில் வந்திருக்கும் படம் (இணை திரைக்கதை ஆனந்த் ராகவ்)
சிறுவர் சிறுமியர் சிலர் நண்பர்கள் (கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி) செல்வச் செழிப்பு , படிப்பு ஆகியவற்றில் மேலோங்கிய மேட்டுக்குடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எளிய குடும்பத்து சிறுவன் ஒருவனுடனும் ( பூவையார்) அவர்களுக்கு நட்பு உண்டு .
சிறுவர்களில் ஒருவனான கைலாஷ் , அம்மாவிடம் போராடி அனுமதி பெற்று நாய் ஒன்றை எடுத்து வளர்க்கிறார்கள். ஒரே பையனான கைலாஷுக்கு அந்த நாய் ஒரு சகோதர உறவு.

ஒரு நிலையில் பெற்றோர் ஊரில் இல்லாத நிலையில் அந்த நாய் தொலைந்து விட, நாயைத் தேடி எல்லோரும் ஊரெங்கும் அலைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் திருடர்கள் , ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள், மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் அவர்கள் சிறுவர்களுக்கு தந்த அனுபவங்கள்.. நாய் என்ன ஆனது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதே படம்.
யூகிக்க முடிந்த திரைக்கதையும் காட்சிகளும்.
சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பிள்ளைகள் வகுப்பில் இந்தி படிப்பதைக் காட்சியில் காட்டுகிறார்கள். சிறுவர்களில் ஒருவனின் அப்பாவான சீக்கியர் தமிழ்ப் பற்று உள்ளவர் என்று ஒரு காட்சியில் கூறிவிட்டு அவரை அப்படியே பேக் பண்ணி அனுப்பி விட்டார்கள் .
அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் அனுபவம் காரணமாக எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது .
ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக சாடும்படி பூவையார் கதாபாத்திரதத்தைப் படைத்துள்ளதும் கவனிக்கத்தக்கது

வீணை மேலோங்கும் ராஜேஷ் வைத்யாவின் இசை , வண்ணமயமும் குளுமையும் நிறைந்த சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஆறுசாமியின் கலை இயக்கம் ஆகியவை மிக சிறப்பு
இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றாலும் குழந்தைகள் படம் என்பது பெரிய பிளஸ் .
பல விசயங்களில் ஒரு பக்கப் பாசம் தெரிந்தாலும், ஆபாசம் இல்லாததைப் பாராட்டலாம் .