
தலக்கோணம் படத்தில் ஹீரோவாக, நடனம் சண்டை எமோஷன் எல்லாவற்றிலும் பாராட்டும்படி நடித்த ஜிதேஷ் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்.
ராமராஜ் , மகாராஜா , சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கும் இவர் நடன இயக்குனர் ஸ்ரீதரிடம் நடனம் கற்று சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித் தரும் நடன இயக்குனராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தவர்.
விழா படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் இயக்கத்தில், கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சத்தியப் பிரமாணம் என்ற குறும்படம் , லண்டனில் எடுக்கப்பட்ட மிஸ்ஸிங் சேப்டர் (missing chapter) என்ற குறும்படம் உள்ளிட்ட சில குறும்படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேடை நாடகங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், பல மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார் என்பது சபாஷ் போட வேண்டிய சேதி.
“அப்படி நான் நடிச்ச ஒரு நாடகத்தை பார்த்துதான் ஈழத் தமிழரான ஸ்ரீ ஸ்கந்தராஜா அவரோட சிக்கிமுக்கி படம் மூலமா என்னை ஹீரோவா அறிமுகப்படுத்தினார் . மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் அது. அந்த படத்தைப் பார்த்துதான் தலக்கோணம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. “என்று ஆரம்பிக்கிறார் ஜிதேஷ்

“தலக்கோணம் படத்துல என் நடிப்பு நடனம் சண்டைக் காட்சிகள் எல்லாத்துக்கும் நல்ல பாராட்டு வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அந்த படத்தோட டைரக்டர் நல்லபடியா என்னை பயன்படுத்தியதற்கு நன்றி .
இன்னொரு முக்கியமான விஷயம் .
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கிட்ட நடனம் கத்துகிட்ட காலத்துல அவரோட உதவியால ஏகன் படத்துல அஜீத் சார் கூட ஒரு பாட்டுல நடனம் ஆடினேன் . அப்போ அவர் கூட இருந்து பேசி அவரோட பெருந்தன்மையான குணங்களை பார்த்து வியந்தது மறக்க முடியாத அனுபவம் .
ஏகன் படத்துல மட்டும் இல்ல…கலாபக் காதலன் படத்துல ஒரு பாட்டுல முழுக்க முழுக்க நடனம் ஆடி இருக்கேன் ” என்று தனது நடன ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். நாடகங்களிலும் தொடர்ந்து நடிப்பாராம் இவர் .
“அடுத்து என்ன படம் பண்றீங்க?” என்று கேட்டால் , “இப்போது எந்த படமும் இல்ல சார் ” என்று வெள்ளந்தியாக ஆரம்பிக்கிறார் .
ஆனாலும் தம்பி ரொம்ப விவரம் என்பது அடுத்து வரும் வார்த்தைகளில் தெரிகிறது. ” பெரிய நிறுவனங்கள் தயாரிச்சு கமர்ஷியல் ஹிட் கொடுத்த டைரக்டர்கள் படங்களில் நடிக்கணும் . சமந்தா , காஜல் அகர்வால் இவங்களுக்கு ஜோடியாக நடிக்கணும் ” என்கிறார் கண்கள் முழுக்க கனவுகள் மின்ன .
ஆனால் ஜிதேஷ் சம்மந்தப்பட்ட இன்னொரு விஷயம் அபாரமானது.
ஆங்கிலத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல்கள் படு பிரசித்தம். சர் ஆர்தர் கானன் டாயில் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதிய இந்த நாவல்கள் உலகை ஜெயித்தவை.

அந்த ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் ஜிதேஷை ஹீரோவாக போட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் படம் எடுக்க ஆவலாய் இருக்கிறார் ஒரு தயாரிப்பாளர் .
ஆனால் கொரியப் படத்தை காப்பி அடிப்பது மாதிரி அது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை .
ஷெர்லக் ஹோம்ஸ் கதையை சினிமாவ எடுக்க வேண்டுமானால் அதற்கு சர் ஆர்தர் கானன் டாயிலிடம் அனுமதி பெற வேண்டும் .
இல்லையெனில் உலகம் எங்கும் உள்ள அவரது ரசிகர்கள் அவரிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள் .
எனவே ஆர்தர் கானன் டாயிலிடம் திரைப்படம் எடுக்க அனுமதி பெறும் முயற்சியில் அவரிடம் போட்டுக் காட்டுவதற்காக ஒரு குறும்படத்துக்கான கதையை மட்டும் அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கி குறும்படமாக எடுத்து இருக்கிறார்கள் .
அதில் துப்பறியும் நிபுணர் ஷெர்லக் ஹோம்ஸாக நடித்து இருக்கிறார் ஜிதேஷ்.
இந்தப் படத்தை ஆர்தர் கானன் டாயில் பார்த்து, அவருக்கு பிடித்து விட்டால், தனது கதைகளை தமிழில் திரைப்படமாக எடுக்கவும் அனுமதி கொடுப்பாராம் .
ஆக கூடிய விரைவில் தமிழ் படத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் ஆக ஜிதேஷை பார்க்கலாம் . வாழ்த்துகள் ஜிதேஷ்
பின்குறிப்பு : தலைப்பை பார்த்ததும் நாங்க ஏதோ கிண்டல் பண்றோம்னு நினைச்சு இருப்பீங்களே!
நாங்கள்லாம் ரொம்ப நல்லவிய்ங்கப்பே…!
Comments are closed.