கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ்ராவ் தயாரிக்க, நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’.
படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார்.
‘யூடிவி’ தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் இயக்குனர் பிரவீன் காந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் பெற்றுக் கொண்டனர்..
படத்தின் முன்னோட்டமும் மூன்று பாடல்களும் திரையிடப்பட்டன. நவீன சித்தாந்தங்களில் ஊறிய அரசுகளும் முதலாளி வர்க்கங்களும் பழங்குடி மக்களின் வாழ்வை எப்படி சீரழிகின்றன என்பதை,
படம் பேசுகிறது என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
ஹரிஷ் – சதீஷ் மற்றும் ஜெர்மன் விஜய் ஆகியோர் இசையில் உருவான காதல் சோகப் பாடல் ஒன்று , புரட்சிப் பாடல் ஒன்று , கிளப் சாங் ஒன்று மூன்றும் நன்றாக இருந்தன .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்த் ” ஒரு படத்தில் நாசரின் கதாபாத்திரமும் கெட்டப்பும் நன்றாக இருந்தாலே அந்தப் படம் ஓடும் . இந்தப் படத்தில் அது இருக்கிறது .
அது போல பாடல்களின் முதல் வரி கவனம் கவர்வதாக இருக்க வேண்டும் . மூங்கில் பூவே என்று தொடங்கும் பாடல் , எடு எடு என்று துவங்கும் பாடல் , இன்றைய நவீனத்துக்கு ஏற்ப ,
ஆன்ட்ராய்டு என்று துவங்கும் பாடலும் அருமை . இதெல்லாம் இந்தப் படம் வெற்றி பெரும் என்பதற்கு அடையாளம் ” என்றார் .
(தனது ரட்சகன் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் துவங்குகிறார் பிரவீன் காந்த் )
எஸ்.வி.சேகர் பேசும் போது , ” இந்தப் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் என்னை அழைத்ததால் இங்கே நான் வந்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு மகேந்திரனைத் தெரியும்.
குழந்தை நட்சத்திரங்களில் எனக்குத் தெரிந்து ஒரே டேக்கில் நடித்து ஓகே வாங்குபவன் அவனாகவே இருப்பான்.
பிறகுஇடைவெளி விடாமல் ஏதாவது குறும்படம் அப்படி இப்படி ஏதாவது ஒரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறான்.
சினிமாவை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை.அவன் திறமைக்கு இன்னும் உயரம் செல்வான்.
நான் ஒரு விஷயம் எப்போதும் சொல்வேன் வாழ்த்து வாங்காவிட்டாலும் சாபம் வாங்காமல் இருக்க வேண்டும்.
சினிமாவில் எல்லாருக்கும் எல்லாரும் போட்டிதான் ஆனால் யாரும் எதிரியில்லை.நாசரை எல்லாருக்கும் பிடிக்கும் என்றார்கள். அதனால்தான் அவர் யாராலும் நிரப்பமுடியாத இடத்தை நிரப்பியிருக்கிறார்.
எல்லாருக்கும் பிடித்தவராக இருப்பது சிரமம்.
படத்துக்காக செய்த செலவு படத்தில் தெரிய வேண்டும். இதில் தெரிகிறது. அதற்காக பாராட்டுக்கள். இந்தத் தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொல்லும் போதே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.
தயவு செய்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள். நான் சென்சார் போர்டு உறுப்பினர் என்கிற முறையில் புதிய தயாரிப்பாளர்களுக்கு சொல்லவேண்டிய விஷயம் இதுதான்.
அப்படிப் போகும் போது நேர நெருக்கடிக்கு ஆளாகும் போது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டி வரும். சென்சாரில் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை வரும்.

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது. நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும் .சட்டப்படி தானே படம் எடுத்திருக்கிறோம்?
இது நம் தயாரிப்பு ,இதற்காக அவர்களிடம் கெஞ்சக் கூடாது. தைரியமாகப் பேச வேண்டும். உங்கள் படைப்பு மீது உங்களுக்கே நம்பிக்கை வேண்டும். இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லக் கூடாது.
வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டுப் போனால் தேவையில்லாத பதற்றம் வரும்..
படத்தின் கதை விவாதம், படப்பிடிப்புக்கு எல்லாம் பல மாதங்கள் ஒதுக்குகிறீர்கள் ஆனால் சென்சார் சான்றிதழ் மட்டும் உடனே வேண்டுமென்றால் எப்படி? சென்சாருக்கும் ஒரு மாதம் ஒதுக்குங்கள்.
நாம் யாரோடும் போட்டி போடக் கூடாது. உங்கள் பட்ஜெட்டுக்குள் எடுங்கள். ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் செலவாகிறது இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று படமெடுப்பது சுலபம் .அதை வியாபாரம் செய்வது சிரமம்.
சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல்நாளே டிவிடி கொண்டு வரலாம். அதன் மூலம் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்?
இதைச் செய்யாததால் யாரோ சம்பாதிக்கிறார்கள்.” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
நாசர் தன் பேச்சில் ” இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. பழங்குடியினர் பற்றிச் சமீபத்தில் படித்திருந்தேன்.
பூர்வகுடி மக்கள் சமகால அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்தக் கதையும் அதையே சொல்ல , அது என்னை ஈர்த்தது
இருந்தாலும் இப்படத்தில்நான் நடிக்க மறுத்தேன். காரணம் ஒன்று: தொடர்ந்து 14 நாட்கள் தொடர்ச்சியாக என்னால் நாட்களை ஒதுக்க முடியாது. வேறு வேறு படங்கள், வேலைகள் இருக்கின்றன.
காரணம் இரண்டு:. இது சிறு படம் , தயாரிப்பாளர் புதியவராக இருந்தார். நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்.
இருந்தாலும், பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும் போது என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் அப்படி பணத்தை இழந்தவன்தான்.
ஆனால் சிறுபடங்கள் எடுப்பவர்கள்தான் தங்களின் சொந்த முதலீட்டை வைத்து எடுப்பார்கள் .எனவே என் மனைவி கமீலாவிடம் இது பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தேன்
பிடித்த படம் விடவும் விரும்பாமல், படத்துக்கான14 நாட்கள் என்பதை 12 நாட்களாக்கி முடிப்பது என்று முடிவானது.
படப்பிடிப்புக்குப் போன பிறகுதான் பலவற்றை உணர்ந்தேன். எனக்கு முதுகுவலி இருந்தது. படப்பிடிப்பு நடக்குமிடம் மலைப் பிரதேசம்,அது நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் இருந்தது.
தங்கும் ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் காரில் போய் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் போய் பிறகு காரில் இப்படி மாறிமாறிப் போக வேண்டும்.
இந்தச் சிரமங்களைப் பார்த்து படப்பிடிப்பு இடத்திலேயே தங்கினேன். குழுவினர் 34 பேரும் ஒரே கூரையின் கீழ் தங்கியிருந்தோம். இப்படி ஒரு அற்புத அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை.
இப்படி இந்தப்பட அனுபவம் மறக்க முடியாத நாட்கள் ஆகிவிட்டன. வேறு வசதிகள் வேண்டுமா ?என்று தயாரிப்பாளர் கேட்ட போது வேண்டாம் என்றேன்
படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸதுக்காகவா? கேரவான் என்பது இன்று அந்தஸ்தின் குறியீடாக இருக்கிறது. அது வசதிக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
அங்கே இருந்தபோது நேர விரயமே இல்லை. ஒளிப்பதிவாளர் தேடித்தேடி அழகாக எடுப்பார்.
நானும் மகேந்திரனும் அப்பா மகன் போல இருந்தோம். எல்லாமே பகிர்ந்து கொண்டோம். நானும் அவனும் அங்கேயே ஒரு ஆவணப் படமே எடுத்து இருக்கிறோம்.
எல்லாரிடமும் பேசப் பழக ,பகிர அருமையான வாய்ப்பு கிடைத்தது.. நான் மிகவும் அனுபவித்து செய்த படம் இந்த ‘ திட்டிவாசல்’. அந்தப் படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே அழகான நாட்கள்.
பெரிய படத்துக்காக அந்த நாட்களை நான் விற்றிருந்தால் வாழ்க்கையில் இப்படி அழகான நாட்களை ,அற்புத அனுபவங்களை இழந்திருப்பேன்.
எல்லாருக்குமாக இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் ” இவ்வாறு நாசர் பேசினார்.
விழாவில் இசையமைப்பாளர்கள் ஹரீஷ், சதிஷ், ஜெர்மன் விஜய், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன், இயக்குநர்கள் ஆர். அரவிந்தராஜ்.
பட த்தை இயக்கிய மு.பிரதாப் முரளி ,நடிகர்கள் மகேந்திரன், ‘மைம்’ கோபி, அஜய்ரத்னம், தீரஜ்அஜய்ரத்னம், வினோத் கினி, பாடகர் சிரிஷ், பாடலாசிரியர்கள் ஜெ.சதீஷ், பி.சிவமுருகன்,
தயாரிப்பாளர்கள் கே.எம். கங்காதரராவ், ஜி.வெங்கட்ரமணா ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ் அனைவரையும் வரவேற்றார்.