நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேஷன் சார்பில் வேளாண்மை மற்றும் அதன் சார் தொழில்களில் சிறப்பாக இயங்கும் நபர்களுக்கு விருது வழங்கும் விழா ஆண்டு தோறும் நடக்கிறது .
இந்த ஆண்டுக்கான விழாவும் சிறப்பாக நடந்தது , சிவகுமார், கார்த்தி, இவர்களோடு நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் பாண்டிராஜ், ராஜ்கிரண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
விழாவில் கார்த்தி பேசும்போது, “சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த உழவன் பவுண்டேஷனுக்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்துதான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்கப் போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி.
இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடித் தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவன் யூ டியூப் சேனலைப் பின்பற்றுபவர்கள் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் என்னை நிறைய விழாக்களுக்கு அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த போது, விவசாயம் சார்ந்த பெர்னான்ட்ஷா மற்றும் ஆண்டனி தாஸ் போன்ற 30, 40 வருடங்களாக விவசாயம் செய்கின்றவர்களை அழைத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வரும்போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நம்முடைய நாயகர்கள்? இவர்களை ஏன் நாம் அடையாளப்படுத்தவில்லை? இவர்கள் ஏன் சமூகத்திற்கு தெரியவில்லை? எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது.
உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும் போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும்,புரிதலும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. இது அத்தியாவசியம், சமூகத்திற்கு முக்கியம், நம் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள்தான் நமது கதாநாயகர்கள், இவர்கள்தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று கூறுவது போல ஒரு குறிப்பிட்ட விதையை இழந்து விட்டால் அதை திரும்ப உருவாக்க முடியாது. அப்படிப்பட்ட விதையை 19 வயதில் இருந்து ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த வயதில் வெளிநாடு சென்றோமா, சம்பாதித்து வீடு வாங்கினோமா என்று இல்லாமல், தன் வாழ்க்கை மொத்தமும் சமூகத்திற்காக செலவழிக்கிறார். சுற்றிலும் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள், இதை அகரத்திலும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். டிரெண்டிங்கான விஷயங்களை அனைவரும் எடுத்து செய்யும்போது,
பெண்கள் விவசாயத்தில் எதுவும் செய்யமுடியாது. பின்தங்கிதான் இருப்பார்கள் என்று இருக்கும் நிலையில், பெண்கள் கூட்டம் சாதித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. அதிலும் வறண்ட ஒரு பூமியை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து, கிணறு வெட்டி, விவசாயம் செய்து சாதித்த பின், அந்த ஊரே அவர்களை அண்ணார்ந்து பார்க்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. மிகப் பெரிய சாதனை. அவர்களை ஊக்குவிப்பதற்காகத்தான் இங்கு அழைத்து வந்து பாராட்டினோம். இவர்களைப் போல் உள்ள பலரையும் இந்த பாராட்டு ஊக்குவிக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த விழாவை நடத்தி வருகிறோம்.
இன்று லண்டன் மற்றும் துபாயில் கடை போட்டிருக்கிறேன் என்று கோத்தகிரியில் இருந்து வந்தவர் கூறினார். விவசாயம் செய்ததால் ஊரில் எனக்கு மரியாதை இருக்காது. ஆனால், இன்று என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் அளவிற்கு நட்சத்திரமாகி இருக்கிறேன். எங்கு சென்றாலும் கைத்தட்டல்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டிய விழா என்பது புரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீணாக்காதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? இதற்கு முன்பு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று குழந்தைகளைக் கேட்டால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வருகிறது என்பார்கள். ஆனால், இன்று ஸ்விகி, சொமேட்டோவில் ஆர்டர் செய்தால் வரும் என்கிறார்கள். ஒரு காரை எப்படி தயாரிக்கிறார்கள், ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்கிறோம். ஆனால், உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? பள்ளிகளில் அதற்கான பார்வையிடல் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நான் உமையாளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றி காண்பித்தேன். பல பள்ளிகள் இன்று அழைத்துச் செல்கிறது. சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு காரை தயாரித்து பாகங்களை சேர்க்க 1 மணி நேரம் போதும். ஆனால், ஒரு நெல் விளைவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாது. உதாரணத்திற்கு தக்காளியை எடுத்துக் கொண்டால், நாற்று நடுவதற்கு 25 நாட்கள் ஆகும். அதுவரை நாற்றுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்று நட்ட பிறகு பூ பூத்து காய்க்கும் வரை தண்ணீர் சரியாக விட வேண்டும். பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை அதிகமாகவும் வரக் கூடாது, குறைவாகவும் வரக் கூடாது. இதையெல்லாம் தாண்டி தக்காளி சந்தைக்கு வருகிறது. இங்கு வெங்காயம், தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான். ஆனால், என்றோ ஒரு நாள் தக்காளி விலை ஏறிவிட்டால், அன்று அதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும். உடனே, பெங்களூருவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்து விடுவார்கள். கிலோ ரூ.100/-க்கு இருந்த விலை ரூ.5/-க்கு வந்துவிடும். அப்போது விவசாயிக்கு எவ்வளவு ரூபாய் போகும் என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா? நான் யோசிக்கவில்லை என்று எண்ணும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. இதேதான் அத்தியாவசிய பொருளான பாலுக்கும் வருகிறது.
மாடு வாங்கி பால் கறப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 கிலோ தீவனம் ரூ.50/-. காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுக்க மாடுக்கு எத்தனை வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. இப்படி முழு நேர வேலைக்கு வருமானம் சொற்பமாகவே இருக்கிறது. அரசாங்கம் ஒரு லிட்டருக்கு ரூ.27/- என்று நிர்ணயித்திருக்கிறது. தண்ணீர் பாட்டில் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பால் விலையில் ரூ.2/- கூடினாலே கோபப்படுகிறோம். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் விவசாயிக்கு எவ்வளவு போகிறது என்று யோசியுங்கள் என்ற அந்து சார் கூறுவார். நாம் என்ன வினை புரிகிறோமோ? அதையே தான் அரசாங்கமும் செய்யும். இங்கு விலைவாசி ஏறும் போது எதற்காக ஏற்றப்படுகிறது? அந்த பணம் யாருக்குச் சென்றடைகிறது? பால் வாங்கும் இடத்தில் 2 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டி வந்தால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நமக்கு நல்ல பால் கிடைக்கும். நகர்ப்புறங்களில் நல்ல பால் கிடைப்பதில்லை. கலப்படங்கள் சாதாரணமாக நடக்கிறது. நல்ல பால் வேண்டுமென்றால் நாம் தான் தேடிச் சென்று வாங்க வேண்டும். இந்த சிறிய மாற்றம் எல்லோருக்குள்ளும் வர வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது நேரடியாக விவசாயியிடமிருந்து வாங்குவது தொடங்கிவிட்டது. 500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். நமக்கும் நஞ்சில்லாத உணவு கிடைக்கும்.
எங்கு சென்றாலும் நம்மாழ்வார் ஐயாவை பார்த்திருக்கிறோம், அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் பெயரைத்தான் சொல்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நிச்சயமாக நமது கடமை. இப்போது உணவு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். ஆடி மாதம் பெய்ய வேண்டிய மழை தள்ளிப் போகிறது. இத்தனை வருட காலமாக இந்த பருவத்தில் விதைத்தால் இந்த பருவத்தில் அறுவடை செய்யலாம் என்ற அறிவு இப்போது வீணாகப் போகிறது. அனைத்தும் காலமாற்றத்தினால் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், பாண்டிராஜ் சார் கூறியது போல, விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும்.
நாங்கள் படத்தில் கூறிய வசனம் போல, மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான். அவரவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது.
இந்த வருடத்தை சிறுதானியத்திற்கான முக்கிய வருடமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறுதானியம் ஏன் அவசியமாக இருக்கிறது? என்றால், அது மானாவாரி பயிர், அதற்கு தண்ணீர் காட்டத் தேவையில்லை, உரம் போட தேவையில்லை, ஹைபிரிட் கிடையாது. அழகாக கையில் கிடைத்துவிடும். இருந்தும் ஏன் பலர் இதை செய்யவில்லையென்றால், அதற்கான செயலாக்கத் திட்டம் சரியாக இல்லை. சிறு கிராமங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் சிறுதானியம் கிடைக்கிறது. ஆனால், அப்படி வருகின்ற சிறுதானியங்கள் அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக கம்பு முறுக்கு, ராகி பிஸ்கட் என்று போய் விடுகிறது. ஆனால், உணவாக உண்ணும்போது தான் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கக் கூடிய அனைத்தும் வெள்ளையாக பாலிஷ் செய்து வருகிறது. கம்பு, ராகி அனைத்தும் ஒரே நிறமாக இருக்கிறது. பாலிஷ் செய்தாலே அனைத்து சத்துகளும் போய்விடும். அரை வேக்காட்டில் சாப்பிடுவது மிக மிக அவசியம். அதற்காக செயலாக்கக் கூடம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை பாதுகாத்து வைக்கக் கூடிய இடத்தில் சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பதற்கு அரசாங்கம் செயலாக்கக் கூடத்தை வைத்திருக்கிறது. அதுபோல சிறுதானியத்திற்கும் செயலாக்கக் கூடத்தை அதிக எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். விவசாயிக்கு எளிய வகையில் தேக்கி வைக்க அங்காடிக்கு அருகிலேயே நிறுவ வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் குறைந்த விலையில் சிறுதானியம் கிடைக்கும். அரிசி கிலோ ரூ.60/-க்கு கிடைக்கிறது. ஆனால், சிறுதானியம் ரூ.90/- முதல் ரூ.130/- வரை விற்கிறது. அனைவரும் வாங்கி சாப்பிட முடியும்.
மேலும், விவசாயிகள் அவர்களின் விளைப் பொருட்களை அவர்களே கொண்டு சென்றுதான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது. உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.

இதுபோன்று, இன்னும் பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இத்திட்டத்திற்கு பல நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.
அதேசமயம், அந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகி விட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி “என்றார்.
சிவகுமார் பேசும்போது, ” இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) மாலதி ரமேஷ், ரவிக்குமார், மூர்த்தி, (அண்ணா பல்கலைக்கழகம்) பெண்கள் விவசாய கூட்டுறவு குழு இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இறுதியில் பெண்கள் கலக்கி விட்டார்கள். ராஜ்கிரன் கூறியது போல், சக்தி இல்லை என்றால் எதுவுமே இல்லை. நானும் அதைப் பற்றி தான் பேசப் போகிறேன்.
நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது அப்பா இறந்து விட்டார். புகைப்படம் இல்லாததால் அப்பா கருப்பா சிகப்பா என்று தெரியாது. அப்பா இருந்திருந்து அம்மா இறந்திருந்தால் இன்று நான் அனாதையாக இருந்திருப்பேன். இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன். சூர்யா கார்த்தி பிறந்திருக்க மாட்டார்கள். உழவன் அறக்கட்டளையும் அகரம் அறக்கட்டளையும் இருந்திருக்காது. பெண்கள்தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது. ஒரு ஆண்கள் கூட இல்லாத நிலை வந்தாலும், பெண்களிடம் இருந்து செல்களை எடுத்து குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கலாம் என்று விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் ஒரு விதவை தாயால் நான் உருவாக்கப்பட்டவன்.
அப்போது எங்கள் ஊரில் 50 வீடுகள் தான் இருக்கும் அதில் பாதி பெண்கள் விதவையாகதான் இருப்பார்கள். வெள்ளைச் சீலைக்காரிகள் தான் அதிகம். என் நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை வெள்ளை சீலையோடு தான் பார்த்தேன். ஒரு வெள்ளை சேலைக்காரிக்கு ஒரு கறவை மாடு இருந்தால் இறுதிவரை சோறு போடும் என்பார்கள். அதுபோல் எங்கள் வீட்டில் கறவை மாடுகள்தான் இருந்தது. அதில் மாடு என்றால் வருடத்திற்கு ஒரு முறை கன்று போடும். 4 மாதம் பால் கறக்கும். பின்பு கர்ப்பம் தரித்து விடும். சினை என்று கூறினால் அது எங்கள் ஊரில் கெட்ட வார்த்தை. ஆகையால், நாங்கள் மாடு பயிராகி விட்டதா என்றுதான் கேட்பார்கள். பயிராகி 2 மாதம் பால் கறக்கும். அதன் பின் அளவு குறைந்து விடும். கன்று போடுவதற்கு இறுதி 4 மாதம் சுத்தமாக பால் நின்று விடும்.
எங்கள் ஊரில் அடிப்படை வசதியான மின்சாரம், தண்ணீர், கழிவறை மற்றும் பள்ளிக்கூடம் எதுவுமே இருக்காது. அப்போது ஒரு நாள் நடு இரவில் அடைமழை பெய்து கொண்டிருந்தது. வெளியே இருக்கும் தாழ்வாரத்தில்தான் உறங்குவோம். போர்வைக்கு துப்பிட்டு என்றுதான் கூறுவோம். ஆனால், அது குளிர் தாங்காது. ஆகையால், நான் எனது அக்கா மற்றும் அம்மா மூவரும் சாக்குப் பையைக் கொண்டு போர்வையின் மேல் காலில் இருந்து இடுப்பு வரை போர்த்திக் கொள்வோம். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று மின்னல் மின்னியது. அந்த நடு இரவு ஒரு வினாடி நண்பகல் போல வெளிச்சமாக தோன்றி மறைந்தது. அதன்பின் இடி இடிக்கும் சப்தம் நெஞ்சு அதிரும் வகையில் இருந்தது. அப்போது என் அம்மாவின் அம்மா, அம்மிச்சி என்று அழைப்போம்- அவர், ‘கண்ணு பயப்படாதே! தேவேந்திரன் தேர் ஓட்டிக்கொண்டு செல்கிறான். நமது மீது விழாது, நான் சொல்வதை சொல்’ என்று கூறினார்.
“புங்கப்பத்தி புளிய பத்தி ஆத்த பத்தி அரச பத்தி அர்ச்சுனா அர்ச்சுனா” என்று சொல் என்று கூறினார். புங்க பத்தி என்றால் புங்கை மரத்தின் மீது, புளிய பற்றி என்றால் புளிய மரம் மீது, ஆத்த பத்தி என்றால் ஆற்றின் மீது, அரச பத்தி என்றால் அரச மரத்தின் மீது என்று அர்த்தம். இவைகளில் ஏதாவது ஒன்றின் மீது இடி விழ வேண்டும் என்று அர்ஜுனனிடம் கூறினால், அர்ஜுனன் நமது மீது இடியை விழச் செய்ய மாட்டார் என்று ஒரு நம்பிக்கை. இதை கூறிக் கொண்டிருக்கும்போது சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தது. பிறகு மாடு கத்த ஆரம்பித்தது. வழக்கமாக அப்படி கத்தாது.

என்ன என்று பார்ப்பதற்காக அந்த இருட்டில் லாந்தர் ஏந்திக் கொண்டே எனது அம்மா சென்றார். நானும் பின்னாடியே சென்றேன். மழையில் நனையாமல் இருப்பதற்கு சாக்குப்பையை உள்ளே மடித்து தலையில் போட்டுக் கொண்டால் பொங்காடை என்று பெயர், அதை போட்டுக் கொண்டு சென்றோம். மாடு ஒரு இடத்தில் நிற்காமல் இப்படியும் அப்படியும் நகர்ந்து கொண்டே இருந்தது. எனக்கு ஏழு வயது, என்னவென்று எனக்கு கேட்கத் தெரியாது. நேரத்திற்கு பின்பு அடிப்பகுதியில் நீர் நிரம்பிய பாலித்தீன் கவர் உள்ளே ஒரு ஜீவராசி வந்து விழுந்தது. பனிக்குடம் உடைந்து கன்றின் கண் பளிச்சென்று தெரிந்தது. அடுத்த 3 நிமிடங்களில் தாய் பசு தன் கன்றின் மீது இருந்த அழுக்கை நாவால் நக்கி சுத்தம் செய்தது. பார்க்க பளபளப்பாக இருந்தது. பிறந்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை, பாதம் பழகா பிஞ்சு குளம்பால் நான்கு கால்களும் வெவ்வேறு திசையில் செல்ல விழுந்து எழுந்து தட்டு தடுமாறி தொடர் முயற்சியால் எழுந்து நின்றது. பின்பு தாயின் வாயிடம் சென்று, தாடை, முன் கால், அடி வயிறு என்று மெதுவாக சென்று மடியை தேடிப்பிடித்து பால் குடித்தது. விழுந்து 10 நிமிடங்களில் தனக்கு தேவையான உணவு எங்கிருக்கிறது என்று தேடி கண்டுபிடித்தது. இதை யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இதன்பின் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பாலை கரும்பு சர்க்கரை சேர்த்து காய்ச்சினால் கெட்டியாகி விடும் அதை சீம்பால் என்று கூறுவார்கள். அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளிலும் கொடுப்பார்கள். இது போன்ற வாழ்க்கை இனிமேல் கிடைக்குமா? அடுத்த பிறவி எடுத்தால் கிராமத்தில் தான் பிறக்க வேண்டும்.
கன்று போட்டு பத்து நாட்களுக்கு பிறகு பால் இயல்பாக ஆகிவிடும். அப்போது சொசைட்டியில் இருந்து எடுத்துச் செல்ல வருவார்கள். இது பற்றி கார்த்தி, கொரோனா காலத்தில் சொசைட்டி கைவிட்ட பிறகும் ஒரு இளைஞன் விவசாயிகளைத் தேடி பாலை வாங்கி வியாபாரம் செய்தார் என்று கூறினார்.
அந்த பால் கறக்கும் விடியற்காலை வேளையில், கார் சத்தம், பிளைன் சத்தத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அமைதியான வேளையில், அதிகாலையில் நான் முதன்முதலாக 100 சிட்டுக்குருவிகளின் சப்தத்தை கேட்டேன். அடுத்து ஐந்து நிமிடங்களில் சேவல் கூவ ஆரம்பிக்கும்.
அந்த காலத்தில் நாங்கள் இப்போது இருப்பது போல், கிரில் அமைத்து போந்தா கோழிகளை வளர்க்கவில்லை. பாம்பு வந்து லேசாக மூச்சு விட்டாலே கோழி இறந்து விடும். அதற்காக கொடாப்பு என்று கூறுவோம். கல்லிலேயே அமைத்து 6 இன்ச் அளவிற்கு மட்டும் வழி விட்டு கோழிகள் அடைந்ததும், கல்லின் குறுக்கே பலகையை வைத்து எந்த உயிரினமும் உள்ளே போகாதபடி அடைத்து விடுவோம். விடியற்காலை 4 மணிக்கு பலகையின் முன்னே இருக்கும் கல்லை நகர்த்தி பலகையை எடுத்தால் தாய்க்கோழி சேவல் என்று அனைத்தும் அதனதன் வேலையை செய்ய வெளியே வந்துவிடும். பிறகு ஆடு கத்தும். அதையும் வெளியே தெரிந்து விடுவோம். இப்போது பால்காரரின் மணி சத்தம் டிங் டிங் என்று கேட்கும்.
அப்போது பெண்கள் தான் அதிகம் பால் கறப்பார்கள். மடிக்கு அருகே குத்த வைத்து குதிகாலை தூக்கி உட்கார்ந்து கொண்டுதான் பால் கறப்பார்கள். இரண்டு முழங்காலுக்கு நடுவில் பால் பாத்திரத்தை போசி என்று கூறுவோம். அதை வைத்துக்கொண்டு கறப்பார்கள். முதலில் பாத்திரத்தின் சத்தம் கேட்கும், பால் கொஞ்சம் கொஞ்சமா பாத்திரத்தில் நிறைந்து வர வர நுரைத்துக் கொண்டு சத்தம் கொஞ்சம் அடர்த்தியாக கேட்கும். அப்படி அந்த நுரையுடன் அடுப்பிற்கு கொண்டு போகும் முன், இங்கு எத்தனை பேர் குடித்து இருக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால், நான் குடித்து இருக்கிறேன். மேல் உதட்டில் மீது மீசை போன்று அந்த நுரை ஒட்டிக் கொள்ளும்.
மாடு மேய்த்தவன் என்று கூறுவதில் எனக்கு கேவலம் இல்லை. 7 வயதிலிருந்து சுமார் 8 வருடங்கள் சனி ஞாயிறு கிழமைகளில் மாடு மேய்த்து இருக்கிறேன். ஒரு காட்டுக்கும் இன்னொரு காட்டுக்கும் இடையில் உள்ள பகுதியில் அருகு (அருகம்புல்) நிறைய இருக்கும். அங்குதான் மாடு மேய்க்கக் கொண்டு செல்வேன். அப்போது மாட்டின் வாய்க்கு மேல் பகுதி கருப்பாக இருக்கும் இரண்டு மூக்கின் வழியே மூக்கணாங் கயிறு கட்டி இருக்கும். மூச்சு சத்தம் புஸ் புஸ் என்று கேட்கும். அதோடு அருகம்புல்லை மென்று திங்கும் சத்தமும் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு ஆசி அகத்தி என்று ஒரு வேர் இருக்கும். நிறைய பேருக்கு அது பற்றி தெரியாது. அதை மாடு தெரியாமல் தின்று விட்டால் மூன்று நாட்களுக்கு பாலில் அந்த வாசனை வரும். இப்படி எல்லாம் தான் நான் வாழ்ந்து வந்தேன்.
இப்போது டாக்டர் சிவராமன் கூறியது போல, சிறு தானியங்கள் எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்தது. அரிசி சாதமே கிடையாது. கம்பு, சோளம், வரகு, திணை இவைகளை சமைத்து தான் சாப்பிடுவோம். அதில் பெரும்பாலும் முதல் நாள் செய்த சோளச் சோறு மீதம் இருக்கும். அடிப்பகுதியில் தீஞ்சு போனதால் சிவந்து இருக்கும் அதை சீவச்சோறு என்று கூறுவோம். எடுத்து பாத்திரத்தில் போட்டு தயிரை அதில் ஊற்றுவோம். தயிர் விழாத அளவிற்கு கட்டியாக இருக்கும் இப்போதெல்லாம் அப்படி தயிர் இல்லை. இந்த கெட்டி தயிரை விரல் வைத்து எடுத்து ஊற்றி சாப்பிடுவோம். சனி, ஞாயிறுகளில் கொள்ளு, தட்டை பயிர், பச்சை பயிரைத் தாளித்து வைத்துக்கொண்டு, பொன்வண்ணன் கூறியது போல மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வைத்து நேரத்தைக் கணக்கிட்டு சாப்பிட்டு வாழ்ந்த காலம். இவை எல்லாம் சாப்பிட்டு வளர்ந்ததால் தான் என்பது வயதிலும் நான் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.
அதன் பிறகு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே?! அதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்.
அதன் பின் என் தாய் போலவே என்னுடைய வாழ்க்கை இன்னொரு பொம்பளை இருக்கிறார். நான் தாடி வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்து கொண்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் பரதேசியாகவே வாழலாம் என்று இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை மாற்றி எனக்கு இரு மகன்களை கொடுத்தார். அவர்களால் அகரம் அறக்கட்டளை மற்றும் உழவன அறக்கட்டளை என்று ஆனது. சாமியாக போனவனை இரண்டு மகன்களை கொடுத்து உருவாக்கி இருக்கிறார்.
அன்று என் தாய் வணங்க வேண்டியவள்; இன்று என் மனைவி வணங்க வேண்டியவள்! “என்றார்.

பாண்டிராஜ் பேசும்போது, ” விவசாயம் செய்பவர்கள் பலர் நஷ்டம் அடைகிறார்கள். ஆனால், விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். எனது மனைவி அறுவடை செய்யும் வரை ஆன செலவை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தார். நெல் விற்று பணத்தை கணக்கிட்டு இந்த வருடம் நமக்கு லாபம் என்று கூறினார். சினிமா எடுத்து பல கோடிகள் சம்பாதித்து கிடைத்த மகிழ்ச்சியை விட, விவசாயம் மூலம் வரும் நெல்லில் சாப்பிடும் போது அதிகமான மகிழ்ச்சி கிடைக்கிறது.
விவசாயத்தில் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து விவசாயிகள் அதையே தான் செய்கிறார்கள். இந்த வருடமாவது லாபம் பார்த்து விடுவோம் என்று மனம் தளராமல் இருப்பதுதான் விவசாயத்தின் சக்தி. ஒவ்வொரு முறை நான் ஊருக்கு செல்லும்போதும் காரில்தான் செல்வேன். அப்போது மாலை 6 மணிக்கு முன்பு ஓட்டுநரை வேகமாக ஓட்டுங்கள் என்று அழுத்தம் கொடுப்பேன். நேராக வீட்டிற்கு செல்ல மாட்டேன். விவசாய நிலங்களுக்கு சென்று அங்கு விளைந்த காய்கறிகள் பழங்களை அப்படியே சாப்பிட்டால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.
எனது பெற்றோர்கள் விவசாயிகள், நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு முன்பு விவசாயிகளின் வலிகளை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால், எனது பெற்றோர் பத்து வருடமாக விவசாயம் செய்யவில்லை. இப்போது நான் விவசாயம் செய்ய முடிவெடுத்து எடுப்பதற்கான கதையை கூறினால் நேரம் போதாது. ஒரு படமே எடுக்கலாம். ஆனால், என் நண்பன் ஒரு நாள் நீ தேசிய விருது முதல் பல விருதுகளையும் வாங்கி விட்டாய். பெரிய நாயகர்களைக் கொண்ட படம் இயக்கி விட்டாய். இதனால் உனது பெற்றோர்களின் ஆத்மா சாந்தியடையுமா என்று கேட்டான். அவர்கள் சந்தோஷமாக தானே இருக்கிறார்கள் என்று கூறினேன். அவர்கள் விவசாயம் செய்த நிலம் வீணாக கிடக்கிறது. அதை பார்க்கும்போது அவர்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்ட ஒரு கேள்விதான் என்னை சென்டிமெண்டாக விவசாயத்தை செய்ய வேண்டும் என்று முடிவை தீர்க்கமாக எடுக்க வைத்தது.
எங்களது நிலத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனது பெற்றோர் வாழ்ந்த நிலம் பாழாய் இருந்தது. அங்கே மது அருந்திவிட்டு பாட்டில் போட்டு சாராயம் காய்ச்சுவது முதல் என் அப்பாவின் நிலம் மோசமாக இருந்தது. அதனால் நான் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கினேன். நிறைய சிக்கல்களை சந்தித்தேன். வேலி, கிணற்றில் தண்ணீர் இல்லை, என பல தடைகளை தாண்டவே பணமும், உழைப்பும் செலவானது. சுற்றி இருந்தவர்களும், எனக்கு விவசாயத்தில் அதிர்ஷ்டம் இல்லை என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் விடாது அதில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த பிறகு, நிலத்திற்கு நீர் வந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் எதையும் எதிர்பாராமல் இதற்காக தான் உழைத்து இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், அவர்கள் அதை தாண்டி பயிரை விளையவைத்து நமக்கு கொடுக்க பாடுபடுகிறார்கள். அப்படிபட்டவர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நானும் கார்த்தி சாரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட, அவர் இந்த உழவன் அமைப்பு ஆரம்பித்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இங்கு வந்தவர்களின் முகத்தை பார்க்கும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதோடு அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். அந்த திட்டத்தை ஆக்கபூர்வமாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு நாள் கூலி 250 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டு மணி நேரம் கூட வேலை செய்யாமல் அடுத்தவரின் கதைகளை பேசுவதற்கான இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் மத்திய அரசு நூறு ரூபாயும் மாநில அரசு 100 ரூபாயும் விவசாயி 50 ரூபாயும் கொடுத்தால் விவசாயத்தில்முன்னேற்றம் ஏற்படும். அதேபோல தூர் வாரும் வேலைகளையும் மேலோட்டமாகவே செய்கிறார்கள். சில நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. தமிழ்நாட்டு அரசு இதற்கு உரிய முறையை முன்னெடுத்து செய்தால் நாடும், விவசாயமும் வளர்ச்சி பாதையில் செல்லும்” என்றார்.

பொன்வண்ணன் பேசியபோது, “நான் வாழ்ந்தது ஒரு கிராமத்து வாழ்க்கைதான். என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. படிப்பதோடு, புத்தகம் வாசிப்பது என வாழ்க்கை பயணித்தது. எனது குடும்பம் கிராமத்தின் ஆழமான வாழ்க்கையை பல ஆண்டுகளாக வாழ்ந்தார்கள். எனது குடும்பம் விவசாய வாழ்க்கையைதான் முழுவதுமாக வாழ்ந்தது. காலம் மாற மாற, நான் சமூகப்பாதையில் சென்ற பின், நான் விவசாயத்தில் இருந்து நகர ஆரம்பித்தேன். நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால், எனது பெற்றோர் விவசாயத்தில்தான் கடைசி காலம் வரை இருந்தார்கள். ஒரு விவசாய வாழ்கையை இழந்துவிட்டு தான் நான் என் பாதையை மாற்றி இருக்கிறேன் என்று பின்னர் யோசிக்கும் போது தான் தெரிந்தது. அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது.
விவசாயம் என்பது மிகவும் ஆபத்தான, வலிகளை தரக்கூடிய ஒரு பாதை என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏனென்றால், விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது மண்ணோடு போராட வேண்டி இருக்கிறது, இயற்கையோடு போராட வேண்டி இருக்கிறது, பின்னர் சந்தைப் படுத்துதலோடும் போராட வேண்டி இருக்கிறது. விவசாயிகள் பல இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், இழப்புகளை தாண்டி அவர்கள் பயணிக்கிறார்கள். முதலில் நிலங்களை மண் அமைப்புகளை வைத்து வகைப்படுத்துவார்கள். ஆனால், இப்போது அங்கு அருகே வரப்போகும் கட்டிடங்களையும், இடங்களையும் வைத்து வகைப்படுத்துகிறார்கள். அது எனக்கு வருத்தமளிக்கிறது. சமூக வலைதளத்தில் இளைஞர்கள் விவசாயம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், விவசாயம் செய்ய மிகப்பெரிய தியாகமும், உழைப்பும் தேவைப்படுகிறது. அதை செய்யும் இந்த இளைஞர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கார்த்தி, சினிமாத் துறையை தாண்டி இந்த முன்னெடுப்பை செய்வதில் மகிழ்ச்சி. அவர் இதற்காக நுணுக்கமாக யோசித்து வேலைபார்க்கிறார். அதற்கு எனது பாராட்டுகள். காவிரி நதி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல பகுதிகளை சென்றடையாமல் வீணாய் போய் கொண்டு இருந்தது. அப்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டதுதான் காளிங்கராயன் வாய்க்கால். அதன் அமைப்பு பல பகுதிகளை செழிக்க வைத்தது. எதிர்காலத்தை யோசித்து அதை அமைத்த காளிங்கராயன் அவர்களுக்கு இந்த இடத்தில் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்”என்றார்.

ராஜ்கிரண் பேசும்போது, ” கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு அவசியம். அதை உணர்ந்ததால்தான், சூர்யா அகரம் அறக்கட்டளையையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் நடத்துகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள். இந்த விவசாயிகளை மேடை ஏற்றி பாராட்ட ஒரு வாய்ப்பு அமைத்த கார்த்தி மிகப்பெரிய காரியத்தை செய்து இருக்கிறார். தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசத்தின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது என்றார். அவர் குறிப்பிட்டது விவசாயத்தைதான். ஏனெனில் நமது தேசம் விவசாயத்தின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது விவசாயிகள் தண்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக இருந்தால்தான் நமது பொருளாதாரம் விருத்தியும் மேன்மையும் அடையும். அதற்காக சிறு சிறு முயற்சிகள் பலரும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கேள்விப்படும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படிபட்ட விவசாயிகளுக்கு பாராட்டுதலை கொடுத்து ஊக்குவிப்பது அவசியம்.
என்னை இந்த விழாவிற்கு அழைக்கும் போது, ஒரு பெண்கள் குழுவினர் என்னென்ன சாதித்தார்கள் என்று கூறினார். அதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நம் ஆதி காலத்தில் காட்டை திருத்தி கழனி ஆக்கினார்கள். காட்டை திருத்தியது ஆண்களாக இருந்தாலும் கழனி ஆக்கியது பெண்கள்தான். இதுதான் நமது வரலாறு. சக்திதான் எல்லாம் சக்தி இல்லையேல் செயல்கள் இல்லை. இந்த சக்தியான பெண்கள் நினைத்தால் தான் வீடும் உருப்படும் நாடும் உருப்படும். பெண்களின் விடாமுயற்சியும், உழைப்பும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதன் மூலம் அவர்கள் சாதனைகளை பாராட்டுவதை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.