விஷால் – சாய் தன்ஷிகா காதல், கல்யாண அறிவிப்பைச் சொன்ன யோகிடா இசை – ட்ரெய்லர் வெளியீட்டு விழா.

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 
 
இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட  படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டால்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகம், சிறுத்தை போன்ற படங்களில் அதிரடி காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர் K. கணேஷ்குமார்  படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
 
இத்திரைப்படத்தில் சாய் தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர்கள் நிறையப்ம்  பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை சிலர்  தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.
 
 சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே யோகிடா.
 
எத்தனை மனிதர்கள் எதிர்த்தாலும் உண்மை உண்மைதான் – எத்தனை மனிதர்கள் ஆதரித்தாலும் தவறு தவறுதான் என்ற உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் தன்ஷிகா!
 
இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குனர் சங்க தலைவர் RV உதயகுமார், பேரரசு, மித்ரன் R ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோருடன் படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
 
 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டதுடன் விஷால்-சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு மேடையாகவும் இந்த நிகழ்ச்சி மாறியதால் அனைவரும் இருவரையும் வாழ்த்திப் பேசினார்.
 
நிகழ்வில் RV உதயகுமார் முதலாவதாக பேசும்பொழுது,”திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. அநீதியை எதிர்த்து போராடும் நேர்மையான ஒரு காவல் அதிகாரி வேடத்தில் சாய் தன்ஷிகா சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தயாரிப்பாளரின் முதல் படம் மற்றும் எனது நண்பர் என்பதால் அவரை வாழ்த்துகிறேன். திரைப்படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரையும் மனதார வாழ்த்துகிறேன்”, என்று நிறைவு செய்தார்.
 
ராதாரவி பேசும்பொழுது,”இந்நிகழ்வுக்கு என்னை அழைத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும்  வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஷால் எனது அன்புச் சகோதரர், அவ்வப்போது மன வருத்தங்கள் வந்து போவது சகஜம். அவருக்கு சாய் தன்ஷிகா ஒரு நல்ல துணையாக இருப்பார். விஷாலுக்கு சாய் தன்ஷிகா பொருத்தமான ஜோடி. விஷால் குழந்தை அல்ல அனைத்தும் தெரிந்த  அவர் நல்ல இதயம் கொண்ட மனிதர்.
 
பேராண்மை படத்தில் இருந்து பார்க்கிறேன்;சாய் தன்ஷிகா ஒரு கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். 
 
இத் திரைப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
 
பேரரசு பேசும்பொழுது,” ‘யோகிடா’ டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. தேசியக் கொடியை பற்றி இப்படத்தில் சிறப்பாக பேசப்பட்டுள்ளது. பெண்களின் வலிமையைப் பற்றியும் படம் பேசுகிறது. விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார். 
 
யாரடி நீ மோகினி மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை அளித்த மித்ரன் R ஜவஹர் பேசும் பொழுது,” இந்த மேடை கடவுள் அமைத்து வைத்த மேடை; விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சாய் தன்ஷிகா பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபர், அவர் திரைத்துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று பேசினார்.
 
மீரா கதிரவன் பேசும்பொழுது,” ‘விழித்திரு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே ‘கபாலி’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ‘விழித்திரு’ படத்தில் அதீத பங்களிப்புடன் நடித்துக் கொடுத்தார். பல கஷ்டங்களுக்குப் பிறகும் கடின உழைப்பின் மூலம் முன்னேறியவர். நல்ல உயர் குணம் படைத்தவர். ‘யோகிடா’ படம் வெற்றியடைய வாழத்துகிறேன்”, என பேசி முடித்தார்.
 
அடுத்ததாக ஒளிப்பதிவாளர் S.KA.பூபதி, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, சண்டைப் பயிற்சியாளர் K. கணேஷ்குமார், படத்தொகுப்பாளர் G சசிகுமார் உள்ளிட்டோரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
 
ரேகா நாயர் பேசும்பொழுது,” நானும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளேன். சாய் தன்ஷிகா மிகவும் இனிமையானவர். அவரையும விஷால் அவர்களையும் நான் வாழ்த்துகிறேன். இங்கு பேசிய ஆர் வி உதயகுமார் விஷாலை குழந்தை என்றார் . எப்படி சார் அப்படி சொன்னீங்க? . அவர் ஆம்பள. எனக்கு அது எப்படி தெரியும் என்று கேட்காதீங்க ” என்றார். 
 
 படத்தின் இயக்குனர் கௌதம் கிருஷ்ணா; அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டார். 
 
படத்தின் கதாநாயகி சாய் தன்ஷிகா பேசும்போது,”17- வருடங்களாக மூத்த பத்திரிக்கையாளர்களுடன் பயணித்துக் கொண்டே,  தமிழ்த் திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்த திரைத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’ வரைக்கும் வந்துள்ளேன். அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்புக்கலை போய்ச சேர வேண்டும். 15-ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் அவர்களைத் தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊடகத்தினர் அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும்”, என்றார். மேலும் திரைப்படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால் ‘யோகிடா’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. சண்டை காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. தயாரிப்பாளர் V. செந்தில்குமார் எனக்கு நீண்டநாள் நண்பர், படம் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகிறேன்.
 
சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்வார். 
 
‘யோகிடா’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் K.கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இயக்குனர் கௌதம் கிருஷ்ணா அவர்கள் திரைத்துறையில் மேன்மேலும் சாதிக்க வேண்டும்”, என படக்குழுவினரை வாழ்த்தியதோடு கல்யாண விருந்துக்கும் கட்டியம் கூறி விட்டுப் போனார். 
 
வாழ்த்துகள் விஷால்- சாய் தன்சிகா . என்றென்றும் வாழ்க, இன்பங்கள் சூழ ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *