பிரபுவின் 200 ஆவது படம் என்ற அந்தஸ்து கிடைத்து இருக்கிறது
தமிழ் நாட்டில் இருந்து மலேசியா போய் , நம்ம ஊரு ஸ்டைல் ஹோட்டல் நடத்தும் ஒருவரின் மகனுக்கும் மலேசிய பெண் ஒருத்திக்கும் வரும் காதல் ,
இவர்களுக்கிடையில் வரும் ஒரு லேடி டான் என்று போகும் கதை இது .
படத்தின் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட, அந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிக்கையளர்களை சந்தித்தது படக் குழு
படம் பற்றிப் பேசிய பிரபு “இந்தப் படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் சொல்லி விட்டு , படத்தில் என் மகனாக காளிதாஸ் நடிக்கிறார் என்று சொன்ன போது மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சின்ன வயசு முதலே எனக்கு காளிதாசை தெரியும்.
ஒரு படப்பிடிப்பில் நானும் ஜெயராமும் நடித்த போது இந்த காளிதாஸ் சின்னப் பையன் . ஒரு நாள் அழுது கொண்டே என் ரூமுக்கு வந்தான் .’ ஏம்ப்பா அழற?’ன்னு கேட்டப்ப ,
‘எங்கப்பா எனக்கு ஐஸ்கிரீம் கொடுக்கவே மாட்டேங்கறாரு . நீங்க தர்றீங்களா?’ ன்னு கேட்டு , என் ஃபிரிட்ஜ்ல இருந்து ஐஸ் கிரீம் எடுத்து சாப்பிட்டுட்டு போனான் . அதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது .
நான் டைரக்டர் கிட்ட சந்தோஷமா சம்மதம் சொன்னேன் .
அப்புறம் புரடியூசர் யாருன்னு பார்த்தா நம்ம வீட்டுப் பிள்ளை துஷ்யந்த் . அடடா ! இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது .
மலேசியாவில் பல ஊர்கள்ல படப்பிடிப்பு நடத்தி இருக்கோம் .படம் ரொம்ப நல்ல வந்துருக்கு .
காளிதாஸ் பிரம்மாதமா நடிச்சு இருக்காரு . அவர் மட்டுமில்ல….ஆஸ்னா, ஊர்வசி, பூஜா குமார் , எம் எஸ் பாஸ்கர் , சந்தான பாரதி, தலைவாசல் விஜய் எல்லாரும் சிறப்பா நடிச்சு இருக்காங்க .” என்றவரை இடை மறித்து
“முதல் படமான சங்கிலி படத்தில் நடித்த போது, 200 படம் நடிக்கும் அளவுக்கு வருவோம்னு நினைச்சீங்களா ?” என்று நான் கேட்டேன்.
“நிச்சயமா இல்லை ” என்று உடனே ஆரம்பித்த பிரபு “நானெல்லாம் நடிகனானது ஒரு விபத்து ,
வீடல அப்பாவை பார்க்க வர்ற பிரமுகர்கள் கண்ணுல நானும் அப்படியே படுவேன். அப்படி என்னை பார்த்த இயக்குனர் சி வி ராஜேந்திரன், அப்பா ஹீரோவா நடிச்ச சங்கிலி படத்துல என்னை நடிக்க வச்சார் .
அந்தப் படம் 1982 ஏப்ரல் 14 ஆம்தேதி வெளியாச்சு .
நான் எல்லாம் நடிக்கறதுக்கு எந்த பயிற்சியும் எடுக்கல . எந்த இன்ஸ்டிடியூட்டுக்கும் போகல . (தேவை இல்லை சார் . உலகத்தின் சிறந்த நடிப்புப் பல்கலைக் கழகமே உங்க வீட்டுலதான் இருந்தது )
சங்கிலி படத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள் என்ன ஏதுன்னே தெரியாம வர்ற படங்கள் எல்லாம் நடிச்சேன் . அதுல ஒரு பிரேக் விழுந்தது . ஒரு நிலைக்கு அப்புறம்தான் படங்களை செலக்ட பண்ணி நடிக்கவே ஆரம்பிச்சேன் .
34 வருஷத்துல 200 ஆவது படத்தை தொட்டு இருக்கேன் . இதுல 73 டைரக்டர்களோட முதல் படத்துல நடிச்சு இருக்கேன்.
என்னோட வெற்றிகளுக்கு எல்லாம் என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்களும் டைரக்டர்களும்தான் காரணம் ” என்றார் .
அடுத்து, ”இந்த 200 படங்களில்உங்களுக்குப் பிடித்த டாப் டென் படங்களை சொல்ல முடியுமா ?” என்றேன் .
“நிறையவே இருக்கு. முதல் படம் சங்கிலி ,அடுத்து கோழி கூவுது , அப்பாவோட நடிச்ச மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு , நீதிபதி, மாதிரியான படங்கள்…
அப்புறம் பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள் , சின்னத் தம்பி பெரிய தம்பி, என் தங்கச்சி படிச்சவ , அக்னி நட்சத்திரம் , மனசுக்குள் மத்தாப்பு , அஞ்சலி , சின்னத் தம்பி , நூறவது படமா வந்த ராஜகுமாரன் ….
இப்படி எவ்வளவோ படங்கள் இருக்கு .
நான் நடிச்சு லேட்டஸ்ட்டா வந்த வெற்றிவேல் கூட எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்தான் ” என்றார் .
தொடர்ந்து நடித்து, விரைவில் முன்னூறு படங்கள் காண வாழ்த்துகள், பிரபு சார் !