


‘வீ செர்வ் யூ ஹேப்பினஸ்’ (நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை விருந்தளிக்கிறோம் ) என்ற வாசகத்துடன் கூடிய விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்க…
சுந்தர் சி, வினய், சந்தானம், மிதுன் சந்திரா ஆகிய நாயகர்களோடு ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா , லட்சுமி ராய் என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, சுந்தர். சி எழுதி இயக்கும் நகைச்சுவை, கிளாமர், திகில், பேய்ப் படம் அரண்மனை.

கடைசியில் சுந்தர் சி யையும் பேய் ‘பிடித்து’க் கொண்டதா என்று கேட்டால்….
“காமடி படம் வந்து ஒரு கேப் விழுந்திருந்த சூழ்நிலையில் நான் எடுத்த உள்ளத்தை அள்ளித்தா படம் காமெடியாக வந்து அப்புறம் தொடர்ந்து காமடி படங்களா வந்தது. அதே மாதிரி இப்போ வீட்ல என் மனைவி மட்டுமில்லாம குழந்தைகளும் ஆர்வத்தோட ஆங்கில பேய்ப் படங்கள் பாக்கறதை பார்த்து நாமளும் ஏன் ஒரு பேய்ப்படம் எடுக்கக் கூடாதுன்னு நான்தான் முதல்ல பேய்ப்படமா அரண்மனையை ஆரம்பிச்சேன் .
எங்க படத்துல திரில் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் என்பதால அது முடியறதுக்கு நாள் ஆச்சு .ஆனா அதுக்குள்ளே நிறைய பேய்ப் படங்கள் வந்து , இப்ப அதையெல்லாம் பார்த்து நான் பேய்ப்படம் எடுத்த மாதிரி ஆகிப் போச்சு.” என்கிறார் சுந்தர் சி.
பஞ்ச பூதங்களையும் ஒரு பேய் ஆட்டிப் படிக்கிற கதையாம் . (பஞ்சத்துல அடிபட்ட பூதங்கள் இல்லையே ?) ஒரு அரண்மனை .. அங்கே உரிமைப்பட்ட குடும்பம் , உறவுகள், அங்கே வரும் ஒரு பேய் .. இதில் சுந்தர். சிக்கே உரிய காமடி , கலர்புல் , கிளாமர் எல்லாமும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் இது .
ஆந்திராவில் நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான ஒரு மாளிகையின் வெளிப்புறம் அரண்மனைக்கு பொருத்தமாக இருக்க அதன் உள்ளே பல கட்டுமாணங்களை ஏற்படுத்தி படம் பிடித்து இருக்கிறார்களாம். ”அதற்காக பெரும் செலவு செய்து இருக்கிறார் தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக்” என்கிறார்கள்.
மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்தப் படத்தில் ஹன்சிகாவுக்கு வித்தியாசமான கேரக்டர் . இதுவரை சந்தானத்தோடு ஓருசில காட்சிகளில் மட்டும் நடித்து வந்த நடிகர் சுவாமிநாதன் இந்தப் படத்தில் அவருடன் முழு நீள காமடி செய்திருக்கிற மகிழ்ச்சியில் இருக்கிறார் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்த டிரைலர் பளபளப்பாகவும் திகிலாகவும் இருந்தது . பாடல்களில் வழக்கம் போல சுந்தர் சியின் கலகலப்பு, தளதளப்பு, ஜிலுஜிலுப்பு எல்லாம் இருந்தன.
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் நகைச்சுவை மன்னர் தங்கவேலு ஆரம்பித்து வைத்து, சுந்தர் சியே இதற்கு முன்பு பயன்படுத்திய.அந்த காட்சி … அதாவது ரகசியமாக ஒரு ஹீரோ பாட , இன்னொருவர் வாயசைக்க , வாயசைப்பவரே பாடுவதாக கதாநாயகி நம்பும் காட்சியை இந்தப் படத்திலும் வைத்துள்ளார் சுந்தர் சி. அதிலும் இந்தப் படத்தில் அது மாதிரி ரெண்டு ஜோடி (விட்ருங்க சுந்தர் . போதும்!)

“படப்பிடிப்பு அவ்வளவு ஜாலியா இருக்கும் . சூட்டிங் முடிஞ்ச அப்புறம் ரொம்ப கஷ்டமா இருந்தது ” என்றார் லக்ஷ்மிராய்.
“ரொம்ப நல்ல கேரக்டர் . ரசிச்சு நடிச்சேன் ” என்றார் ஆண்ட்ரியா .
“நான் முதன் முதலா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு நின்னப்ப….
‘ உன்னை எப்படித்தான் இந்த கிராமத்து கேரக்டருக்கு பொருத்தப் போறானோ. தெரியலையே’ன்னு சொன்னார் சுந்தர் சார்.
ஆனா அப்புறம் அருமையா பண்ணிட்டார் .
என்னால மறக்க முடியாத படம் இது ” என்றார் ஹன்சிகா .
“இந்தப் படத்துல நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்ல ஷாட் இடைவேளையில சீட்டு விளையாடி சம்பாதிச்ச காசை வச்சே லட்சுமி ராய் ஒரு காரே வாங்கிருச்சி.
இந்த மாதிரி இன்னொரு படம் எடுத்தா பங்களாவே வாங்கிடும். ம்ம்ம்ம்ம்க்கும் ! ” என்று ஒரு போடு போட்டார் மனோபாலா .
அப்போ .. பெரும் பொருட்செலவில் உருவான படம்தான் தினேஷ் கார்த்திக் சார் !