பீமாஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் மனோஜ் தயாரிக்க, பிரஜின் , வித்யா பிரதீப் , சார்லி நடிப்பில் பாலாஜி என்பவர் இயக்கி இருக்கும் படம்.
கணவனிடம் எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்கும் மனைவிகள், காதலனிடம் எப்போது சந்திக்கலாம் என்று கேட்கும் காதலிகள், அதே போல மகன்கள், சகோதரிகள் இப்படி பாசமுள்ள பலருக்கும் ஒரு போன் வருகிறது .
எல்லோரும் அந்த போனில் சொன்னபடி வீட்டை விட்டு வெளியே நடு ரோட்டுக்கு வந்து நிற்க, ஒரு லாரி வந்து எல்லோரையும் அடித்துத் தூக்குகிறது . ஒரு காவல் அதிகாரியின் (பிரஜின்) மனைவிக்கும் (வித்யா பிரதீப்) அது நிகழ போலீஸ் அதிகாரி விசாரணை செய்ய என்ன நடந்தது என்பதே படம்.
சின்ன மருத்துவ உண்மையை எடுத்துக் கொண்டு அதில் லாஜிக்கை எல்லாம் மீறி அளவுக்கு அதிகமாக கற்பனையைக் கலந்து கதை சொல்லும் படங்கள் தமிழில் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கின்றன . (பிளட் கேன்சருக்கு மாற்றாக சினிமாவில் சொல்வதற்கு ஒரு புது நோயைக் கண்டு பிடிக்கும் முயற்சியின் விபரீதங்கள் இவை. அப்புறம் இந்த பாம்பே பிளட் குரூப் என்ற அரிதான ரத்த வகையை வைத்து பல படங்கள் வந்தன . இந்தப் படத்தில் அதுவும் இருக்கு. இதே வாரத்தில் AUTO BREWERIES SYNDROM என்ற பிரச்னையை மிகைப்படுத்தி குடிமகான் என்ற ஒரு படமும் வந்துள்ளது ) இந்தப் படம் அந்த வகை.
குற்றாலத்துக்குப் போனவன் குவளையில் தண்ணி மொண்டு தெளித்துக் கொண்ட கதையாக என்பது பழமொழி . அது போல முழுக்க முழுக்க குற்றாலத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் குற்றாலத்தின் இயற்கை அழகு, குவளை .. ம்ஹும் டம்ளர் அளவுக்குத்தான் வருகிறது .
காக்க காக்க படத்தில் கவுதம் மேனன் கமறலான குரலில் கதை சொல்லும் வழக்கத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் . இதோ இந்தப் படத்தில் ஹீரோ கடைசி வரை பின்னணியில் பேசிக் கொண்டே இருக்கிறார் . திருவிழா சமயத்தில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஒலிச்சித்திரம் கேட்பது போல , மொத்தப் படத்தையும் கண்ணை மூடிக் கொண்டு கேட்டு விடலாம் .
டோபமைன் மருந்து டென்சன் மற்றும் எதிர்பார்ப்பைக் குறைத்து நல்ல மனநிலையையும் சக்தியையும் கொடுத்து தூங்க வைக்கும் என்கிறது மருத்துவம் . ஆனால் இந்தப் படத்தில் அந்த மருந்தைத் தண்ணீரில் கலந்து குடித்த அடுத்த நொடி யாருடைய குரல் கேட்கிறதோ , அந்த குரலைத்தான் அதற்கு பிறகு குடித்த நபர் பின்பற்றுவார் என்று விஞ்ஞானத்தோடு விட்டலாச்சார்யாவைக் கலந்து விட்டார்கள் .
தவிர , ஆண் பெண் , சிறுவர் சிறுமியர், ஓரின பாலியல் பலாத்கார வன்கொடுமைகள் என்று ஒரு ஏரியா
பிரஜின் , வித்யா பிரதீப், வீணடிக்கப்பட்ட சார்லி மற்றும் ஒரு சிலர் தவிர தவிர பெரும்பாலான நடிகர்களின் செயற்கை நடிப்பு ஒரு பக்கம்.
படத்தின் பலம் , குறைந்த செலவில் நிறைவான ஒளிப்பதிவு கொடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன். பி. கே
அடுத்த பலம் ஸ்ரீஜித் எடவானாவின் பின்னணி இசை .
ஜெயசீலனின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது .

