மாருதி பிலிம்ஸ் மற்றும் ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ராதா கிருஷ்ணன் மற்றும் ஹரி தயாரிக்க, பூர்ணா, விதார்த், த்ரிகன், சுபஸ்ரீ நடிப்பில், இயக்குனர் மிஸ்கின் இசையில், அவரது தம்பியும் இதற்கு முன்பு சவரக்கத்தி படத்தை இயக்கியவருமான ஆதித்யா எழுதி இயக்கி இருக்கும் படம் .
ஒரு இளம் வாலிபனுக்கும் ( த்ரிகன்) சற்றே பேரிளம்பெண் ஒருத்திக்கும் ( பூர்ணா) ஏற்படும் நட்பு உடல் நெருக்கத்தை நோக்கி நெருங்குகிறது .
அப்போதுதான் அவள் முன்பே திருமணம் ஆனவள் என்பதும் அவள் கணவனுக்கு ( விதார்த்) அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணோடு ( சுபஸ்ரீ) உறவு இருப்பதும் , முதலிரவு அன்று கூட மனைவியை விடுத்து அவள் அழைப்பு காரணமாக அவளோடு இருந்து விட்டு வரும் நபர் அவன் என்பதும் காட்டப்படுகிறது .
ஒருநிலையில் அந்த அலுவலகத் தோழி துரோகம் செய்ய, கணவன் வந்து மனைவியிடம் மன்னிப்புக் கேட்க , அதன் விளைவாக மனைவி , தனது புதிய நண்பனோடு ஏற்படவிருந்த உடல் நெருக்கத்தில் இருந்து விடுபட்டு அவனை விலக்க, அந்த இளைஞன் நள்ளிரவில் வீடு தேடி வர ,
அதை அறிந்த கணவன், மனைவியை சந்தேகப்பட்டு அவளைக் கொல்ல முயல, நண்பன் கனவோடு சண்டையிட … அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படம் .
அட்டகாசமான படமாக்கல் .
படத்துக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் – ஓர் ஈரமான உறைவுடன் கூடிய, பூடகமான உயர்தன்மை ஒவ்வொரு காட்சிகளிலும் ஜொலிக்கிறது
வெகு நாளைக்குப் பிறகு சிம்பாலிக் ஷாட்டை இந்தப் படத்தில் பார்க்க முடிந்த போது கிடைத்த சிலிர்ப்பு அபாரம் . வாழ்த்துகள் ஆதித்யா .
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு , இருள் – ஒளிப் பயன்பாடு , வண்ணக் குழைவு , பின்புல ஆளுமை என, யாவற்றிலும் ரசவாதம் புரிகிறது .
மிஸ்கினின் இசை அர்த்தமும் ஆழமும் பாயவும் கொண்ட ஒன்றாக படத்துக்கு சுவாசக்கற்றாய் வியாபிக்கிறது. வயலினின் சிறப்பான பயன்பாடும் அமைதியின் அவசியமும் உணர்ந்த பண்பட்ட இசை . பாடல் இசை , பின்னணி இசை இரண்டும் மனதுக்கு இலகுவாகவும் படத்துக்கு கனமாகவும் இருக்கிறது .’எனது இசைக்கு நான் 35 மதிப்பெண் கொடுப்பேன்’ என்றார் மிஸ்கின். . ஆனால் நான் அறுபது மதிப்பெண்கள் தருகிறேன் . அருமை .
இயக்குனரின் கதை சொல்லலையும் இளையராஜாவின் படத் தொகுப்பையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு – சற்றும் துருத்திக் கொண்டு நிற்காத படத் தொகுப்பு
மேக்கப் , ஷைமா அஸ்லமின் காஸ்டியூம், ஆண்டனி மரியா கெர்லினின் கலை இயக்கம் யாவும் அருமை ராஜராஜன் கோபாலின் வண்ண ஆக்கம் அபாரம்.
தபஸ் நாயக்கின் ஒலிக்கலவை, அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ராம்குமாரின் ஸ்டண்ட் யாவும் சிறப்பு
இப்படியாக தொழில் நுட்ப ரீதியாக படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது.
நனைந்த மழையின் ஈரத்தை அரைகுறையாய் அவசரமாய் துவட்டிக் கொண்டு வந்து புன்னகைக்கும், தேவதை போல இருக்கிறார் பூர்ணா . படத்தின் முதல் பாதியை தனி மனுஷியாய் தங்குகிறார் . விதார்த், த்ரிகன், சுபஸ்ரீ, ஓலமிடும் குரலுக்காக வாய்ப்புத் தரப்பட்ட ரமா , மற்றும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் கூட குணாதியச் செறிவு கொண்ட முகங்கள் என்று.. அருமை .
யதார்த்தத்தில் நடக்கும் கதை என்பதுதான் இந்தக் காட்சிகளுக்கும் இந்த பாணி படமாக்கலுக்கும் உண்டான பலம் . ஆனால் அந்த முதலிரவுக் காட்சியில் இருந்து அப்நார்மலுக்குப் போகும் திரைக்கதை ஒரு நிலையில் மாய யதார்த்தவாதம் , மாய வாதம் என்று தறிகெட்டுப் போவதால் இலக்கில் இருந்து விலகுகிறது
மனிதர்கள்தான் நிஜமான டெவில் என்ற அந்தப் பார்வை சிறப்பு