தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண்.
பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் கல்யாண பந்தத்தில் இணையவிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மாடல் தீக்ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார்.
திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
திருமணம் குறித்து தரண் கூறும்போது, “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன.
இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன்.
எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. சினிமாவை பொறுத்தவரை நான் இசையமைத்த பாடல்களை பாராட்டி எழுதி,
என்னை ஊக்கப்படுத்தியதோடு நல்ல ஆதரவையும் பத்திரிகை, ஊடகங்கள் அளித்திருக்கின்றன” என உணர்வுப் பூர்வமாக பேசினார் தரண். 
மணப்பெண் தீக்ஷிதா பேசும்போது, “2012ல் இருந்து நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறேன்.
நகர்வலம், ஆகம் என இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன். தற்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன்.
மண வாழ்க்கையில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். வாழ்க மணமக்கள் !