அதர்வா -ஸ்ரீ திவ்யா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “ஈட்டி”. இசை ஜி.வி.பிரகாஷ் குமார்
படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவில் மேற்சொன்னவர்களோடு , படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் ,செரொபின் ராய சேவியர் , ஒளிப்பதிவாளர் சரவணன்… இவர்களோடு இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு. தாணு , கதிரேசன் , தேனப்பன் , கே.ராஜன் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைக்கேல் ராயப்பன் பேசும்போது ” என்னுடைய முதல் படமான நாடோடிகளின் கதையை கேட்கும் போது எவ்வளவு உற்சாகம் அடைந்தேனோ, அதே போல் இந்த படத்தின் கதையை இயக்குநர் ரவி அரசு என்னிடம் விளக்கும் போது அதைவிட பலமடங்கு உற்சாகம் அடைந்தேன்.. என்னைப் பொறுத்தவரை இந்த படத்துக்கு இரண்டு நாயகர்கள் இருக்கிறார்கள் ஒருவர் அத்ர்வா. இன்னொரு நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்.
படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் அவருடைய பங்கு மிக பெரியது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும். நான் என்னுடைய வாலிப வயதில் நடிகர் முரளிக்கு மிகப் பெரிய ரசிகனாக இருந்தேன்.
இப்போது இந்த தலைமுறைக்காரர்களான என்னுடைய மகன் செராபினும் முரளி சாரின் மகன் அதர்வாவும் இனைந்து பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
நான் அத்ர்வாவின் உழைப்பை கண்டு அசந்து விட்டேன் படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து தன்னுடைய சிக்ஸ் பேக் வடிவத்தை உருவாக்கி நடித்துள்ளார். நிச்சயமாக இதற்கான பலன் அவருக்கு கிடைக்கும்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது “இந்த ஈட்டி படத்தின் கதையை முதலில் நான் தயாரிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்று மைக்கேல் ராயப்பன் சாரின் கைக்கு சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால் படத்தை இவ்வளவு பெரிதாக தயாரித்திருக்க மாட்டேன். மைககேல் ராயப்பன் அவர்கள் மிகவும் துணிவான தயாரிப்பாளர். நிச்சயமாக படத்தை அவர் வேறு இடத்துக்கு கொண்டு செல்வார்.
ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்து கொண்டே ஒரே இரவில் , ஒரு பாடலின் கம்போசிங்யை முடித்துவிடலாம்.
நாயகன் அதர்வா படத்துக்கு கொடுத்துள்ள உழைப்பு பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால்தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும்போது தெரிகிறது.” என்றார்.
ஆடுகளம் நரேன் பேசும்போது ” ஒருநாள் ராத்திரி ஒரு தோசை சாப்பிட்ட அதர்வாவுக்கு மயக்கம் வந்தது. இத்தனைக்கும் அது சாதாரண தோசைதான். என்னவென்று கேட்டபோது அதர்வா தோசை சாப்பிட்டே ஒரு வருடம் ஆகி விட்டதாம் . திடீரென்று உள்ளே போன தோசையை அவர் உடம்பு ஏற்கவில்லை. அந்த அளவு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து கஷ்டப்பட்டு நடித்தார் அதர்வா ” என்றார் .
தயாரிப்பாளர் சங்க முன்னால் தலைவர் கே.ஆர் பேசும்போது ” ஜி வி பிரகாஷ் நடித்து இருக்கும் திரிஷா அல்லது நயன்தாரா படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது . ஆனால் படம் மிக ஆபாசமாக இருக்கிறது என்கிறார்கள். அதற்காக வருத்தப்படத் தேவை இல்லை . படம் ஓடுவதுதான் முக்கியம் . வளர்ந்த பிறகு நல்ல படமாக பண்ணிக் கொள்ளலாம் .
லாட்ஜ் கட்டுபவர்கள் முதலில் ஜோடியாக யார் போனாலும் ரூம் கொடுப்பார்கள் . வளர்ந்த பிறகுதான் ஃபேமிலிக்கு மட்டும் ரூம் கொடுப்போம் என்பார்கள். இன்னும் வளர்ந்த பிறகு மனைவியோடு போனாலே சந்தேகமாக பார்ப்பார்கள் . அப்படித்தான் ” என்று போட்டார் ஒரு போடு. (இதையே சாக்கா வச்சு எல்லாரும் கிளம்பிடாதீங்கப்பா. தனி ஒருவன், பாபநாசம் எடுத்தும் ஜெயிக்கலாம் )
நாயகன் அதர்வா பேசியபோது “இந்தப் படத்தின் கதையை தாணு சார் தான் முதல் எனக்கு அனுப்பி வைத்தார். கதையை படித்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதைக்குப் பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதலேயே நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
ரவி அரசு மிகச் சிறந்த இயக்குநர்.
இந்தப் படத்துக்காக மிக பெரிய அளவில் உணவுக் கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பிடித்து வந்தேன். அதனாலேயே எனக்கு படப்பிடிப்புத் தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும். சில நேரங்களில் கண் மங்கலாகத் தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது . கேமராவை கூட நான் தேடி கொண்டு தான் இருப்பேன்.
அந்த நேரங்களில் ‘நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன் நீங்கள் அதை படம் பிடித்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிடுவேன்.
பாக் மில்கா பாக் படத்தில் நடிகர் இயக்குநர் பார்ஹான் அக்தர் அவர்களின் நடிப்பை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவருடைய நடிப்புதான் இந்த படத்தில் நான் நடிக்க மிகப் பெரிய பலமாக இருந்தது. பாக் மில்க்ஹா பாக் படம்தான் இந்த படத்துக்காக நான் கடுமையாக உழைக்க என்னுள் ஒரு வெறியை உண்டாக்கியது” என்றார். (இனிமேலாச்சும் கறி சாப்பிடுங்க தம்பி )