சென்னை ராயபுரம் பகுதியில் நைனா என்ற பட்டப் பெயரோடு தாதாவாக இருக்கும் வகையறாவில், இன்றைய நைனாவாக விளங்கும் நபருக்கு (சித்தப்பு சரவணன் ) ஆண் வாரிசு இல்லை . மகள் மட்டுமே .
வயசாகி விட்டதால் இனி ரவுடித்தனம் செய்து ஏரியாவை கட்டுக்குள் வைக்க முடியாத நிலையில், தன் மகளுக்கு ஒரு மிகப் பெரிய இளம் ரவுடியை திருமணம் செய்து வைத்து,
மருமகனை ஏரியா நைனாவாக்கி தன் கவுரவத்தை தக்க வைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார் அவர் .
ஆனால் அவரது வலது இடது (அல்லக்) கைகளான நபர்கள் (கருணாஸ் . யோகி பாபு ) ,
ரத்தம் பார்த்தாலே வலிப்பு மயங்கி விழுகிற ஒரு தம்மாத்துண்டு பையனை (ஜி வி பிரகாஷ் குமார் ) ஒரு பெரிய ரவுடி என்று நம்பி, கொண்டு வருகிறார்களாம் .
நைனாவும் அதை அப்படியே நம்பி , அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறாராம் .
ஒரு நிலையில் நைனாவின் தொழில் எதிரிகள் நைனா குடும்பம் , நண்பர்கள் மற்றும் கூட்டம் என்று எல்லாரையும் போட்டுத் தள்ள முடிவு செய்ய,
ரத்தம் பார்த்தாலே மயங்கி விழும் அந்தப் பையன் …
பொங்கி எழுந்து எமோஷனலாக உணர்சிகரமான , வீரம் நிறைந்த , தன்னம்பிக்கை ஊட்டும் செயல்பாடுகளை செய்து……
இப்படி எதாவது செய்து, படம் பார்க்க செல்லும் ரசிகர்களை திருப்தி செய்வார் என்று நீங்கள் நம்பினால் ,
அதற்கு கம்பெனி நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது .
இப்படியாக…
தூர்தர்ஷன் தமிழ் ஒளிபரப்பு துவங்கிய காலத்தில்,
தீபாவளி பொங்கலுக்கு செட்டுக்குள்ளேயே எடுத்து எக்கோ அடிக்கும் வசன ஒளிப்பதிவோடு டிராமா போடுவார்களே,
அந்த டிராமா கதையை படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் சாம் ஆன்டன் .
ஜி வி பிரகாஷ் இன்னும் திரிஷா நயன்தாரா ஹேங் ஓவரில் இருந்து வெளியே வரவில்லை எனினும் உற்சாகமாக ஆடுகிறார் . ஓடுகிறார் . பேசுகிறார் . எனர்ஜி லெவல் அருமை
படத்தின் ஹீரோ ஜி வி பிரகாஷ் . ஆனால் கதையின் ஹீரோ சரவணன்தான் . சிறப்பாக நடித்து உள்ளார் . சார்லியும் தன நடிப்பால் அந்த சிறிய கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார்
எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி பார்ப்பது , ஒரே மாதிரி இளிப்பது .. இதுதான் ஆனந்தியின் நடிப்பு . இதுக்கு நாலு எக்ஸ்பிரஷன்களில் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு ,
அதை எல்லா சீன்களிலும் மாறி மாறி காட்டி விட்டால் போதும் .
படம் முழுக்க கோமாளி கூத்துகள் இருந்தாலும் சில இடங்களில்தான் சிரிக்கும்படி இருக்கிறது . விஜய் டிவியின் நிகழ்ச்சியை கிண்டல் அடித்துக் கிழிக்கிறார்கள்
எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற — தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த தத்துவப் பாடல்களில் ஒன்றான —
” கண்ணை நம்பாதே . உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது . அறிவை நீ நம்பு . உள்ளம் தெளிவாகும் ” என்ற பாடலை , சரக்கடித்து விட்டு ஆடும் பாடலாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் .
தவிர , ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’ என்ற சந்திரபாபு பாடலையும் அடித்துத் துவைத்து உள்ளனர் .
தன் மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் வீட்டுக்கு நைனா போனால் , அங்கே மாப்பிள்ளையின் அம்மா , நைனாவின் பழைய ‘ஆளா’ம்.. அது மட்டுமல்ல நண்பனின் மனைவியுமாம்
பின்னர் ஒரு காட்சியில் ஜி வி பிரகாஷ் குமாரே தனது அம்மா தனது மாமனாரின் ஆள் என்பதை, தனது அப்பாவிடமே சொல்லி சிரிக்க வைக்கிறார் . . கேட்டால் காமெடியாம்.
சுய இன்பப் பழக்கத்தை குறிக்கும் பேச்சு வழக்கு வார்த்தையை வைத்து வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா கேரக்டர்களும் சொல்ல வருகிறார்கள் . கேட்டால் .. காமடியாம் !
உடலுறவுக்கும் பொருத்தமான ஒரு வார்த்தையை ஒரு காட்சியில் நேரடியாக சொல்கிறார் ஆனந்தி . உடனே ஜி வி பிரகாஷ்குமார் உற்சாகப்பட ,
”நான் அதை சொல்லல” என்று நேரடியாக உடலுறவைப் பற்றி பேசுகிறார் . கேட்டால் .. காமடியாம்
யாராவது ஈழம், புலி, தமிழ் என்று வசனத்தில் ஒரு வார்த்தை வைத்தால் அதை நீக்கி விட்டே நீட்டிப் படுக்கும் தணிக்கைத் துறை தகர டப்பாக்கள் , மேற்சொன்ன வார்த்தைகளை எல்லாம் ,
எந்த ‘பொறை’யை கவ்விக் கொண்டு அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை .
UA சான்றிதழ் கொடுத்து விட்டால் ஆச்சா ? இதெல்லாம் பெரியவர்கள் துணையோடு சிறியவர்கள் பார்க்கும் விசயங்களா ?
கடைசியில் எதாவது ஒரு உருப்படியான ஏரியாவுக்கு வருவார்கள் என்று பார்த்தால் , மன்சூர் அலிகான் , பொன்னம்பலம் , நான் கடவுள் ராஜேந்திரன் இவர்களை எல்லாம்,
கவுரவத் தோற்றத்தில் போட்டு படம் பார்ப்பவனை அடிக்கிறார்கள்
ஜி வி பிரகாஷுக்கு ஒரு வார்த்தை . டார்லிங் நடிகனாக நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது . சந்தோசம் .
திரிஷா அல்லது நயன்தாரா ‘வேறு மாதிரி’ வந்தது. சரி, முடிஞ்சதைப் பேசி பிரயோஜனம் இல்லை .
அடுத்து வேறொரு வகையான படத்தில் ரசிகர்களைக் கவர்வது மாதிரி ஜெயித்து இருக்க வேண்டாமா?
இப்படியா சகதியில் புரள்வது ?
எனக்கு இன்னொரு பேர் இருக்கு ….
ரெண்டு பேரு வச்சீங்களே ; கொஞ்சமாவது (நல்ல திரைக்கதை என்னும் ) சோறு வச்சீங்களா புரோ ‘ ஸ் ?