சுதேசிவுட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,
பிரியா , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் .
படத்தின் முதல் தோற்ற வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுசீந்திரன், ரோஷன், கேமரா மேன் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன்,
வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுசீந்திரன்,
“நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை ஒரு கருவாக முதலில் யோசித்தபோது கதையையும் , கதாபாத்திரத்தையும் பற்றி ,
பலரிடம் ஒன் லைனாக கூறினேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன்.
அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது .
ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது.
இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும்.
அந்த படத்தின் பாதிப்பில்தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டெயினாராக இருக்கும்.
இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்
நாயகன் ரோஷன் தன் பேச்சில் “சில வருடங்களுக்கு முன்னால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன்.
காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல்தான் இருந்தேன். கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி,
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “ வாழ்வில் என் விருப்பங்கள் நிறைவேறி விட்டன .
ஆனால் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ? “ என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம்தான்,
இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் ,
என்னுடைய நண்பன் என்னுடைய பிஸ்னஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய பலம்.
அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக்கொண்ட என்னுடைய இன்னொரு நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால்தான் நான் இன்று இங்கு உள்ளேன்.
முன்பே இன்னொரு படத்தை தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும் , மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்த்ரனுக்கு நன்றி” என்றார்
மீன் குழம்பும மண் பானையும் படத்தின் இயக்குனரும் இந்த படத்தின் வசனகர்த்தாவுமான அமுதேஷ்வர் பேசும்போது,
” சுசீந்திரன் ஒரு சகோதரனாய் பல வருடம் பழகி வருபவர் . அவர் படத்தின் என்னை நடிகனாக அறிமுகப் படுத்தினார் . வசனகர்த்தாவாகவும் ஆக்கினார் .
இந்தப் படத்தில் மீண்டும் வசனம் எழுத வைத்துள்ளார் . மிகச் சிறந்த படமாக வந்துள்ளது இந்த ஜீனியஸ் படம் .
பெற்றோரும் படிக்கும் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் இது ” என்றார் .
படத்தில் நடித்துள்ள நகைச்சுவைப் பேச்சாளர் ஈரோடு மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ,
செப்டம்பர் மாதம் இரண்டாம் பகுதியில் திரைக்கு வர திட்டமிடுகிறார் ஜீனியஸ் .
