தனிப் பாடல்களுக்கு இசை அமைத்தோ அல்லது அவற்றை எழுதியோ பாடியோ அதன் வழியே சினிமாவில் வாய்ப்புத் தேடியது அந்தக் காலம் .
ஆனால் சினிமாவில் வாய்ப்புப் பெற்ற பின்னும் தனி ஆல்பங்களை உருவாகும் அளவுக்கு ஒரு புதிய மாற்றம் வந்துள்ளது .
அதுவும் சமூக விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட விசயங்களுக்கு பலன் தரும்படி இந்த தனிப்பாடல்கள் சில உருவாவது சிறப்பான விஷயம் .
அப்படி ஒரு பாரட்டுக்குரிய பட்டியலிலும் வருகிறார் இசை அமைப்பாளர் குரு கல்யாண் . கல்யாண் என்பது இவரது அண்ணன் பெயர்
மாத்தி யோசி , குகன், கோட்டி படங்களுக்கு இசை அமைத்த குரு கல்யாண் இன்னொரு பக்கம் குரு கல்யாண் மியூசிக் என்ற பெயரில்,
இணையதளம் ஒன்றை யூ டியூபில் துவங்கி , நிறைய தனிப் பாடல்கள் வெளியிட்டு வருகிறார் . என்னென்ன பாடல்கள் ? அதன் பலன்கள் என்னென்ன ? அவரே சொல்கிறார்
“குழந்தைகள் தினப் பாடல், வீரத் தமிழன் என்ற ஜல்லிக்கட்டுப் பாடல், , பாடலாசிரியர் அண்ணா மலை மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் ஆகியற்றை வெளியிட்டேன் .
விவசாயம் தொடர்பான வதுவை நன்மணம் என்ற பாடலுக்கு இசை அமைத்து வெளியிட அதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது
இந்தப் பாடலை நடிகர் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியரான பழனி பாரதி எழுதியதால் அதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது .
விஜய் அவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் தனிச் சிறப்பைக் கண்டு வியந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும்,
இளையதளபதி ரசிகன்டா என்ற பாடலை உருவாக்க எண்ணினேன்.
மெட்டு அமைத்த உடன் கவிஞர் பழனி பாரதி அவர்களிடமே பாடல் எழுதித் தரச் சொன்னேன். அவரும் சம்மதித்தார் .
‘கில்லி நாங்கடா.. சொல்லி அடிப்போம்’ என்ற அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் ஃபர்ஃபக்ட் விஜய் ஆன்த்தம்’ என்று ரசிக்கப்பட்டு வருகிறது .
எனக்கு மிகுந்த திருப்தியை கொடுத்த பாடல் இது (பாடலை கேட்க tamil cinema news, ilaya thalapathi vijay , gurukalyan, pefrect vijay anthen )
இது மட்டுமின்றி இப்போது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் அறப் போராட்டத்தை ஆதரித்து விவசாயிகள் என்ற பாடலை வெளியிடுகிறேன். இதை எழுதியதும் பழனி பாரதிதான்
.இந்தப் பாடலுக்கு உமா சங்கர் என்ற இயக்குனர் காணொளி அமைகிறார்
இந்த உமாசங்கர் இயக்கிய ஈஷா என்ற குறும்படத்துக்கு நான் இசை அமைத்தேன் . 146 திருக்குறளான
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
என்ற குறளை மையமாக வைத்து (‘அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது ‘ என்று பொருள்) மையமாக வைத்து உருவான படம் இது .
இந்தக் .குறும்படம் தாதா சாஹிப் பால்கே குறும்பட விருதுக்கு பரிந்துரைகப்பட்டுள்ளது .
இந்தக் குறும்படம் உமா சங்கர் இயக்கத்தில் ஸ்ரீ சாயி பிலிம்ஸ் தயாரிக்க திரைப்படமாக உருவாக இருக்கிறது . அதற்கும் நான் இசை அமைக்கிறேன்.
இந்த படத்துக்கு அமெரிக்காவில் வசிக்கும் என் அண்ணன் கல்யாண் மேற்கத்திய இசைக்கோர்ப்பு , மற்றும் இசைக் கோர்ப்பு தொழில் நுட்ப நுணுக்கப் பணியாற்ற இருக்கிறார் ” என்கிறார்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இசையிறப்பான் கண்
— என்று விமர்சனம் வராத அளவுக்கு,
நல்லிசை கொடுக்க வாழ்த்துகள்





