ஸ்ரீ ஐயப்பனின் சர்வ சக்தி மகிமையை விளக்கும் ‘கன்னி சாமி’ திரைப்படத்தை
ஏ.ஜாகீர் உசேனின் என்ற இஸ்லாமிய சகோதரரின் ரோஷன் மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது எவ்வளவு சிறப்பான விஷயம் !
மலேசியா கவிமாறன் தயாரித்த குருசாமி அபூர்வ மகான் போன்ற படங்களை இயக்கிய கே ஆர் மணிமுத்து இயக்கத்தில் , நவ்ஷத் ஒளிப்பதிவில் கண்மணி ராஜா இசையில் கே ஆர் வேலாயுதம் கதை வசனத்தில் ,
சரவணன், அர்ச்சனா சிங், சத்ய பிரகாஷ், ‘அவன் இவன்’ ராமராஜன், மாஸ்டர் யோகேஸ்வரன், திருச்சி ஜெகதீசன், கிங்காங், போண்டாமணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம்தான் இந்த கன்னி சாமி .
பாடல்கள் – மறைந்த அண்ணாமலை மற்றும் தமிழ் அமுதன், ஏம்பல் ராஜா, வைர மூர்த்தி. நடனம் – பவர் சிவா, மக்கள் தொடர்பு பெரு.துளசி பழனிவேல்.
கன்னி சாமியின் கதை என்ன சாமி ?
“நாயகன் ஒரு மேடைப் பாடகன். அவனது குரலுக்கு மயங்கி காதலித்து திருமணம் செய்து கொண்டவள் நாயகி. நாயகி மீது ஒரு தலைக் காதல் கொண்டவன் ஒருவன்.
ஆனால் நாயகி அவனது காதலை ஏற்றுக் கொள்ளாமல், நாயகனை காதலித்து திருமணம் செய்திருக்கிறாள்
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு தலைக் காதலன் ஏதேதோ சதி வேலைகளை செய்து காதல் தம்பதியைப் பிரிக்க முயற்சிக்கிறான்.
பாடகனான நாயகனின் குரலுக்கு மயங்கி பல பெண்கள் அவனை மேடையிலேயே முத்தமிடுகிறார்கள். அதை அவன் தன் பாடல் திறமைக்கான பரிசாக மட்டுமே எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஆடிப் பாடுகிறான்
ஆனால் இதை வைத்து அந்த ஒருதலைக் காதலன் நாயகியிடம் ” உன் கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்களுடன் அவன் ஊர் சுற்றுகிறான் .
உனக்கு துரோகம் செய்கிறான் ..’ என்று சொல்லி நம்ப வைத்து, இருவரையும் பிரித்து விடுகிறான் .
பிரித்தது மட்டுமில்லாமல், வீட்டில் தனியாக இருக்கும் நாயகியை பலாத்காரமாக அடைய முயல்கிறான்
இவற்றை நண்பர்கள் மூலம் அறியும் நாயகன் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று துடிக்கிறான் மனைவியைக் காண ஓடுகிறான்
இறுதியில் நடந்தது என்ன..? அயோகியனிடம் இருந்து நாயகி தப்பினாளா? நாயகன் தனது மனைவியைக் காப்பாற்றினானா..?
–என்பதுதான இந்தக் ‘கன்னி சாமி’யின் கதை சாமி (பின்னே ஒரு நல்ல படத்துக்கு கதைதானே சாமி ?)
நாயகனாக சரவணனும் நாயகியாக அர்ச்சனா சிங்கும் அயோக்கிய ஒருதலைக் காதலனாக சத்யபிரகாஷும் நடிக்கிறார்கள்
— என்று கூறுகிறார் இயக்குனர் கே ஆர் மணிமுத்து
” படப்பிடிப்பை கேரளாவில் சபரிமலை, எரிமேலி, மற்றும் தமிழகத்தில் ஆவுடையார் கோயில், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் படமாக்கியிருக்கிறோம். (வாவர் சன்னிதானம் படத்துல வருதுல்ல… ?)
அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வரவிருக்கிறோம்..” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஜாகீர் உசேன்.
வாங்க சாமி வாங்க !