முதலில் கேரக்டர் அசாசினேஷனுக்கு வருவோம்.
குழந்தை இல்லாமல் பல வருடம் அவமானப்பட்ட ஒரு அக்கா — அதன் வேதனைகள் அறிந்த அக்கா … தனக்கு அக்கறையோடு மருத்துவம் பார்த்து பிரசவம் நடக்க வைத்த மருத்துவரே தன் தம்பியின் காதல் மனைவியாக வந்த நிலையில்…. தனக்கும் தன் கணவனுக்கும் பல ஆண்டுகள் ஏற்பட்ட ( படத்தில் சொல்கிறபடி ) ‘மலடி – ஆண்மை இல்லாதவன் அவமானம்’ …
தன் தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் ஏற்படக் கூடாது என்பதில் எவ்வளவு குறியாக இருப்பாள் ? அதற்கு தன் மகனால் ஒரு நொடி தடை வரும் என்றாலும் அவள்தான் அதை சரி செய்வாள் .
ஆனால் இங்கே நேர்மாறு . எப்போதும் அக்கா மகனுடனேயே இருப்பதால் எனக்கு கணவர் நேரம் ஒதுக்கவில்லை என்று வருத்தப்படும் மனைவி மீது, அக்காவுக்கு ஆங்காரம் வருகிறது . அவளை மட்டம் தட்டப் பார்க்கிறாள் . இதற்குப் பெயர்தான் CHARACTER ASSASSINATION. அவள் இயல்பே அதுதான் என்றால் அட்லீஸ்ட் அதை அக்கா என்று சொல்லாமல் தங்கை என்றாவது சொல்லி இருக்கலாம் . மெச்சூரிட்டி லெவல் என்ற சமாதானமாவது கிடைத்திருக்கும்.
இது கூடப் பரவாயில்லை . ஆனால் ஆத்திரத்தில் பிய்த்து இழுத்துக் கொண்டு போன தன் மகனை சமாதானம் செய்ய அவள் அடுத்து செய்யும் அந்த போட்டோ சமாச்சாரம் … ரொம்ப இம்மெச்சூரான காட்சி . அதை கடைசிவரை சரி செய்ய முடியாமல் உடைந்து நொறுங்கி விட்டது திரைக்கதை .
யதார்த்தமாக யோசித்தால்… ஒரு கணவன் மனைவி வாழும் வீட்டில் கணவனின் அக்கா மகன் கணவன் கூடவே எப்போதும் இருக்கிறான் எங்கே போனாலும் உடன் வருகிறான் என்பது, ஒரு புது மனைவிக்கு எரிச்சல் தந்தது என்பதே ஒரு நல்ல சித்தரிப்பு இல்லை. அப்படி எல்லாம் கடந்துதான் நம் முன்னோர் பெண்கள் வாழ்ந்து செழித்தார்கள் . எனினும் யதார்த்தத்தில் அந்தக் கோபம் இந்தக் கால நியாயம் என்றே வைத்துக் கொள்வோம் .
அதற்காக அந்தக் கணவன் மனைவிக்குள் எதுவுமே நடக்கவில்லை. அவள் கர்ப்பம் ஆகவே இல்லை . அவள் கணவனை பொய் சொல்லி பிரித்து வேறு ஊருக்குக் கொண்டு சென்று, சில போர் அடிக்கிற மாண்டேஜ் காட்சிகள் எல்லாம் நடந்த பிறகுதான் (பொதுவாக அதிக கேரக்டர்கள் உள்ள திரைக்கதைகளில் fill up மாண்டேஜ்கள் பெரும்பாலும் பலன் தராது ) , அவள் கர்ப்பமானாள் என்று சொன்னால் …
ஏ
ன்யா யோவ்…. அந்த ஆறு ஏழு வயசுப் பையன் ஸ்கூல் போக மாட்டானா? குளிக்கப் போக மாட்டானா? விளையாடப் போக மாட்டனா? நைட்டு ரெண்டு இட்லியைப் போட்டு ஒரு கிளாஸ் பால் கொடுத்துட்டா தூங்க மாட்டானா? அந்த வீட்டுல ஒரே ஒரு ரூம்தான் இருக்கா? மத்த ரூமை எல்லாம் வாடகைக்கு விட்டாங்களா? இல்ல அங்கே எல்லாம் பேய் இருக்கா? அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு அம்பத்தி ரெண்டு கருக்கருவா?
ஆறு வயசு பையனோடு ஒரு கணவன் மனைவி ஹனிமூனே போலாமே .. என்ன கெட்டுப் போச்சு? அதுக்கு எதுக்கு அவ்வளவு கலவர களேபர ரணகளமாக ஒரு சீன்?
படத்தின் கதை சூரி . அவர் இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்கிறார் . அந்த உண்மை சம்பவத்தில் இதெல்லாம் இருக்கா? வாய்ப்பில்லை . இருந்தாலும் அது சூப்பர் லாஜிக் .
சினிமாவுக்கு லாஜிக் வேண்டும் . லாஜிக் இல்லாமலும் இருக்கக் கூடாது . சூப்பர் லாஜிக்கும் கூடாது .
குறைந்த பட்சம் காதல் , பிச்சைக்காரன் படங்களில் போட்டது போல “இது உண்மைக் கதை ” என்று ஒரு வாக்கியமாவது போட்டு இருக்க வேண்டும். அதை வைத்து எல்லார் வாயையும் அடைத்து இருக்கலாம் . அதுதான் புத்திசாலித்தனம்
இரண்டாம் பகுதியில் எல்லா காட்சிகளும் தேவை இல்லாத நீளம் .. அப்படி நீளமாகப் போனாலும் முத்தாய்ப்பாக முடியுதா? உணர்வுக் கூட்டல் வருகிறதா என்றால் அதுவும் இல்லை
இப்படி திரைக்கதை சரி இல்லாத காரணத்தால் ஒளிப்பதிவு எடிட்டிங் இசை போன்ற விசயங்களும் பெரிதாகப் பலன் தரவில்லை.
ராஜ்கிரணும் விஜி சந்திரசேகரும் சம்மந்தப்பட்ட பல காட்சிகளும் கொட்டும் மழைக்காலத்தில் எலுமிச்சம்பழ ஜூஸ் மாதிரி தேவை இல்லாமல் ஓடுது .
அந்தக் காட்சிகளில் ஒரே உயிர்ப்பான விசயம் என்னவென்றால் …
”என்னதான் சண்டை போட்டாலும் அவரு பொண்டாட்டியை கை நீட்டி அடிக்க மாட்டார் ” என்பதுதான் .
அதையும் போனால் போகிறது என்று ஜஸ்ட் வசனமாக சொல்கிறார்கள் . அந்த வசனத்தை விஜி சொன்னாலாவது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அதையும் ராஜ்கிரண் தான் சொல்கிறார் .
அதை ஒரு காட்சியாக – அதாவது யாரோ ஒருவன் தன் மனைவியை அடிக்க – அதை விஜி தட்டிக் கேட்க, – ”உன் புருஷன் யோக்கியமா. நீயும் அவரும் தினமும் சண்டை போடலியா ?” என்று அவன் கேட்க..
அப்போது அவன் முகத்தில் கத்தி வீசுவது அந்த விசயத்தை விஜி சொல்வதாக வைத்திருந்தால் ., அப்படியே பின் நோக்கி கரண்ட் பாய்ந்த கதையாக அதுவரை படத்தில் ராஜ்கிரண் விஜி நடித்த அத்தனைக் காட்சிகளுக்கும் உயிர் வந்திருக்கும் . அதையும் செய்யல.
அப்படி இருந்தும் விஜியின் மரணக் காட்சிகள் வெகு நீளம்
விஷயம் சிம்பிள் ..
இதுபோல கனமான கதைகள் கிடைக்கும்போது கொஞ்சம் நேரம் ஒதுக்கி பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் , பாரதிராஜா படங்களைப் பாருங்கள் . படம் பார்த்து விட்டு அதன் கதையை யோசியுங்கள். அந்தக் கதையில் உள்ள விபரீதமும் அந்த மேதைகள் அதை எப்படி ட்ரீட் செய்து உள்ளார்கள் என்றும் புரியும் .
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் ..
படித்தால் மட்டும் போதுமா?
படத்தில் பாலாஜியும் சிவாஜியும் அண்ணன் தம்பிகள் . சிவாஜிக்குப் பெண் பார்க்க பாலாஜி போவார் . பாலாஜிக்குப் பெண் பார்க்க சிவாஜி போவார்.
தமிழ்க் கலாச்சாரத்தில் ஒருவனுக்குப் பெண் பார்க்க அம்மா, அப்பா, அக்கா, தங்கை , அத்தை மாமா, தாத்தா பாட்டி சித்தப்பா சின்னம்மா பெரியப்பா பெரியம்மா யார் வேண்டுமானாலும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ போய் வருவார்கள் . ஆனால் அவனது அண்ணனோ தம்பியோ தனியே போக மாட்டார்கள் .
ஆனால் படித்தால் மட்டும் போதுமா, 1954 ஆ ஆண்டு வந்த நா என்ற வங்காளப் படத்தின் தழுவல் . அந்தப் படம் தாரா சங்கர் பந்தோபாத்யாய் எழுதிய நா என்ற நாவலில் இருந்து உருவானது .
வங்காளத்தில் அப்படி அண்ணனுக்கு தம்பி மட்டுமோ and Vice Versa போகிற வழக்கம் இருந்திருக்கலாம் . சரி தமிழில் அதை மாற்றலாமா என்றால் மாற்றினால் மொத்தக் கதையும் கொலாப்ஸ் ஆகிறது . அந்த நிலையில் அந்தக் காட்சியும் படத்தில் இருக்கும் . ஆனால் அதை பீம்சிங்கும் ஆரூர்தாசும் அப்படி அட்டகாசமாக ஹேண்டில் செய்து இருப்பார்கள்
குலமா குணமா , கை கொடுத்த தெய்வம் போன்ற படங்களில் வித்தியாசமான சிச்சுவேஷன்களை எப்படி ட்ரீட் செய்து இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் . வாழ்க்கை அனுபவம் வேண்டும்.
உடனே ஓல்ட் மூவீஸ் கிரிஞ் என்று பேசக் கூடாது . இப்போது தமிழில் ஓகோ என்று ஓடும் கதைப் படங்கள் எல்லாம் கதையிலோ அல்லது ட்ரீட் மென்ட்டிலோ பழைய படங்களின் இன்னொரு வடிவம்தான்.
இப்போதும் சொல்கிறேன் . மாமன் படத்தின் அடிப்படைக் கதை அபாரமானது . அசாத்தியமானது . தாய்மாமன் என்ற உறவு பல்லாயிரமாண்டு தமிழ்க் கலாச்சாரத்தின் ஆணி வேர்களில் ஒன்று .
இன்றும் உலகமே வியக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்… போரில் அவனது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்த நிலையில் அவன் தாய்மாமன் (அம்மா முதிய வேண்மாளின் அண்ணன் ) இரும்பிடர்த் தலையார் என்பவரால் வளர்க்கப்பட்டவன்தான் . ஆக, கல்லணைக்கு உள்ளேயும் ஒரு தாய்மாமனின் பாசம் இருக்கு
இதைத்தானே நீங்க இந்தப் படத்தில் சொல்லணும் .
மாமன் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதே என் ஆசை . சூரி என்ற தங்கமான மனிதனுக்காக
படம் முடிந்து வெளியே வந்ததும் சூரியிடம் ”படத்தின் கதை பிரம்மாதம்” என்றேன் . சரியாகப் புரிந்து கொண்டு” படம் எப்படிண்ணே இருக்கு/” என்றார் . நல்லா இருக்கு என்று மட்டும் சொல்லி விட்டு வந்தேன்
ஆனால் இந்தப் படம் எவ்வளவு நன்றாக ஓடுகிறதோ அதை விட மூன்று மடங்கு ஓட வேண்டிய படம் . (அப்படி ஒரு கதை . அப்படி ஒரு நடிகர்கள் அதுவும் ராஜ்கிரணும் விஜி சந்திரசேகரும்… ! புலிகளைக் கூட்டிக் கொண்டு போய் பொரி உருண்டை சாப்பிடக் கொடுத்த கதையாக ராஜ்கிரனையும் விஜி சந்திரசேகரையும் சும்மா நிற்க வைத்து இருக்கிறார்கள்.இருவரும் இந்தப் படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் )
ஆனால் இந்தப் படம் இவ்வளவுதான் ஓடுது என்றால் அதற்கு ஒரே காரணம் பக்குவம் இல்லாத புரிதல் இல்லாத அலட்சியமான மேம்போக்கான திரைக்கதையே .
– சு.செந்தில் குமரன்
91 98400 76462
su.senthilkumaran@gmail.com