சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதை
தொழுது படித்திடடி பாப்பா
– என்றான் முண்டாசுக் கவிஞன்
அதன்படி தமிழின் உயர்வைச் சொல்ல சொல் என்ற பெயரிலேயே ஒரு படம் வருகிறது .
செம்மொழிக் கலைக்குடில் சார்பில் திருமதி விஜயா பாவண்ணன் தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்து பாவண்ணன் இயக்கும் படம் சொல்.
கதாநாயகியாக நடித்து இருப்பவர் கேரளாவைச் சேர்ந்த அஞ்சனா .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அபிராமி ராமநாதன் , கருஞ்சிறுத்தை (ஜாகுவார் ) தங்கம் , இயக்குனர் பேரரசு, தவிர பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் ,
முன்னாள் சென்னை நகரத் தந்தை சா. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற அறிவிப்பு வர
பாவண்ணன் — விஜயா தம்பதியின் மூத்த மகள் மேடை ஏறி ,
தமிழின் சிறப்பை விளக்கும் ஒரு அற்புதக் கவிதையை தங்கு தடையின்றிப் பொங்கிப் பேசி புளகாங்கிதம் அடைய வைத்தார்.
பொது நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவித்தால் அங்கே மனோன்மணியம் சுந்தம்பிள்ளை இயற்றிய நீராரும் கடலுடுத்த என்று துவங்கும் பாடலைத்தான் பாட வேண்டும் .
நாமாக எதாவது புதிதாக எழுதினால் தமிழ்த் தாய்க்கு எங்கள் வாழ்த்து என்று சொல்லித்தான் பாட வேண்டும் .
அந்த நெறியை மீறி இருந்தாலும் அந்த சிறுமி பேசிய தமிழில் உள்ளம் உவந்ததால் குறையே தெரியவில்லை .
அடுத்து அடுத்து பாவண்ணன் — விஜயா தம்பதியின் அடுத்த இரண்டு மகள்கள் வந்து தமிழில் கவிதை மணக்கப் பேசியபோதே அது வழக்கமான திரைவிழாவில் இருந்து மாறுபட்டு தமிழ் விழாவாக மாறிப் போனது .
அடுத்து ம.கோ.ரா (எம் ஜி ஆர் ) வேடத்தில் வந்த உதயகுமார் என்பவர் ம.கோ.ரா (எம் ஜி ஆர் ) போல,
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற வெற்றி மீது வெற்றி வந்து பாடலுக்கு உற்சாகமாக ஆட,
அதைத் தொடர்ந்து படையப்பா சிவாஜி பாணியில் மேடையேறிய சிவாஜி கண்ணன் என்பவர் ,
சினிமா நிகழ்வுகளில் நடிகர் திலகம் பேசுவது போலவே மிக சிறப்பாக பேசியதோடு ,
பாபு படத்தில் இடம்பெற்ற இதோ எந்தன் தெய்வம் பாடலுக்கு சிவாஜி போலவே அட்சர சுத்தமாக நடித்து நிஜமாகவே சிவாஜியை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தினார் . பிரம்மிப்பு .
அவரை மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்லாது மற்றோரும் வியந்து பாராட்டினர்
திரையிடப்பட்ட முன்னோட்டம் தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்கும் கதாபாத்திரங்களுக்கு தமிழில் என்ன எல்லாம் இருக்கிறது என்று சொல்லும் விதமாக இருந்தது சிறப்பு .
கஜேந்திரன் இசையில் பாவண்ணன் எழுதி இருக்கும் ஒரு பாடலில் தமிழின் 247 எழுத்துக்களும் சொல் பயன்பாடாக இல்லாமல் (இது இயலாத காரியமும் கூட ) வரிசைக்கிரமமாக இடம்பெறுவது சிறப்பு . .
தமிழில் உள்ள வார்த்தைகளில் எந்த எழுத்தும் உயிரற்று இருப்பது இல்லை . ஆங்கிலத்தில் psycology என்று எழுத்தின் விட்டு அதை சைக்காலஜி என்று சொல்வார்கள் . அங்கே p என்ற எழுத்துக்கு உயிரில்லை .
knowledge என்று எழுதி விட்டு அதை நாலேட்ஜ் என்று படிப்பார்கள் . அங்கே k என்ற எழுத்துக்கு உயிரில்லை . ஆனால் தமிழில் அப்படி இல்ல . என்ன எழுதுவோமோ அதைத்தான் உச்சரிப்போம் .
என்ன உச்சரிக்கிறோமோ அதைத்தான் எழுதுவோம் . சொல்லில் உள்ள எல்லா எழுத்துக்கும் உயிருள்ள மொழி தமிழ் ” என்று ,
நான் அடிக்கடி சொல்லும் ஒரு விசயத்தை மேடையில் பேசினார் கவிஞர் இசை . சிறப்பு .
பாடலாசிரியர் கிருதயா தன் பேச்சில் ” அன்று ஊமைப் பெண்ணல்லோ பாடலில் உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஜெமினி கணேசன் சாவித்ரிக்கு கற்றுத் தருவது போல கண்ணதாசன் எழதினார்.
அப்புறம் சரஸ்வதி சபதம் படத்தில் அகர முதல எழுத்தெல்லாம் பாடலில் ஒவ்வொரு வரியையும் ஒரு உயிரெழுத்தில் என்று வரிசையாக பயன்படுத்தி எழுதி இருப்பார் .
அடுத்து அன்பின் வடிவம் ஆனா . ஆசையின் வடிவம் ஆவன்னா என்ற பாடலில் தமிழ் எழுத்துக்கள் வந்தன .
சிங்கார வேலன் படத்தில் இடம்பெற்ற புதுச் சேரிக் கச்சேரி பாடலில் க க காக கி கீ கி கககே குகு கு கு கே கே என்று , உயிர் மெய் எழுத்துக்களை பாடலில்,
முதன் முதலில் கொண்டு வந்தவர் வாலி அய்யா . (வரிசையும் முழுமையும் இல்லாவிட்டலும் கிண்டலாகப் பயன்படுத்தப் பட்டாலும்… இல்லையா கிருதயா ?)
ஆனால் 247 எழுத்துகளும் இடம் பெறும் முதல் பாடல் இதுதான் ” என்றார் .
தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி பேசும்போது
“தமிழின் மேன்மையை உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படத்தை எடுத்த பாவண்ணனை,
உலகில் உள்ள எல்லா தமிழர்களும் ஆதரிக்க வேண்டும் . நமக்கு நாம்தான் முதல் ஆதரவாக இருக்க வேண்டும் ” என்றார் .
பெருங்கவிக்கோ வாமு சேதுராமன் தனது உரையில் ” பாவண்ணன் செய்திருக்கும் இந்தப் பாடல் பணி உயரியது. இனி உலகம் முழுக்க அந்தப் பாடல் ஒலிக்கும் .
ஆங்கிலத்தில் எப்படி மொத்த எழுத்துகள் 26 மட்டும்தானோ , அப்படி தமிழிலும் ஆரம்பத்தில் மொத்த எழுத்துகள் உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18…ஆக முப்பதுதான் .
பின்னாளில் இரண்டும் இணைந்து உயிர் மெய் எழுத்துகள் உருவாயின .இதுதான் உண்மை .
நான் தமிழுக்கு தொண்டு செய்தே காலம் கழித்து விட்டேன். உலகம் முழுக்க சுற்றி என்னால் முடிந்தவரை தம்ழின் பெருமையை பேசி விட்டேன்.
இப்போது தமிழின் பெருமை சொல்லும் காப்பியம் ஒன்றை படைத்து வருகிறேன் .
ஆனால் நான் ஆரம்பத்தில் பாடல் எழுதத்தான் சென்னை வந்தேன் . ஆனால் என்னால் முடியவில்லை . ஒரு பாடல் எழுதி பதிவும் ஆகி பின்னர் அவமானப் படுத்தப்பட்டதால் விலகி விட்டேன் .
அயல் நாட்டுத் தமிழர் ஒருவர் தான் உருவாகும் ஒரு படத்துக்காக சில பாடல்களை எழுதி வாங்கிப் போனார் . அதோடு போச்சு ” என்று கூற
கருஞ்சிறுத்தை (ஜாகுவார் ) தங்கம் தன் பேச்சில்
” இவ்வளவு பெரிய தமிழ் அறிஞர் நீங்கள் எல்லாம் பாடல் எழுத முடியவில்லையே என்று வருத்தப்படுவதா ?
அடுத்து நன் உருவாக்கும் படத்தில் நீங்கள் பாடல் எழுதுகிறீர்கள் . விரைவில் வீட்டில் வந்து சந்திக்கிறேன் ” என்று கூறி விட்டு ,
தொடர்ந்து ” இந்த சொல் படத்தில் 247 தமிழ் எழுத்துகளும் இடம் பெறும் இந்தப் பாடல், தமிழ் தெரியாத மற்றவர்க்கும் அயல் நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் தமிழ் சொல்லித் தரும் இசை வடிவமாக ,
இந்தப் பாடல் விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தப் படத்துக்காக பாவண்ணன் நிறைய இழந்து இருக்கிறார் . ஊரில் உள்ள சொத்துகளை எல்லாம் விற்று இருக்கிறார் .
எதை இழந்தாலும் தமிழை இழக்க மாட்டேன் என்று சொல்கிறார் . அவரை நாங்கள் இழக்க மாட்டோம்” என்றார்.
சா. கணேசன் பேசும்போது,
” சினிமா உலகில் உள்ள பலர் தங்கள் படங்களில் தமிழை தவறாகப் பயன்படுத்துவார்கள். அதிக ஆங்கிலம் பயன்படுத்துவார்கள் .
தணிக்கையின் போது கேட்டால் கண்டுக்காதீங்க என்பார்கள் . கமல்ஹாசனே கூட அப்படி கூறி இருக்கிறார் . ஆனால் பாவண்ணன் தமிழுக்காகவே ஒரு படம் எடுத்து இருப்பது மிகச் சிறந்த தொண்டு ” என்றார் .
இயக்குனர் பேரரசு
” எங்க அப்பா சினிமாவில் சேர முயன்று தோற்றுப் போய் வந்தவர் . அவர் அது பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார் .அதுதான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை எனக்கு கொடுத்தது .
லட்சியம் என்றும் வெல்லும் . ஒரு லட்சியத்தோடு தமிழுக்காக படம் எடுத்து இருக்கும் பாவண்ணன் வெல்வார் ” என்றார் .
அபிராமி ராமநாதன் தன் பேச்சில்,
” வணிகம் மூலம் உலகம் எங்கும் தமிழைக் கொண்டு போன ஒரு சமூகததில் பிறந்தவன் நான் . தமிழுக்காகவே படம் எடுத்து இருக்கும் பாவண்ணனுக்கு எனது வாழ்த்துகள் .
இந்தப் படம் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார் .
மீடியா என்ற ஆங்கில வார்த்தைக்கு ஊடகம் என்ற தமிழ்ச சொல் இருக்கிறது . இது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவருக்கு!
‘பதிவு செய்த படம்’ என்பதே சரி . செய்தப் படம் என்று ப் சேர்த்து எழுதுவது தவறு . இது பாவண்ணனுக்கு !
வாழ்க வளர்க …தமிழ் ! தமிழர் !