கயல் @ விமர்சனம்

kayal 1

கண்ணிழந்த ஒருவர் தான் பார்க்காத உலகத்தை தனது மகன் சலிக்க சலிக்க பார்க்க வேண்டும் என்பதையே தனது மகனுக்கு தலைமுறை செய்தியாக விட்டுவிட்டுப் போக,…

அந்த கிறிஸ்தவ இளைஞன் தனது நண்பனோடு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பனிமலை,  பாலைவனம்,  சமவெளி,  சதுப்புக்காடு என்று பார்த்துக் கொண்டு கிறிஸ்துமஸ் அன்று கன்யாகுமரி வந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு பயணிக்கிறான் . 

கன்யாகுமரியை நெருங்கும்போது ஆரல்வாய் மொழி என்ற ஊரில் , திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ள ஓடும் ஒரு ஜோடி தவற விடும் பையை அகஸ்மாத்தாக எடுத்துக் கொடுக்கிறான் . 

அதை வைத்து அவர்கள்தான் காதல் ஜோடியை ஊரை விட்டு அனுப்பி விட்டார்கள் என்று எண்ணும் அந்த பெண்ணின் ஜமீன்தார் குடும்பம் அந்த இளைஞனையும் அவனது நண்பனையும் கட்டி வைத்து உரிக்கிறது . 
நல்லதொரு பெண்ணை காதலித்து மணக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அந்த இளைஞனுக்கு அந்த சூழ்நிலையிலும் அங்கு இருக்கும் கயல் என்ற வேலைக்காரப் பெண் மீது காதல் வருகிறது . அதை எல்லோரும் கேட்கும்படியாக சொல்கிறான் . 
இந்நிலையில்ஓடிப் போன பெண் திரும்ப வர, இவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் . எனினும் ஜாதி வேற்றுமை காரணமாக நண்பர்கள் விரட்டப்பட , அங்கிருந்து வந்து விடுகின்றனர். 
ஆனால் அங்கே காதல் பற்றிக் கொண்ட கயல் இவர்களை தேடி கன்யாகுமரி வர, இருவரும் சந்திக்க முயல, அப்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி வர, அவர்கள் சேர்ந்த கதைதான் இந்தக் கயல் . 
தமிழகத்தில் நிஜமான சுனாமி வந்த அன்று படத்தின் கிளைமாக்ஸ் நிகழ்வது போல அமைக்கப்பட்டிருக்கும் படம் இது . 
முதல் பதினைந்து நிமிடம் வியக்க வைக்கிறது படம் . குறிப்பாக இயக்குனர் பிரபு சாலமனின்  சிந்தனைகளும் அவற்றை வெளிப்படுத்தும் வசனங்களும் அருமை . ஆனால் அதற்குப் பிறகு அலைகளுக்குள் பாதங்களுக்கு கீழே நழுவும் மணல் போல படம் நழுவுகிறது . 
பிரபு சாலமனின் இயக்க திறமையால் காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன . அனால் அந்தக் கதைப் போக்கிலும் காட்சி சொல்லும் விஷயங்களில் அழுத்தமோ சிறப்போ இல்லை . விளைவு ? கன்யாகுமரி கடலில் காகிதக் கப்பல் விட்ட கதையாகப்  போய்விட்டது படம் . 
நாயகன் காதலை சொன்னான் என்பதற்காகவும் அதை மற்றவர்கள் சிலாகிக்கிறார்கள் என்பதற்காகவும் கயலுக்கு காதல் வருவது என்பது, அரைவேக்காடு மீன் குழம்பு மாதிரி உறுத்துகிறது . 
tamil-cinema-kayal-movie-stills04
தவிர கயலின்  உருவம் மற்றும் உடையில் இருக்கும் சிறுமி தோற்றம் காதல் உணர்ச்சியை தரவில்லை. தலைப் பிரட்டையை  மீன் என்று சொல்லி கூறு கட்டி விற்பது போல ஒரு பிரம்மை . 
நாயகன் சந்திரன் நடிப்பு நன்றாக இருக்கிறது . ஆனந்தியும் நடிப்பில் பரவாயில்லை.
தேவராஜ் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் . வசனங்களை பேசும் விதம் நிதானமாக உணர்ந்து நடிப்பது என்று அசத்தி இருக்கிறார் தேவராஜ் .
ஜமீன்தாராக வரும் ஃபெரைராவும் அருமை 
இமானின் இசையில் பல பழைய பாடல்களின் சரணங்களின் மெட்டுகள் பின்னணி இசையாக ஆங்காங்கே உருமாறி வருகிறாது . 
கிராஃபிக்ஸ் புண்ணியத்தில் சுனாமி காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன . அதனால் கிளைமாக்ஸ் கொஞ்சம் ஈர்க்கிறது. 
நிஜ சுனாமியின் போது கன்யாகுமரியில் திருவள்ளுவர் சிலை மூழ்கவில்லை என்பது உண்மை நிகழ்வு . ஆனால் இந்தப் படத்தில் அதை மூழ்கடித்துக் காட்டுகிறார் பிரபு சாலமன் . திருவள்ளுவர சிலை மீது பிரபு சாலமனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை .  ( Oh god ! Forgive him . he did not know what he did )
கயல்…….. தொட்டி மீன் . 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →