நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி .
“செயல்பாட்டை நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் அணி என்று சொல்ல வேண்டாம் .
இனி நாங்கள் நடிகர் சங்கம்தான் . ஒரே அமைப்புதான் ” என்றார் .
அதையே வலியுறுத்திப் பேசினார் விஷால் . “தேர்தலுக்கு முன்தான் பாண்டவர் அணி என்பது எல்லாம் . இனி அப்படி எதுவும் இல்லை .
திரைத் துறையின் வேறு சில சங்கங்கள் தங்கள் தேர்தலுக்கு பாண்டவர் அணி என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, எங்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்வதாக அறிகிறோம் .
ஆனால் நாங்கள் அப்படி எந்த சினிமா சங்கத்தின் தேர்தலிலும் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை . காரணம் நாங்கள் மற்ற சங்கங்களின் தேர்தல் தனித் தன்மையை மதிக்கிறோம் . ” என்றார் .
நலிந்த நடிகர்களுக்கு, தான் அளித்துக் கொண்டிருக்கும் உதவித் தொகையை 500லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தருவதாக அறிவித்தார், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஐசரி கணேஷ் .
” உதவித் தொகை தேவைப்படும் உறுப்பினர்களை சரியாகக் கண்டறியும் வேலைக்கு எங்களது அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்களையும் பயன்படுத்தி, சரியான நபர்களை இனம் கண்டு உதவும் திட்டம் வைத்து இருக்கிறேன் ” என்றார் கார்த்தி .
எஸ் பி ஐ சினிமாஸ் ஒப்பந்தம் ரத்து என்று சரத்குமார் அறிவித்து இருப்பது பற்றி கேட்கப்பட்ட போது
“அவர் சொல்லி இருக்கிறார் . இன்னும் எங்களுக்கு முழு விவரமும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றிப் பேசுவோம் ” என்றார்கள்.
நடிகர் சங்கக் கணக்கு விவகாரம்தான் பிணக்காக இருக்கிறது .
நடிகர் சங்கத்தில் மூன்று கோடி ரூபாய் பணம் இருப்பதாக சரத் குமார் அறிவித்தஇருந்தார் . ஆனால் நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்கை அறிவித்த விஷால்,
“சங்க வங்கிக் கணக்கில் 27 லட்ச ரூபாய் இருக்கிறது. வைப்புக் கணக்கில் 87 லட்ச ரூபாய் இருக்கிறது . இருக்கிற மொத்த பணமே அவ்வளவுதான் ” என்றார் . (டேல்லி ஆகுமா ?)
சங்கத்தின் பெயரை தமிழ் நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுவது பற்றிய கேள்விக்கு ” புதிதாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று ஓர் அமைப்பு ஆரம்பிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை .
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன . அது பற்றி விவாதித்து சாத்தியம் என்றால் உரிய முடிவு எடுக்கப்படும் ” என்று பதில் வந்தது..
இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன.