இதைத் தவிர நடிகர் சங்கம் பற்றி பொது ஜனங்களுக்கு எதுவும் தெரியாது .
ஆனால் கடந்த நடிகர் சங்கத் தேர்தல் சமயத்தில் நடந்த அதகள அடிதடி ரணகள லக லக கூத்துகளுக்குப் பிறகு ,
நடிகர் சங்கம் ரொம்பதான் பிரபலமானது .
ஆரம்பத்தில் ”காவிரி பிரச்னை போன்ற பொதுப் பிரச்னைகளுக்கு எல்லாம் இனி நடிகர் சங்கம் குரல் கொடுக்காது” என்று ,
விஷால் சரியாகப் பேசுவது மாதிரியே ரொம்ப தப்பாகப் பேசினாலும், போகப் போக சுதாரித்துக் கொண்டார் .
வட்டி கட்டாத காரணத்தால் தாக்கப்பட்ட டிராக்டர் விவசாயிக்கு பண உதவி செய்வது வரை இப்போது நீள்கிறது விஷால் மற்றும் புதிய நடிகர் சங்க நிர்வாகத்தின் உதவிக் கை !
இதில் உச்சம் என்றால் வட மாவட்டங்களின் பெருவெள்ள காலத்தில் நடிகர் சங்கம் இறங்கி செய்த உதவியும் சேவையும்தான் .
ஒரு பக்கம் சித்தார்த் ஆர் ஜே பாலாஜி … இன்னொரு பக்கம் நடிகர சங்கம் சார்பில் விஷால் , கார்த்தி , கோவை சரளா ,உதயா, ரமணா , நந்தா லலித குமாரி, பொன்வண்ணன் உட்பட இன்னும் எத்தனையோ பேர்,
கொடுத்த உணவும் வழங்கிய தண்ணீரும் அடுத்த ஜென்மம் வரை அவர்களுக்கு காவலாக வரும் !
தான் திரையில் அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்ட முகங்கள் எல்லாம், ஒரு கால்சட்டை போட்டுக் கொண்டு தூங்காமல் சாப்பிடாமல் கலைந்த தலையோடு,
கையில் தண்ணீர் பாட்டிலோடும் உணவுப் பொட்டலத்தோடும் தன்னை நோக்கி வந்ததைப் பார்த்து,
நன்றி உணர்ச்சியில் சிகரம் தொட்ட வெகுஜனத் தமிழன் ரொம்பவே நெக்குருகிப் போய் விட்டான்.
விளைவு ?
ரஜினி , கமல், விஜய், அஜித், போன்ற பெருந்தலைகளைக் கொண்டாடுவதற்கும் அப்பாற்பட்டு அடுத்த கட்ட நடிகர்களையும் கூட தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்க ஆரம்பித்து விட்டான் .
இன்று நடிகர் சங்கம் மனதளவில் அவனுக்கு நெருக்கமான அமைப்பாகி விட்டது.
அதனால்தான் நடிகர் சங்க மைதானத்தை இப்போது ஒரு நாய்க்குட்டி கிராஸ் செய்தால், அது கூட அரைப்பக்க செய்தி ஆகிவிடுகிறது .
அந்த அளவு நடிகர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் புதிய அணியை மக்கள் நேசிக்கிறார்கள் .
இது போதாதா , அரசியல் கட்சிகளுக்கு ? அதுவும் எலெக்ஷன் நேரத்தில்….ஏகப்பட்ட கூட்டணிகள் உருவாகி இருக்கிற சூழ்நிலையில்….!
கட்சித் துண்டை சம்மந்தப்பட்ட அந்த நடிகர் சங்க உறுப்பினர்களின் கழுத்தில் போட்டு முறுக்கி , முகத்தை மூடி இழுத்து , தலையில் போட்டு தடவித் தடவி தனதாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியுமா ?
சமூக சேவை மூலம் பெயர் வாங்கி இருக்கும் மேற்படி நடிகர் சங்கப் புள்ளிகள் பலருக்கும் “எங்க கட்சியில் சேர்ந்துடுங்க .கோளாறு இல்லாம எம் எல் ஏ ஆக்கி கோட்டைக்கு அனுப்பிடறோம் ” என்று,
கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கிறதாம் .
”அய்யய்யோ .. எங்களுக்கு இதெல்லாம் வேணாங்க . எங்களுக்கு தொழில் சினிமா . சும்மா அப்பப்போ மன திருப்திக்காக ஜனங்களுக்கு எதோ ஜஸ்ட் பண்றோம் . எங்களை விட்டுருங்க”
— என்று நடிகர் சங்கப புள்ளிகள் சொன்னலும், யாரும் கேட்கிற மாதிரி இல்லையாம்
“தலைவர், செயலாளர், பொருளாளர கூட விட்டுடறோம் . அந்த பெருந்தலைகள் எல்லாம் இப்போதைக்கு வேணாம் . பின்னால பாத்துக்கறோம்.
அடுத்த நிலையில இருக்கிற நீங்க எல்லாம் வந்தா கூட போதும். ” என்று தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருக்கிறர்களாம் .
குறிப்பாக சங்கத்தில் இரண்டாம் நிலையில் இறங்கி வேலை செய்யும் இளம் நடிகர்களான உதயா, ரமணா , நந்தா போன்றோருக்குத்தான் தொடர்ந்து நெருக்குதலாம் .
அதிலும் தமிழகத்தின் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ள ஒரு பெரிய கட்சி சார்பில் தூது மேல் தூது வருகிறதாம் . ”உடனே சீட் . ஜெயிச்சா நீங்க வாங்கற ஓட்டை வச்சு அமைச்சர் பதவி கூட தர்றோம் .
என்ன சொல்றீங்க ? என்று கேட்டு கதிகலங்க வைக்கிறார்களாம் .
இந்த கோதாவில் இரண்டு தேசிய கட்சிகளும் குதித்து இருப்பதுதான் பெரிய காமெடி . (நீங்களும் அமைச்சர் பதவிதான் தருவீங்களா பையாஸ்?)
கூடிக் கூடிப் பேசும் இளம் நடிகர்கள் ” கொஞ்சம் அசந்தாலும் காலி பண்ணிடுவாங்கப்பா. அதனால் வேட்பாளர் பட்டியல் வரும்வரை நழுவுற மீனுல கழுவுற மீனா இருந்து தப்பிச்சுறுவோம்” என்று ,
பம்மிப் பம்மிப் பேசிக் கொண்டு இருக்கிறர்களாம் .
சும்மா சொல்லக் கூடாது ….
வயசு கம்மின்னாலும் பய புள்ளைக வெவரமாத்தான் இருக்குதுங்க !