எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய பொட்டலாகக் கிடைக்கிறது .
இந்த விவகாரம் தொடர்பாக சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து முஷ்டியை உயர்த்தி வந்த விஷால் அண்மையில் நடந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்திலும் மீண்டும் குரல் கொடுத்தார்
ராதாரவியும் நிலா அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வாங்கி இருக்கும் வாகை சந்திர சேகரும்பாலையாவுக்கு விழா எடுக்க வேண்டும் . எஸ் எஸ் ஆருக்கு விழா எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தபோது , சட்டென்று மைக்கைப் பிடித்த விஷால்
” நான் நடிகர் சங்கத் தலைவராக வர ஆசைப்படவில்லை. நான் யாருக்கும் போட்டியும் இல்லை. ஆனால் நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட இன்னும் மூன்று மாதத்தில் பூஜை போட வேண்டும்.அடுத்த வருடம் சொந்த கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் நான் எதிர்ப்புக் குரல் கொடுக்க தயங்க மாட்டேன் .
கட்டிடம் கட்டும் நிதிக்காக நான், ஆர்யா,கார்த்தி போன்றவர்கள் இலவசமாகவே ஒரு படம் நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறோம் . அதன் லாபம் அப்படியே சங்கக் கட்டிடம் கட்டும் பணிக்கு போகும். எங்களை தவிர மற்ற எல்லா நடிகர்களும் அந்தப் படத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் . அப்படி நடந்தால் இன்னும் அது நல்ல லாபம் காணும் முயற்சியாக மாறி நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு பயன்படும் ” என்று கூறி இருக்கிறார் .
அந்தப் படத்தில் எல்லா நடிகர்களையும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது . குறிப்பாக நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படமாக அது அமைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
சேர்ந்து நடிப்பார்களா? இல்லை தனித்தனி காட்சிகளில் தோன்றுவார்களா ? இல்லை ஜஸ்ட் தலையைக் காட்டுவார்களா . இல்லை ……
– என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும் .