நடிகர் ஜீவா, திரையுலகில் 21 வருடங்களை நிறைவு செய்கிறார். அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா நடந்தது. சுயாதீனக் கலைஞர்களுக்கான தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான இந்தத் தளம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி, ஊடகங்கள் முன்னிலையில் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.G , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் ஜீவா பேசும்பொழுது,”கடந்த ஒரு வருடமாக இந்த ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எங்கள் மியூசிக் லேபிள் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கலைஞரும் பிரகாசிக்கவும், அவர்களின் தனித்துவமான குரலை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் தகுதியானவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எங்கள் தளம் உருவாக்கம் முதல் உலகளாவிய அங்கீகாரம் வரை, அவர்களின் இசைக் கலைஞர் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட இசை பாணிகள் மற்றும் வகைகளைத் தழுவி உருவாக்குவதன் மூலம், இசைத் துறையின் செழுமைக்கும் அதிர்வுக்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்” என்று கூறி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கில்லா.கே என்ற சுயாதீன கலைஞரின் ‘புரிய வை’ பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுப் பேசும்பொழுது தனது மிகப்பெரிய சுயாதீன பாடலாக ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் அமைந்ததாகவும் தானும் ஒரு மியூசிக் லேபிள் நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் ஜீவா போன்றவர்கள் மியூசிக் லேபிள் நிறுவனம் தொடங்கி இருப்பது ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பதற்கு உதவிஆக இருக்கும் என்றும்
நடிகர் கார்த்தி ‘த’ பாப் சுயாதீன பாடலை வெளியிட்டு பேசும் பொழுது “நம் தமிழ் பெண்கள் சிறப்பாக பாடுகிறார்கள்,ஆடுகிறார்கள், அவர்களே இசைக்கோர்வை சேர்க்கிறார்கள் இது போன்ற வாய்ப்புகளை தேடும் திறமையாளர்களுக்கு புதிய முகவரி எனக்கு கிடைத்திருக்கிறது. இதன் பிறகு யாராவது இது போன்ற வாய்ப்பு தேடி வருபவர்களை ஜீவாவிடம் அறிமுகப்படுத்துவேன். ஜீவா ஒரு பள்ளி தோழரைப் போன்றவர்.தனது தந்தையை போலவே ஜீவாவிற்கும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் மனது உள்ளது. ‘ராம்’ திரைப்படத்திற்காக சைப்ரஸ் நாட்டின் சர்வதேச திரைப்பட விருதை நானும் இயக்குனர் அமீரும் ஜீவா சார்பில் பெற்று வந்தோம் “என்றார்
‘Folk Agenda’ ஆவணத் திரைப்படத்தை வெளியிட்டு பேசிய திரு.ஐசரி.கே.கணேஷ் அவர்கள் நடிகர் ஜீவா அவர்களிடம் செல்லமாக கோபித்துக் கொண்டார். இந்நிறுவனம் தொடங்குவது பற்றி தன்னிடம் தகவல் கொடுக்கவேயில்லை என்று. மேலும் இந்நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.இந்த டெஃப் ஃப்ராக்ஸ் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
விஜய் ஆண்டனி பேசும் பொழுது அவர் வெளியிட்ட’ஒவ்வொரு பெண்ணுக்கும்’ சுயாதீனப் பாடலில் பணிபுரிந்தவர்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தானும் ஒரு ‘டெஃப் ஃப்ராக்’தான் என்றும் யாருடைய பேச்சையும் பொருட்படுத்தாமல் இசையமைப்பாளராக,நடிகராக, இயக்குனராக அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி வந்ததாகவும் நமக்கென்று ஒரு நம்பிக்கை இருந்தால் நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்;இந்திய அளவில் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ நிறுவனம் பெரிய அளவில் வரவேண்டும் என்றும் வாழ்த்தினார்.
‘ஏக் லடுக்கா ஏக் லடுக்கி’ எனும் குறும்படத்தை வெளியிட்டு பேசிய ‘மிர்ச்சி சிவா “திறமை என்றும் ஒளித்து வைக்க முடியாது; அது என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும்; சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்மறையான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,நம் திறமை மீது நம்பிக்கை வைத்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.’டெஃப் ஃப்ராக்ஸ்’ உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
‘இனியன்’ நடித்துள்ள ‘Funtastic’ என்னும் இணைய தொடரின் முன்னோட்டத்தை வெளியிட்டு பேசிய கலையரசன் மற்றும் கண்ணதாசன் இருவரும் படக்குழுவினரை வாழ்த்தினர்.